99. அந்நிலையை இந்நிலையில் அடைதல்
மும்மை தரும் வினைகள் மூளாவாம் மூதறிவார்க்கு;
அம்மையும் இம்மையே யாம்.
பொருள் : வினைகள் இம்மை, அம்மை, மறுமை என்னும் மூவகைப் பயனையும் தருவன. அவ்வினைகள் உயர்ந்த ஞானம் உடையவரிடத்தில் மூண்டு வளர்தல் இல்லை. அதனால் அவர்க்கு இவ்வுடம்பு நீங்கிய பின் எய்தும் பேரின்ப நுகர்ச்சியாகிய பரமுத்தி நிலை இவ்வுடம்பு உள்ள இப்பொழுதே உண்டாவதாகும்.
சொற்பொருள் :
மும்மை - உடம்போடு இவ்வுலகில் வாழும் நிலையாகிய இம்மை, இறந்த பின் சுவர்க்கம், நரகம் ஆகிய உலகங்களிற் செல்லும் நிலையாகிய அம்மை, மீள இந்நிலத்திற் பிறக்கும் நிலையாகிய மறுமை ஆகிய மூவகைப் பயனையும்
தரும் - நம் போல் வார்க்குத் தரக்கூடிய
வினைகள் - வினைகள்
மூதறிவார்க்கு - உயர்ந்த ஞானம் உடையவரிடத்தில்
மூளா - வளரமாட்டா
(அதனால்)
அம்மையும் - அவர்களுக்கு உடம்பு நீங்கிய பின் எய்தும் பேரின்ப நிலையாகிய பரமுத்தி நிலை
இம்மையே - உடம்பு <உள்ள இப்பொழுதே
ஆம் - உண்டாகும்.
விளக்கம் :
முகந்து வந்த வினை தம் பயனைத் தந்து முடிவெய்தும் வரையில் இவ்வுடம்போடு இவ்வுலகில் வாழும் நிலை இம்மை எனப்படும். இறந்த பின் வேறுடல் கொண்டு சொர்க்கம் நரகம் ஆகிய உலகங்களில் சென்று, வினைக்கேற்றபடி அங்குள்ள இன்ப துன்பங்களை அனுபவிக்கும் நிலை அம்மை எனப்படும். அவ்வாறு அனுபவித்த பின் எஞ்சியுள்ள வினைக்கேற்ப மீளவும் இந்நிலத்தில் வந்து பிறக்கும் நிலை மறுமை எனப்படும்.
துறக்கப் படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு
இறப்பன்; இறந்தால் இருவிசும்பு ஏறுவன்; ஏறி வந்து
பிறப்பன்; பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே (4:113:8)
என்பதில் இம்மை, அம்மை, மறுமை ஆகிய மூன்றும் ஒருவாறு கூறப்பட்டுள்ளமை காணலாம். இம் மூவகைப் பயனையும் தருவனவாகிய வினைகள் உடம்பின் மேல் பற்றுடையார்க்கே மூளும்; அவருணர்வையே தாக்கும். சீவன் முத்தராகிய சிவஞானிகளுக்கு உடலின் கண் பற்று இன்மையால் வினைகள் மூள்வதில்லை. அவருணர்வை வேறுபடுத்தவதில்லை; அவர் நுகரும் சிவானந்த நுகர்ச்சிக்கும் தடையில்லை. அது பற்றியே அம்மையும் இம்மையே யாம் என்றார் ஆசிரியர்.
அம்மை என்பதற்கு வேறு உலகங்களிற் செல்லும் நிலை என்று மேலே பொருள் கூறினோம். அதுவே அச் சொல்லு<க்குரிய நேரான பொருள். ஆயினும் அம்மையும் இம்மையே யாம் என்ற தொடரில் அம்மை என்பது வேறு உலகங்களில் செல்லு<ம் நிலையைக் குறிக்காமல் பரமுத்தி நிலையைக் குறிக்கும் வகையில் ஆளப்பட்டுள்ளது. இம்மை என்பது சீவன் முத்தி நிலையைக் குறிப்பதாகும். சீவன்முத்தி நிலையும் பரமுத்தி நிலையும் ஒன்றேயாம் என்பது அத் தொடரின் கருத்தாகும். பரமுத்தி என்பது உடம்பை விட்டு இறைவனோடு கலந்து முத்தியின்பத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் நிலையாகும். சீவன் முத்தி என்பது உடம்பு உள்ள போதே முத்தியின்பத்தை நுகரும் நிலையாகும். பரமுத்தியில் உடம்பு இல்லை; சீவன் முத்தியில் உடம்பு உண்டு. அவ்வளவே வேறுபாடு. பேரின்ப நுகர்ச்சியின் தன்மையில் இவ்விரண்டிற்கும் வேறுபாடு என்பது அறவே இல்லை. இதனால் பரமுத்தியை அடைந்தோர் உடம்பு நீங்கிப் பெறும் இன்பத்தைச் சீவன் முத்தர் உடம்போடு நின்றே பெறுகின்றனர் என அறியலாம். சீவன் முத்தர்க்குப் பிராரத்தவினை உள்ள வரையில் உடம்பு இருக்கும். பிராரத்தவினை முடிந்தால், உடம்பு வீழ்ந்து விடும். உடம்பின் வீழ்ச்சி, மேலும் வினையுடைய <உலகர்க்கு இறப்பு எனப்படும். வினையில்லாத சீவன் முத்தர்க்கு வீடுபேறு அல்லது பரமுத்தி என்று சொல்லப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக