8. கலந்து நிற்பினும் வேறாய் நிற்பவன்
எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்குமவன் தானே தனி.
பொருள் : காய்ச்சிய நீரில் கலந்து நிற்கும் வெப்பம் போல இறைவன் எல்லா வுலகங்களிலும் எல்லா வுயிர்களிலும் ஒன்றாய்க் கலந்து நிற்கிறான். அதே நேரத்தில் அவன் அவற்றிற்கு வேறாய்த் தனித்தும் நிற்கிறான்.
சொற்பொருள் :
அவன் - அவ்விறைவன்
எங்கும் - எல்லா இடங்களிலும்
எவையும் - அவ்விடங்களில் உள்ள சித்தும் சடமும் ஆகிய எல்லாப் பொருள்களிலும்
நீர் உறு எரிபோல் - காய்ச்சிய நீரில் பொருந்திய வெப்பம் போல்
ஏகம் தங்கும் - ஒன்றாய்க் கலந்து நிற்பான்
தான்தனி - ஆயினும் அவன் பொருள் தன்மையால் வேறாகியே நிற்பான்.
விளக்கம் :
எரியுறு நீர் :
நீர் வேறு, வெப்பம் வேறு. வேறாகிய இவ்விரண்டும் சேர்ந்து நிற்கின்றன. வெப்பமானது நீரில் பொருந்தி அதனோடு ஒன்றாய்க் கலந்து நிற்கிறது. பார்ப்பதற்கு நீர் ஒன்றே உள்ளது என்று சொல்<லும்படியான நிலையே அங்கே உள்ளது. ஆனால், நீரைத் தொட்டால் அது சுடுகிறது. ஆதலால் வெப்பம் நீருக்கு வேறாய் அங்கே அறியப்படுகிறது. எனவே வெப்பம் நீரோடு ஒன்றாய் நின்றாலும் அதன் சுடும் தன்மை தனியே புலப்படுவதால் அது நீருக்கு வேறாகியே நிற்கிறது என்பது தெளிவாகும். இனி, இவ்வுவமையைப் பொருளோடு பொருத்திக் காண்போம். இறைவன் உலகும் உயிரும் ஆகிய எல்லாவற்றோடும் ஒன்றாய்க் கலந்து நிற்கிறான். <உலகப் பொருள்களைப் பார்க்கும் பொழுது அதனோடு கலந்திருக்கும் இறைவனது இருப்புச் சிறிதும் புலப்படுவதில்லை. அவ்வாறே <உயிர்களாகிய நம்மிடத்தில் இறைவன் பொருந்தியிருக்கிறான் என்பதும் நமக்குச் சிறிதும் புலப்படுவதில்லை. இங்ஙனம் தனது இருப்பைச் சிறிதும் காட்டாமல் உலகமே உள்ளது என்று சொல்லும் படியாகவும், உயிர் ஒன்றே உள்ளது என்று சொல்லும்படியாகவும் உலகோடும் உயிரோடும் ஒற்றுமைப்பட்டு நிற்கிறான் இறைவன். அப்படி ஒன்றுபட்டு நின்றாலும் இறைவன் தனது தன்மையால் அவற்றிற்கு வேறாகியே நிற்பான். காய்ச்சிய நீரில் வெப்பம் ஒன்றாயும் வேறாயும் நிற்றலைப் போன்றது இது.
தானே தனி :
இறைவன் சடமும் சித்தும் ஆகிய உலகு உயிர்களோடு கலந்து ஒன்றாய் நிற்பான் எனில், அவ்வுலகுயிர்கள் எய்தும் மாற்றங்களை அவனும் அடைவானோ? என்ற வினா எழுகிறது. அவன் உலகோடும் உயிர்களோடும் ஒன்றாய் நின்றாலும், நீரில் கலந்து நிற்கின்ற வெப்பம் போலப் பொருள் தன்மையால் அவற்றின் வேறாயும் நிற்பான் ஆதலாலே அவற்றினது மாற்றங்கள் அவனைப் பற்றுவதில்லை என்பதே அதற்கு விடையாகும். வெந்நீரில் உண்கலம் முதலியவற்றைக் கழுவுவர். கழுவப்படுகிற பொருளின் மாசுகள் அந்த நீரைப் பற்றுமே தவிர அந்த நீரில் உள்ள வெப்பத்தைப் பற்றுவதில்லை. அந்த நீர்தான் மாசு அடையுமே தவிர அதிலுள்ள வெப்பம் மாசு அடைவதில்லை. அந்த வெப்பம் தன் தன்மையில் மாறாமல் இருக்கிறது. அதைப்போல இறைவன் உலகோடு பொருந்தி நின்றாலும் உலகக் குற்றங்களால் பற்றப்படாது, தன் இயல்பில் திரியாது, என்றும் ஒரு தன்மையனாய் நிற்கின்றான். இதுபற்றியே அவன் செம்பொருள் எனப்படுகின்றான்.
இறைவன் இயல்பாகவே பாசத்திற்படாத தூய தன்மையன் என்பதையும், உலகப் பொருளில் தோய்வின்றி நிற்பவன் என்பதையும் வலியுறுத்தவே தானேதனி என்றார் ஆசிரியர். இக்கருத்தமைந்த திருவாசகத் தொடர் ஒன்றை இங்கே மேற்கோள் காட்டி விளக்குவது பொருத்தமாயிருக்கும். திருவம்மானையில் சேர்ந்தறியாக் கையானை என்று வருகிறது. சிவபெருமான் வேறொருவரைத் தொழுதறியாத கைகளை உடையவன் என்று அதற்குப் பொருள் உரைப்பர் சிலர். அவ்வுரை பொருந்தாது. அது சிறந்த பொருளும் ஆகாது. சேர்ந்தறியாக் கையானை என்பதன் பின் எங்கும் செறிந்தானை என்பது உள்ளது. இவ்விரு தொடர்களையும் இணைத்து நோக்கிப் பின் வருமாறு பொருள் காணுதல் வேண்டும். இறைவன் எல்லாப் பொருளிலும் கலந்து எங்கும் செறிந்திருக்கிறான். ஆயினும் அப் பொருள்களின் தன்மையை அவன் சாரமாட்டான். எதிலும் தோய்வின்றி நிற்பான் அவன். அதுபற்றியே, பிற பொருள்களின் தன்மை சேர்ந்தறியாத கையான் என்றார் மணிவாசகர். கை என்பதற்கு ஒழுக்கம் என்பது பொருள். இப்படி நுட்பமாய்ப் பொருள் கண்டு கூறுவார்மகாவித்துவான் அருணை வடிவேலு முதலியார் அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக