வியாழன், 2 நவம்பர், 2017

90. நிலையால் பலவகைப்படுதல்

90. நிலையால் பலவகைப்படுதல்
எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து.

பொருள் : ஆன்மா பாசத்தினின்றும் உடனே நீங்க மாட்டாமல் படி முறையிலே சிறிது சிறிதாகவே நீங்கும் இயல்புடையது. அதனைக் கருதியே ஆகமங்கள் திருவைந்தெழுத்தினை ஒருபடியாகக் கூறாமல் இங்ஙனம் படிமுறைக்கு ஏற்பப் பல வகையாக அமைத்துக் கூறுகின்றன.
சொற்பொருள் :
இவன் - ஆன்மா
அகன்று நில்லா வகையை - பாசத்தினின்றும் உடனே நீங்க மாட்டாத தன்மையை
நினைந்து - கருதியே
எல்லா வகையும் - திருவைந்தெழுத்தினைப் பல வகையாகவும்
இயம்பும் - ஆகமங்கள் அமைத்துக் கூறும்.

விளக்கம் :
ஐந்தெழுத்தின் பல நிலைகள் :
ஐந்தெழுத்து தூலம், சூக்குமம், அதிசூக்குமம் எனவும், அவற்றினும் நுட்பமாய்க் காரணம், மகா காரணம் எனவும் பல வகையாய் நிற்கும் என்பதை அறிந்தோம்.
பற்றுக்களைவிட விரும்பாதவர் அஞ்செழுத்து மந்திரத்தைத் தூலமாக வைத்துக் கணிப்பர். பற்றுக்களை விட விரும்பினோர் அதனைச் சூக்குமமாக வைத்துக் கணிப்பர். ஞான குருவின் உபதேசத்தைப் பெற்றுப் பற்றுக்களை விட்டொழிக்க முயல்கின்றவர்கள் பாசம் நீங்குதற் பொருட்டுப் பாச எழுத்துக்கள் இரண்டையும் நீக்கி மற்றை மூன்றெழுத்தை மட்டுமே கணிப்பர். முத்தியை எய்தும் நிலையுடையவர் அம் மூன்றெழுத்துக்களுள் ஈற்றில் உள்ள ஆன்ம எழுத்தாகிய யகாரத்தையும் நீக்கி, எஞ்சிய இரண்டெழுத்துக்களை மட்டுமே மந்திரமாகக் கொண்டு தொடர்ந்து இடைவிடாது கணிப்பர். அப்பால், சி என்னும் ஓரெழுத்தாகிய மகாகாரண பஞ்சாக்கரக் கணிப்பினால் சிவானந்தத்தில் மூழ்கியிருக்கும் நிலை உண்டாகும்.
இவ்வாறு பாசப்பற்றில் அழுந்தியிருத்தல், பாச நிலையிலிருந்து சிறிது விடுபடுதல், பாசப்பற்று நீங்கித் திருவருள் நிலையைப் பெறுதல், திருவருள் நிலை வாய்க்கப் பெற்றும் நிட்டை கூடப் பெறாமை, நிட்டை கூடியும் அதிலிருந்து மீண்டு உலகினை நோக்கும் நிலை என அவரவர் நிற்கும் அனுபவ நிலைகள் பலவாய் இருத்தலின் அவ்வனுபவ நிலைகளுக்கு ஏற்ப அவரவர் ஓதுதற்குரிய ஐந்தெழுத்தின் நிலைகளும் பலவாயின என அறியலாம்.
