87. பிறவி நீங்க
சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம்; இதுநீ ஓதும் படி.
பொருள் : திருவைந்தெழுத்தில் சிகாரம் வகாரம் என்னும் இரண்டும் முதலில் வருமாறு உச்சரித்தல் கூடுமாயின் பிறவி நீங்கும். பிறவிக்கு அஞ்சுகின்ற நீ ஓத வேண்டிய முறைமை இதுவாகும்.
சொற்பொருள் :
சிவ- சி,வ என்னும் இரண்டெழுத்துக்களும்
முதலே ஆமாறு - முன் நிற்கும் முறையில்
சேருமேல் - (திருவைந்தெழுத்தை ஓதுதல்) கூடுமாயின்
பவம் தீரும் - பிறவி நீங்கும்
நீ - (பிறவியிலிருந்து விடுபட விரும்புகின்ற) நீ
ஓதும்படி - ஓத வேண்டிய முறை
இது - இதுவாகும்
விளக்கம் :
திருவாய் பொலியச் சிவாய நம என்று நீறணிந்தேன் எனத் திருநாவுக்கரசரும், நானேயோ தவஞ்செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன் என மணிவாசகரும் உரைத்துள்ளனர்.
சிவாய நம என்று சிந்தித் திருப்பார்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை
என்கிறார் ஒளவையார். அவர் அபாயம் என்று குறிப்பிடுவது ஊழின் தாக்குதல் ஆகும். ஊழ்வினை துன்பத்தைத் தரும் போது அதனைச் சிவாய நம என்று சொல்லி ஏற்க வேண்டும். அங்ஙனம் அதனை அவனருள் என்று கொண்டு அனுபவித்தால் அத்துன்பம் உடலளவாய்க் கழியுமேயன்றி உயிரைத் தாக்காது என்பது கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக