வியாழன், 2 நவம்பர், 2017

89. வாசியிடை நிற்கை

89. வாசியிடை நிற்கை
ஆசின் ந வா நாப்பண் அடையாது அருளினால்
வா சி இடை நிற்கை வழக்கு.

பொருள் : திரோதானத்தைக் குறிப்பதாகிய நகாரத்திற்கும் அருளைக் குறிப்பதாகிய வகாரத்திற்கும் இடையே ஆன்ம எழுத்தாகிய யகாரம் நில்லாமல், அவ்வகாரத்திற்கும் சிவத்தைக் குறிப்பதாகிய சிகாரத்திற்கும் இடையில் நிற்றலே முத்தி முறைமையாகும்.
சொற்பொருள் :
ஆசின் - ஆணவ மலத்தின் வாசனை காரணமாக
ந - திரோதானத்தைக் குறிப்பதாகிய நகாரத்திற்கும்
வா - அருளைக் குறிப்பதாகிய வகாரத்திற்கும்
நாப்பண் - இடையில்
அடையாது - (ஆன்ம எழுத்தாகிய யகாரம்) நில்லாமல்
அருளினால் - அருளின் துணையினால்
வா - அவ்வருளைக் குறிப்பதாகிய வகாரத்திற்கும்
சி - சிவத்தைக் குறிப்பதாகிய சிகாரத்திற்கும்
இடை - இடையில்
நிற்கை - நிற்றலே
வழக்கு - முத்தி முறைமையாகும்.