சிறந்த சாதனம் :
ஞான நெறியில் ஐந்தெழுத்து சிறந்த சாதனமாய் அமைகிறது என்பது இதனால் விளங்கும். பந்தமாகிய கீழ்நிலையில் உள்ளவர் அதிலிருந்து நீங்கி வீடாகிய மேல்நிலையை அடைவதற்கும் அது சாதனம் ஆகின்றது. மேல் நிலையை எய்தினோர் பழைய பழக்கத்தால் மீளவும் உலகினை நோக்கிச் சென்று விழாதபடி காத்துக் கொள்வதற்கும் அது சாதனம் ஆகின்றது. மேல்நிலையை அடைந்த பின்னரும் கீழ்நிலைக்கு வருதல் உண்டோ என்று கேட்கலாம். அவ்வாறு நிகழ்தல் உண்டு என்பதைச் சில பெரியோர் வாழ்விலிருந்து அறிகிறோம். பலகாலம் தூய்மையான துறவு வாழ்க்கையை மேற் கொண்டவரும் சூழ்நிலை காரணமாக உலக இச்சைக்கு ஆட்பட்டுத் தமது தவ நெறியினின்றும் வழுவித் தவறு இழைத்து விடுவதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்? அதைத்தான் பழைய பழக்க வாசனை என்கிறார்கள். வேப்ப மரத்தில் வாழ்ந்த ஒரு புழு அதன் இலை, பூ, காய் முதலியவற்றையே தின்று பழக்கப்பட்டிருந்தது. அது தற்செயலாய் அருகில் வளர்ந்திருந்த கரும்பின் மேல் வீழ்ந்தது. அதனைப் பற்றிக்கொண்டது. அதனைச் சுவைத்தது. சில காலம் அந்த இன்சுவையை நுகர்ந்தது. காலமெல்லாம் அங்கேயே அது வாழ்ந்திருக்கலாம் அல்லவா? ஆனால், அவ்வாறு அது செய்யவில்லை. கசப்பான வேம்பினையே உண்டு பழகிய அந்த முன்னைப் பழக்கம் அதனை விட வில்லை. அப்பழக்க வாசனையால் அதற்கு வேம்பின் மேல் மீண்டும் விருப்பம் சென்றது. அதன் காரணமாக அது இனிய கரும்பினை விடுத்துத் தனது பழைய இடமாகிய வேப்ப மரத்திற்கே திரும்பியதாம்! அதுபோலப் பாச ஞானத்தை விட்டொழித்துப் பதி ஞானத்தைப் பெற்று அதனால் பதியை அடைந்து பேரின்பத்தை நுகர்ந்த பின்னரும் முன்னைப் பழக்க வாசனையால் உலகத்தை நோக்கும் விருப்பம் நிகழ்தல் கூடும். அந்நிலை நிகழாதவாறு நீக்குதற்கும் ஞான நிலையில் உறைத்து நிற்பதற்கும் ஐந்தெழுத்து இன்றியமையாத சாதனமாய் விளங்குகிறது. இக்கருத்துப் பற்றியே நம் ஆசிரியர் உமாபதிசிவம் இன்புறு நிலையைக் கூறி முடித்து, அதன்பின்னாக ஐந்தெழுத்தருள் நிலையாகிய இதனை வைத்தார் என்பது அறிதற்குரியது.
இன்னொரு பொருள் :
இவன் அகன்று நில்லா வகையை நினைந்து என்பதற்கு, ஆன்மா பாசத்தினின்றும் உடனே நீங்க மாட்டாத தன்மையை நினைந்து என்று பொருள் கூறினோம். இதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கூறலாம். ஆன்மாவாகிய இவன் திருவருளை நீங்கி நில்லாது, அதனை விடாது பற்றி நிற்றல் வேண்டி ஆகமங்கள் திருவைந்தெழுத்தினைப் பலவகையாக அமைத்துக் கூறும் என்று பொருள் கொள்வதும் பொருந்தும்.
பத்தாம் அதிகாரம்
அணைந்தோர் தன்மை
உயிர் சுத்த நிலையை எய்துதல் :
காலைப் பொழுதில் கீழ் வானில் எழுந்த கரிய மேகக் கூட்டம் கதிரவனை முற்றிலும் மறைத்து விடுகிறது. அதன் இருப்புச் சிறிதும் தோன்றாதவாறு செய்கிறது. அதன் பொன்னொளி சிறிதும் புலனாகவில்லை. பரிதி இருந்தும் விளங்காத நிலை அது. அப் பரிதியின் நிலையில் உயிர் முதலில் இருந்தது. ஆணவ மலமாகிய முகிற் படலத்தால் அது மறைக்கப்பட்டுத் தனது அறிவு இச்சை செயல்கள் சிறிதும் விளங்காமல், தானொரு பொருள் உண்டு என்ற உணர்வும் இல்லாமல், முழு இருளில் அழுந்திக் கிடந்தது. இது கேவல நிலை. கதிரவனை மறைத்திருந்த முகிற் கூட்டம் சிறிது கலைகிறது. இடைவெளி தோன்றுகிறது. அந்த இடைவெளியூடே கதிரவன் ஒளி மெல்ல எட்டிப் பார்க்கிறது. அந்நிலையில் கதிரவன் ஒளி மழுங்கியே காணப்படுகிறது. அது போன்றது சகல நிலை. இறைவன் உயிருக்கு உடம்பையும் கருவிகளையும் மாயையினின்றும் படைத்துக் கொடுக்க அவற்றோடு கூடிய உயிர் பிறந்தும், இறந்தும், உலகப் பயனாகிய இன்பத் துன்பங்களை நுகர்ந்தும் வருகிறது. இச் சகல நிலையில் ஆணவ இருள் சிறிது நீங்க உயிரின் அறிவு இச்சை செயல்கள் சிறிது விளங்கப் பெறுவது, முகிற் கூட்டம் சிறிது விலகிய போது கதிரவன் தனது ஒளி சிறிது விளங்கி நிற்கும் தன்மை போன்றது ஆதல் காணலாம். அப்பொழுது வேகமாகப் பெருங் காற்று வீசுகிறது. அது மேகக் கூட்டத்தை அடித்துத் துரத்துகிறது. முன்பு சிறிது விலகிய முகிற் கூட்டம் இப்பொழுது முற்றுமாக நீங்குகிறது. இது போன்றது சுத்தநிலை. உயிர் வினைகளை ஈட்டியும் நுகர்ந்தும் வருவதால் ஆணவ மலம் மெலிந்து தேய்வடைகிறது. உயிர் தவநெறியில் ஈடுபட்டு இருவினை யொப்பும் சத்தி நிபாதமும் எய்திய காலத்தில் இறைவன் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்த, அதனைக் கேட்டும் சிந்தித்தும் தெளிந்தும் மும்மலங்களும் வாசனையும் தோன்றாது நீங்கப் பெறுகிறது. அந்நிலையில் உயிரின் அறிவு இச்சை செயல்கள் முற்றும் விளங்கி நிற்பது, முகிற் கூட்டம் முற்றும் நீங்கிய பொழுது கதிரவன் தனது ஒளி எங்குமாக விளங்கி நிற்கும் தன்மை போன்றதாதல் காணலாம்.
இங்ஙனம் விளங்கிய தனது அறிவு இச்சை செயல்களால் உயிர் இறைவனையே அறிந்தும், அன்பு செய்தும், அவனது திருவடியின்பத்தில் திளைத்து நிற்கும். அவ்வின்பம் மேலும் மேலும் எல்லையின்றி விளைந்து கொண்டேயிருக்கும். அந்த ஆரா இன்பத்தில் ஆன்மா அழுந்தித் தன்னையும் மறந்திருக்கும். இதுவே நிட்டை நிலையாகும். இன்புறு நிலையாகிய அதிகாரத்தில் இதனை விளங்க அறிந்தோம்.
அணைந்தோர் - விளக்கம் :
நிட்டை கூடித் திருவடியின்பத்தில் திளைத்திருப்போர் இவ்வுலகில் வாழ்ந்தாலும், இவ்வுடம்போடு கூடியிருந்தா<லும், அவர் முத்தி பெற்றவரே. அவரைச் சீவன் முத்தர் என்று அழைப்பர். தமிழில், அணைந்தோர் என்பர். உடம்பு உள்ள போதே இறைவனது திருவடியை அணைந்தோர் ஆதலின் அவ்வாறு சொல்லப்படுவர். உடம்பை விட்டுப் போன பிறகு எந்த முத்தியின்பத்தை அடையலாமோ அந்தப் பேரின்பத்தை இந்த உடம்பில் இருக்கும்போதே பெற்றவர்கள் அவர்கள்.
பிறரிடமிருந்து வேறுபட்டு நிற்றல் :
சீவன் முத்தர் பார்ப்பதற்கு மற்றவர்களைப் போலத்தான் இருப்பர். ஆனாலும் அவருக்கும் பிறருக்கும் பெரிய வேறுபாடு உண்டு. ஓர் எடுத்துக் காட்டினால் இதனை விளக்கலாம். நெல்லை ஓரளவு சூடு ஏறும்படி வறுத்து எடுத்தால், அதற்கும் வறுக்காத நெல்லுக்கும் வேறுபாடு வெளியே தெரியாது. பார்வைக்கு இரண்டும் ஒன்று போலவே தோன்றும். ஆனாலும், வேறுபாடு இருக்கிறது அல்லவா? வறுத்த நெல் முளைக்காது; மற்றது முளைக்கும். அதுபோலச் சீவன் முத்தராய் உள்ளவர் பிறரைப் போல உண்டும், உடுத்தும், பூசுவன பூசியும், புனைவன புனைந்தும் வாழ்ந்தாலும் பிறரிடமிருந்து வேறுபட்டு நிற்பர். அவர் வினையினின்றும் நீங்கியவராதலின் இந்த உடம்பை விடுத்துச் சென்றால் வேறு உடம்பை எடுக்கமாட்டார். மீளப் பிறத்தல் என்பது அவர்க்கு இல்லை. ஏனையோரெல்லாம் இந்த உடம்பினின்றும் நீங்குவது மீண்டும் வேறு உடம்பை எடுப்பதற்குத் தான்; அடுத்த பிறவியில் இன்பதுன்பங்களை அடைவதற்குத்தான்.