விளக்கம் :
விலக்குதல் : சிவாய நம எனத் திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து ஓதும் பொழுது ஆன்ம எழுத்தாகிய யகாரம் நகாரத்திற்கும் வகாரத்திற்கும் இடையே நிற்கிறது. அது வேண்டா என இங்கு விலக்கப்பட்டது. அவ்வாறு விலக்குவதற்கான காரணம் அறியத்தக்கது.
விலக்குதற்குக் காரணம் :
நகாரம் சகல நிலையைக் குறிக்கும் என்பதும், வகாரம் அருள் நிலையைக் குறிக்கும் என்பதும் நாமறிந்தது. சகல நிலை என்பது பாச ஞானம் விளங்கும் நிலையாகும். அருள்நிலை என்பது பதி ஞானம் விளங்கும் நிலையாகும். சகல நிலை, அருள்நிலை என்னும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்டது பசு ஞான நிலையாகும். அஃதாவது, பசுவாகிய தன்னையே பெரும் பொருளாகக் கருதி நான் முதல் என உணர்வதும், நான் சிவனுக்குச் சமம் என உணர்வதும் ஆகிய நிலையே பசு ஞான நிலையாகும். இவ்வாறு உணர்வது உண்மையுணர்வு ஆகாது. இது பதி ஞானத்தை உணர்வதற்கு முன்னே தோன்றுகிற ஓர் இடைப்பட்ட அனுபவ நிலையாகும். இப்பசு ஞானம் நீக்குதற்குரிய நிலையாதலின் யகாரம் ந வா நாப்பண் அடைய வேண்டா என விலக்கப்பட்டது.
ஆணவ மலத்தின் வாசனை :
ஞான நெறியிற் செல்லு<ங் காலத்தில் உயிர் கருவி கரணங்களைத் தன்னின் வேறாகக் கண்டு அவற்றால் வரும் பாச ஞானத்தினின்று நீங்கினா<லும், ஆணவ மலத்தின் வாசனை காரணமாகப் பதி ஞானமாகிய திருவருளை உணராது நிற்கும். அம்மல வாசனை உயிருக்கு நான் என்னும் செருக்கினை உண்டாக்கி மேற்கூறியவாறு நான்முதல், நான்சிவ சமம் என்னும் பசு ஞான நிலைகளை அடைவிக்கும். இதனால், ந வா நாப்பண் அடைதல் என்பது பசு ஞான நிலை என்பதும், அந்நிலையை அடைதற்குக் காரணமாக இருப்பது ஆணவ மலத்தின் வாசனை என்பதும் விளங்கும். ஆணவ மலத்தை ஆசு என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கமுடையவர் நம் ஆசிரியர். இங்கு, ஆணவ மலத்தின் வாசனையை ஆசு எனக் குறிப்பிட்டார். ஆசின் என்பதற்கு ஆணவ மலத்தின் வாசனை காரணமாக என்பது பொருளாகும்.
முத்தி பஞ்சாக்கரம் :
இனி, இந்தப் பசு ஞான நிலை நீங்கி, முற்றிலும் திருவருள் வயப்பட்டு அடங்கி, அருள் நிலைக்கும் இன்புறு நிலைக்கும் இடையில் நிற்றலே முத்தி முறைமையாகும். இவ்வாறு அனுபவத்தில் நிற்கும் முறையையே வா சி இடை நிற்கை வழக்கு என ஓதும் முறையாகக் கூறினார் ஆசிரியர். யகாரத்தை வா, சி இவற்றின் இடையே நிற்க வைத்து உச்சரித்தல் வழக்கம் எனக் கூறப்பட்டது. இதனால், நகார மகாரங்கள் நீங்கி நிற்கும் சிவாய என்னும் மூன்றெழுத்தே உச்சரித்தற் குரியது என்பது விளங்கும் இதனைச் சிவாய சிவாய எனத் திரும்பத் திரும்பக் கணிக்கும் போது யகாரம் வா, சி இவற்றிற்கு இடை நிற்பதாக ஆகின்றது. எனவே சிவாய என்னும் மூன்றெழுத்தே பாசம் நீங்கிய முத்தி பஞ்சாக்கரம் ஆகும். இதனை அதிசூக்கும பஞ்சாக்கரம் என்பர். இவ்வாறு இச்செய்யுளில், சிவாய நம எனச் சிகாரம் முதலாக ஓதினால் யகாரம் நகார வகாரங்களுக்கு இடையே நிற்கும் ஆதலால் அவ்வாறு ஓதுவதும் முத்தி முறைமை ஆகாது என விலக்கி, வாசி இவற்றிற்கு இடை நிற்க ஓதுதலே முத்தி பஞ்சாக்கரம் என்பது உணர்த்தப்பட்டது. இம்முத்தி பஞ்சாக்கரம் குருமுகமாக உபதேச முறையால் உணர்தற்கு உரியது.
முரண்பாடு இல்லை :
இங்கு ஓர் ஐயம் எழலாம். 87-ஆம் செய்யுளில் சிகார வகாரங்கள் முன் நிற்கும்படி சிவாய நம என ஓதி நின்றால் பிறவி நீங்கும் எனக் கூறிய ஆசிரியர் இங்கு வேறு விதமாக, வாசி இடை நிற்க ஓதி நின்றால் பிறவி நீங்கும். முத்தியாகும் என்பதுபடக் கூறியுள்ளாரே. இது முன்னுக்குப் பின் முரணாக அல்லவா உள்ளது என்று கேட்கலாம். பார்ப்பதற்கு முரண்பாடு போலத் தோன்றினாலு<ம் உண்மையில் இவ்விரண்டிற்கும் முரண்பாடு இல்லை என்பதை அறிதல் வேண்டும்.
ஒருவர் திருச்சியிலிருந்து நெல்லைக்குப் புறப்படுகிறார். தன்னுடைய வண்டியில் கிளம்புகிறார். நண்பர்களிடம் எப்படிப் போக வேண்டும் என்று கேட்கிறார். ஒரு நண்பர் மதுரை வழியாகப் போக வேண்டும் என்கிறார். மற்றொருவர் கோவில்பட்டி வழியாகப் போக வேண்டும் என்கிறார். இருவரும் இருவேறு விதமாகக் கூறினாலும் அவர்கள் கூறியதில் முரண்பாடு இல்லை. இருவர் கூற்றும் சரியே. ஆனால், ஒரு வேறுபாடு உண்டு. கோவில்பட்டி நெல்லைக்கு நேர் வழியாகிறது. மதுரை அங்ஙனம் ஆகாமல் கோவில்பட்டிக்குச் செலுத்தி அம்முறையில் வழியாகிறது. இதனைக் கருத்திற் கொண்டு பொருளுக்கு வருவோம். வாசியிடை நிற்க ஓதுதலே முத்தி பஞ்சாக்கரம் என மேலே அறிந்தோம். எனவே, அதுவே பிறவி நீங்குதற்கு நேரே வாயில் ஆகிறது என்பது தெளிவு. முன்னே (செ.87) சிவாய நம என ஓதி நின்றால் பவம் தீரும் என ஆசிரியர் கூறியது பிறவி நீங்குதற்கு அது நேர் வாயிலாகிறது என்னும் கருத்தினால் அன்று. மதுரை நெல்லைக்கு நேர்முறையில் வழியாகாமல் கோவில்பட்டிக்குச் செ<<லுத்து முகமாக வழியாதல் போல, சிவாய நம என்னும் ஐந்தெழுத்து பிறவி நீங்குதற்கு நேரே வாயில் ஆகாமல், அதுவே சிவாய என்னும் மூன்றெழுத்தாகி அம் முத்தி பஞ்சாக்கரம் வழியாகவே பிறவி நீங்குதற்குக் காரணமாகிறது என்பதே கருத்தாகும். இதனால், சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும் பவம் என்று முன்னே குறிப்பிட்டது வழி முறையால் வாயிலாதல் பற்றி என அறியலாம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...