உடம்பில் ஒட்டாமை:
சீவன் முத்தர் இந்த உடம்பில் இருந்தாலும் உடம்போடு ஒட்டுதல் இன்றி வாழ்வர். புளியங்காயில் மேலே உள்ள தோடும் உள்ளே உள்ள காயும் பிரிக்க முடியாதபடி இணைந்து ஒட்டியே இருக்கும். அதுவே பழமானால் தோடும் பழமும் தனித்தனியே பிரிந்து விடும். இரண்டுக்கும் ஒட்டுறவு இருக்காது. புளியம்பழம் தோட்டினுள் இருந்தாலும் அதனோடு தொடர்பு கொள்ளாதது போலச் சீவன் முத்தர் உடலில் பற்றுதல் இல்லாமல் வாழ்வர். இதுவரை கூறியவற்றால், முத்தியின்பத்தை இந்த உடம்போடு வாழும் போதே பெறலாம் என்பதும், அந்த நிலையே நிட்டை நிலை என்றும், சீவன் முத்தி நிலை என்றும் சொல்லப்படுகிறது என்பதும், அந்நிலையை அடைந்த சீவன் முத்தர் உடம்போடும் உலகியலோடும் ஒட்டாமல் பற்றுதல் இன்றி வாழ்வர் என்பதும் பெறப்படும்.
தூங்கிக் கண்டார் :
திருமூலர் இவரைத் தூங்கிக் கண்டார் என்று குறிப்பிடுவார். தூங்குதல் என்பது ஒன்றையும் அறியாத நிலையல்லவா? அந்நிலையில் எப்படிக் காண முடியும்? என்று எண்ணலாம். தூங்குதலும், காணுதலும் ஆகிய இரண்டையும் நம்மால் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. ஆனால், சீவன் முத்தரால் அது முடியும். அவர் கொள்வது ஞானத்தூக்கம் ஆயிற்றே. அவர் தம்மையும், தம்மைச் சார்ந்துள்ள உடம்பு, உலகம் என்பவற்றையும் அறிதலை ஒழிந்து, எல்லாம் மறந்து, தன் வசம் அழிந்து, சிவானந்தத்தில் தோய்ந்திருப்பர். ஆதலின் அவர் தூங்கியவர் ஆனார். அதேநேரத்தில் அவர் சிவத்தை இடைவிடாது உணர்ந்து நிற்றலின் கண்டவரும் ஆனார். இவ்வாறு இவ்விரு நிலைமையும் அவரிடத்து ஒருங்கு நிகழ்தல் பற்றி அவர்தம் நிலையைத் தூங்காமல் தூங்குதல் எனக் கூறுவர்.
தூங்காமல் தூங்கிச் சுகப்பெருமான் நின்நிறைவில்
நீங்காமல் நிற்கும் நிலை பெறவும் காண்பேனோ?

என்பது தாயுமானவரின் அனுபவ மொழி. உலகத்தார் பகல் முழுதும் வேலை செய்து உழைத்து இரவில் கருவி கரணங்கள் எல்லாம் அறிவு இன்றி ஒடுங்கிய நிலையில் துயில் கொள்வர். சீவன் முத்தரோ கருவி கரணங்கள் எல்லாம் அறிவோடு ஒடுங்கிய நிலையில் பேரின்பத்தில் அழுந்தி அறிதுயில் கொள்வர்.
சோம்பர் :
சீவன் முத்தராகிய ஞானியரைச் சோம்பர் என்ற சொல்லால் குறிப்பதும் உண்டு. சோம்பர் என்பவர் தாமத குணம் உடையவராய், எங்கும் செல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்து வீணே பொழுது போக்குபவர். இவ்வாறு சும்மாயிருப்பது அஞ்ஞான நிலை. இனி, ஞானிகளும் சும்மா யிருப்பர். அஃதாவது, யான் எனது என்னும் செருக்கு ஒழிந்து, மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றும் செயலற்று, மவுன நிலையடைந்து, இறைவனடி திருவடி நிறைவில் ஒடுங்கி இன்புற்றிருப்பர். இவ்வாறு சும்மாயிருப்பது ஞான நிலையாகும். செயலற்றிருத்தல் என்பது சோம்பருக்கும் உரியது. ஞானியருக்கும் உரியது. ஆயின், இவ்விருவர் நிலைகளும் தம்முள் ஒவ்வாதன என்பது மேற்கூறியவற்றால் விளங்கும். என்றாலும், சும்மாயிருத்தல் என்னும் சொல் ஒற்றுமை பற்றி, ஞானியர் சோம்பர் எனப்பட்டனர் என அறியலாம்.
மவுனம் :
சும்மாயிருக்கின்ற ஞானியராகிய சீவன் முத்தரை உலகர் அறியாமற் போதல் கூடும். எடுத்துக் காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். ஞானி ஒருவர் கோயிலுக்கு நாள்தோறும் வருவார்; வழக்கமாக ஓர் இடத்தில் அமர்வார்; யாருடனும் பேசமாட்டார்; எதுவும் கேட்க மாட்டார்; எப்பொழுதும் மவுனமாகவே இருப்பர். கோயிலிலிருந்து அவருக்கு ஒரு பட்டைச் சோறு நாள்தோறும் கொடுப்பது வழக்கம். அங்கிருந்த அதிகாரி மாறுதலாகிப் போனார். புதிய கோயிலதிகாரி வந்தார். அவர் கணக்குகளைப் பார்த்தபோது சும்மாயிருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை என்று எழுதியிருப்பதைக் கண்டார். பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்துக் கோபத்தோடு கேட்டார். சும்மா இருப்பவர்களுக்கு எதற்குச் சோறு? இன்று முதல் அந்தச் சாமியாருக்குக் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். அவர்கள் அந்த ஞானியின்மேல் மட்டில்லா மதிப்பு வைத்திருந்தனர். ஆதலால் அவர்களில் ஒருவர் அந்த அதிகாரியை அணுகி மெல்ல எடுத்துரைத்தார். சும்மாயிருப்பது என்பது எளிமையான காரியமன்று. முற்றுந்துறந்த ஞானிகளுக்குத்தான் அது முடியும். அவர் பெரிய ஞானி என்று கூறினார். அதற்கு அந்த அதிகாரி, சும்மா இருப்பது பெரிய காரியமா? என்னால் அப்படி இருக்க முடியும். நான் இன்று முழுதும் யாருடனும் பேசாமல் இருந்து காட்டுகிறேன் என்று வீறாப்பாய் பேசிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.
அங்கேதான் அவருக்குச் சோதனை காத்திருந்தது! அவர் வீட்டிற்குள் நுழையும்போதே அவரது மனைவி காய்கறி எல்லாம் தீர்ந்து விட்டது. கடைக்குப் போய் ஏதாவது வாங்கி வருகிறீர்களா? என்று கேட்டாள். அவர் வாயைத் திறக்கவில்லை. பேசாமல் உள்ளே போனார். அவரது மவுன விரதம் அந்த அம்மாவுக்கு எப்படித் தெரியும்? அவளுக்குச் சற்று எரிச்சல் உண்டாயிற்று. நான் பேசிக் கொண்டேயிருக்கிறேன். நீங்கள் பேசாமல் போகிறீர்களே. உங்களுக்கு என்ன ஆயிற்று? என்றாள். அதற்கும் அவர் பேசவில்லை. இன்றைக்குச் சமையல் செய்யாமல் இருந்து விடுகிறேன். எனக்கு என்ன? என்று கூறியபடி உள்ளே போய் விட்டாள். இது என்ன தொல்லை என்று நினைத்துக் கொண்டே மவுனமாக இருந்தார். அன்றைக்குப் பார்த்து ஒருவர் மேல் ஒருவராக அவரைத் தேடி ஆட்கள் வந்த வண்ணமாய் இருந்தனர். அவர் கைகளாலும், முகத்தாலும் என்னென்னவோ சைகை செய்தார். வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர் ஏன் இப்படி ஊமையாகி விட்டார்? முனி, கருப்பு ஏதாவது இவரை அடித்திருக்குமோ? என்று கவலைப்பட்டார்கள் சிலர்; இவர் இப்படியே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று உள்ளூர ஆசைப்பட்டவர்களும் உண்டு! வந்தவர்களையெல்லாம் வாய் பேசாது வழியனுப்பி வைத்தார். அவரது பொறுமை எல்லாம் போயிற்று. தனது மவுனத்தைக் குலைக்க இந்த உலகமே தனது எதிராகச் சதி செய்வதாக அவருக்குத் தோன்றியது.
மாலை ஐந்து மணியிருக்கும். அப்பொழுது இடி போல ஒரு செய்தி வந்து அவரைத் தாக்கியது. பள்ளிக்குப் போன அவரது ஒரே பிள்ளை இன்னும் வீடு திரும்பவில்லை. ஐயோ, பையனுக்கு என்ன ஆயிற்று? எங்கே போனானோ? என்று அலறித் துடித்தாள் அவரது மனைவி. அவரால் இப்பொழுது சும்மாயிருக்க முடியவில்லை. அவரை யறியாமல் அவரது வாய் பேசியது. வேலையாட்களைக் கூவி அழைத்தார். நீ அந்தப் பக்கமாகப் போய்ப் பார்; நீ இந்த வழியாகச் சென்று தேடு என்று அவர்களுக்கு ஆணையிட்டார்; அவரும் தேடப் புறப்பட்டார். அந்த நேரத்தில் அவரது மகன் தனது நண்பர்களோடு வந்து சேர்ந்தான். அவர்கள் வகுப்பிற்குச் செல்லாமல் திரைப்படம் பார்த்துவிட்டு இவ்வளவு நேரம் கழித்து வந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. மவுனமாக இருப்பது எவ்வளவு சிரமமான செயல் என்பதை அனுபவமாகத் தெரிந்து கொண்டார் அந்த அதிகாரி. மறுநாள் அவர் கோயிலுக்குச் சென்றார். சென்றவுடன் ஆணை பிறப்பித்தார். சும்மாயிருக்கும் சாமியாருக்கு இரண்டு பட்டைச்சோறு என்பதுதான் அந்த ஆணை. மோனம் என்பது அனுபவத்திற்கு அறிகுறி. இன்ப அனுபவம் தலைப்படும்போது மோனம் தலைப்படும். இன்ப அனுபவம் ஞானத்தின் நிறைநிலையில் வரும். இதுபற்றியே மோனம் என்பது ஞான வரம்பு என்றார் அவ்வையார்.
சிவனருளாகக் கருதுவர் :
சீவன் முத்தர்களுக்கு உடம்பு உள்ள அளவும் பிராரத்த வினை இருக்கும். பிராரத்த வினை காரணமாக இன்பத் துன்பங்கள் தோன்றினால் அவைகளை இறைவனது அருளாகவே கருதுவர். அவ்வாறு கருதிய ஒருவரைக் குறிப்பிடுவோம். அவர் ஒரு சிவயோகி. ஒருநாள் அவர் காவிரிக் கரை வழியே செல்லும்போது ஓரிடத்தில் பசுக் கூட்டங்கள் வருந்திப் புலம்புவதையும், அவற்றை மேய்க்கும் இடையன் இறந்து கிடப்பதையும் கண்டார். அப்பசுக்களின் துயரை ஒழிக்கத் திருவுளம் கொண்டார். தம்முடைய உடலை ஓரிடத்தில் காவல் செய்து வைத்துத் தம் உயிரை மூலன் என்ற பெயரை உடைய அந்த இடையனது உடலுட் புகுத்தித் திருமூலராய் எழுந்தார். மாலையில் பசுக்கள் தாமாக ஊரை நோக்கிச் சென்றன. திருமூலரும் சாத்தனூர் என்ற அவ்வூரை யடைந்து, இடையனது மனைவியின் அழைப்பை மறுத்து, அங்கிருந்த பொது மடத்தில் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்தார். பின் அந்நிலையினின்றும் எழுந்து தமது முன்னைய உடலைத் தேடினார். அதனைக் காணவில்லை. பாதுகாப்பில் வைத்த தம் உடம்பு காணாமற் போனதையும், தாம் மூலன் உடம்பிலே இருக்க நேர்ந்ததையும் குறித்து அவர் வருந்தவில்லை. அதனைச் சிவனருளாகவே கருதி ஏற்றார் என்பது நினைக்கத்தக்கது.
மூவகை வினையும் நீங்குதல் :
ஞானிகளாகிய சீவன் முத்தர் வினைப் பயனாகிய இன்பத் துன்பங்களை அவனது அருளாகவே கருதி, இன்பத்தில் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் இல்லாமல் பற்றற்ற நிலையில் நுகர்ந்து கழிப்பர். பற்றுச் செய்யாமையால் பிராரத்த வினை அவர்தம் உணர்வைத் தாக்காமல் உடலையே தாக்கி ஒழியும். அஃதாவது, உடம்பில் நோய், புண், முதலியவற்றைத் தோற்றுவித்து ஒழியும். அவர் உடம்பு நாமல்ல என்று தெளிந்தவர் ஆதலால் உடம்பிற்கு வருகின்ற ஊறுபாடு அவர் தம் உணர்வைத் தாக்குவதில்லை. இன்பம் வரும்போது அதனை விரும்பி நிலை நிறுத்திக் கொள்ள அவர் முயல்வதில்லை. துன்பம் வரும்போது அதனை விரைவில் போக்க முயல்வதும் இல்லை. அதனால் அவர்களுக்கு ஆகாமிய வினை உண்டாகாது என அறியலாம். சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்னும் மூவகை வினைகள் நாம் அறிந்தவை. அவைகளுள் சஞ்சிதம் முன்னரே ஞானாசிரியர் செய்த நிருவாண தீக்கையால் எரிக்கப்பட்டு ஒழிந்து விட்டது. இப்பிறப்பிற்கு என்று முகந்து கொண்டு வந்த பிராரத்தம் உள்ளது. அதனை அனுபவித்துத் தீர வேண்டும். அவர் அதனை மேற் கூறியவாறு பற்றுதல் இன்றி நுகர்வர். ஆதலால் அஃது அவரது உணர்வைத் தாக்காது உடலளவாய் வந்து நீங்கும். தன்முனைப்பின்றி எல்லாம் அவனருள் என்று அவர் அனுபவித்த லால் ஆகாமியமும் உண்டாகாது. இவ்வாறு மூன்று வகையான வினைகளும் நீங்குவதால் அவர்க்கு இனிப் பிறவியில்லை என்பது சொல்லாமலே விளங்கும். அதனால் இவ்வுடம்பு நீங்கியதும் அவர் அடைவது வீடு பேறேயாகும்.
உயிர்களிடத்தில் கருணை :
ஞானிகள் எல்லோரையும் சமமாகப் பார்ப்பர். மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் செல்வக் கடவுள் தொண்டர்கள் அவர்கள். மூச்சுக் காற்று நான் செல்வரது உடலுக்குள்தான் சென்று வருவேன். ஏழையின் உடலுக்குள் புகமாட்டேன் என்று சொல்லாது. தண்ணீர் நான் பசுவின் தாகத்தை மட்டும் தீர்ப்பேன்; புலியின் தாகத்தை தீர்க்க மாட்டேன் என்று சொல்லாது. முழுநிலவு பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைவருக்கும் குளிர்ச்சியை அளிக்கும். இவற்றைப் போல ஞானிகள் எல்லா உயிர்களிடத்தும் வேறுபாடின்றிக் கருணை காட்டுவார்கள். பள்ளங்களைப் பார்த்ததும் அவற்றின் குறையை முற்றிலும் நிறைவு செய்த பின்பே முன்னேறிச் செல்கின்ற வெள்ளத்தைப் போல் அவர்கள் துன்புற்றவர்களின் தளர்ச்சியைப் போக்கிய பின்பே மேலே செல்வார்கள். திருமருகல் என்ற ஊரில் ஒரு வணிகப் பெண் தான் மணக்க விரும்பியவனோடு வந்து தங்கியிருந்தாள். வந்த இடத்தில் பாம்பு தீண்டி அவன் இறந்தான். அப்பெண் ஆதரவற்ற நிலையில் அழுது அரற்றினாள். அவளது அழுகுரல் ஞான சம்பந்தரின் திருச்செவியில் சேர்ந்தது. இது அவள் விதி என்று அவர் சொல்லிச் செல்லவில்லை. அவள் மீது கருணை கொண்டு, அவன் உயிர் பெற்று எழுமாறு செய்தார். இருவரும் மணம் செய்து கொள்ளவும் வழி செய்தார். ஓர் ஊரில் எல்லாருமே சுர நோயால் வாடுவதைக் கண்டு இரங்கி அப்பிணியை அவ்வூரை விட்டே ஓட்டினார். இவ்வாறு பிறர் துன்பந் தீர்க்க முந்துவது ஞானிகளின் இயல்பாகும். எங்கும் நிறைந்திருக்கும் வானம் ஒன்றிலும் பற்றில்லாது இருப்பது போன்று, உலகரோடு ஒட்டி வாழ்ந்தும் உலகில் அவர்கட்கு எவ்வகைப் பற்றும் இல்லாதிருக்கும்.
திருவடி நிழலில் அகலாது நிற்றல் :
எப்பொழுதும் தம்மைச் சிவத்தில் ஆழ்த்தி வைத்திருக்கும் அவர்கள் அதனின் நீங்கிப் புறம் போதார். புறம் போக நேருமாயின், அப்பொழுது அவர் செய்யும் செயல்கள் திருக்கோயில்களுக்குச் சென்று வணங்குதல், அடியார்களுடன் கூடி இறைவனைப் பற்றிப் பேசி இன்புறுதல் போன்ற வீட்டு நெறிச் செயல்களாகவே யிருக்கும். சுருங்கக் கூறினால், அவர் உலகிற்கு வழிகாட்டியாய் வாழ்வர். உலகில் வாழ்ந்தாலும் இறைவன் திருவடி நிழலில் அகலாது நிற்பர்.
அதிகாரத் தொகுப்பு :
இனி, இவ்வதிகாரத்தின் வழி நின்று சீவன் முத்தராகிய அணைந்தோர் தன்மையினைத் தொகுத்துக் கூறுவோம். சிவப்பேறு பெற்ற சீவன் முத்தர் திருவருளில் அடங்கி நின்று பேரின்பத்தைத் துய்ப்பர். இன்பத்துள் ஆழ்ந்தமையால் அவருக்கு எந்த நினைவும் எழாது. நினைவின் வழிப்பட்டதே சொல். நினைவு எழாதாகவே சொல் எழாமையும் பெறப்படும். எனவே அவர் பேச்சடங்கி மோன நிலை பூண்டிருப்பர் என்பது விளங்கும். எல்லையின்றிப் பெருகும் சிவானந்தத்தைத் துய்த்தவர் ஆதலின் வேறு எந்த இன்பமும் அவருக்கு ஒரு பொருட்டாகத் தோன்றாது. இறைவனைப் போலத் தாமும் ஐந்தொழில் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புவதில்லை. காரணக் கடவுளர் பதவிகளைப் பெற வேண்டும் என்றும் கருதார். பொறி வழியாக நுகரும் உலக இன்பங்களில் சிறிதும் இச்சை கொள்ளார்.
எல்லாவற்றையும் அறியும் அறிவாகிய சிவனது அறிவைப் பெற்றவராயினும் அவ்வறிவைக் கொண்டு வேறு பொருள்களை அறியார்; சிவம் ஒன்றையே உணர்ந்து நிற்பார். ஆமை நிலத்தில் இயங்கும் பொழுது தனக்குத் தீங்கு வருகிறது என்று <உணர்ந்தால் அப்பொழுதே தனது தலையையும் நான்கு கால்களையும் தனக்குப் பாதுகாப்பாக உள்ள ஓட்டினுள்ளே அடக்கிக் கொண்டு அசைவற்றுக் கிடக்கும். அதுபோலத் தமது மனம் உலக வாசனை காரணமாக உலக சுகங்களில் செல்வதாக உணர்ந்தால், அக்கணமே அவ்வுணர்வை அடக்கிச் சிவஞானத்துள் ஒடுங்கி உலகை நினையாதிருப்பர். அணைந்தோர் சீவத்தன்மை நீங்கிச் சிவமாம் தன்மை பெற்றவர். சிவனது தன்மை வியாபக நிலை. சிவனை அணைந்தோரும் சிவனைப் போலவே எங்குமாய் நிற்பர். எந்த இடமும் சிவனையின்றி இல்லை. அவ்வாறே சீவன் முத்தரையின்றியும் எந்த இடமும் இல்லை. சிவம் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பதால் சிவஞானிகள் எவ்விடத்திலும் எப்பொருளிலும் சிவத்தையே கண்டு நிற்பர். உலகம் அவர்க்குச் சிவமாய்த் தோன்றும். ஆதலால் எப்பொருளையும் அவர் வெறுத்தல் இல்லை. மாந்தர் தன் முனைப்போடு பொருந்திப் பற்றோடு செய்யும் செயல்களுக்குப் பயன் இன்ப துன்பமாகிய உலக போகம் ஆகும். அணைந்தோர் தன் முனைப்பின்றி அருள் வழியிலே நின்று பற்றின்றிச் செய்யும் செயல்களுக்குப் பயன் பர போகமாகிய வரப்பில் இன்பமே யாகும். அணைந்தோர் உடம்பு முகந்து வந்த வினையை நுகர்ந்து கழிப்பர். அவர் பற்றின்றி நுகர்வதனால் ஆகாமிய வினை தோன்ற வழியில்லை. எப்பொழுதாயினும் பிராரத்த நுகர்ச்சியில் விருப்பு வெறுப்புத் தோன்றி அது காரணமாக ஆகாமியம் தோன்றுமாயின் அது வளராதவாறு திருவருளே அதனைச் சுட்டழிக்கும். இவ்வாறு அவர்க்கு வினை நீங்குதலால் இனிப் பிறப்பு என்பது அவர்க்கு இல்லை. சீவன் முத்தர் இவ்வுடம்பு உள்ள போதே அது நீங்கிய பின் பெறுதற்குரிய பரமுத்தி யின்பத்தைப் பெற்றவராவர். அவர்கள் ஏனைய ஆன்மாக்கள் படும் துயருக்கு மிகவும் இரங்குவர். அவர்கள் மேல் பரிவு கொண்டு நூல் வாயிலாகவும் உபதேச வாயிலாகவும் அவர்களுக்கு உய்யும் நெறியை உணர்த்துவர். இனி, இக்கருத்துக்களை விளக்கமாகக் காண்போம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...