வியாழன், 2 நவம்பர், 2017

86. உலகப்பற்று இரங்கத்தக்கது

86. உலகப்பற்று இரங்கத்தக்கது
ஆராதி ஆதாரம்; அந்தோ! அது மீண்டு
பாராது மேலோதும் பற்று.
பொருள் : விசேடதீக்கை பெற்ற மாணவனே, நீ எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் உள்ள சிவத்தை வழிபடு. (அஃதாவது, சிகாரத்தை முதலாக வைத்துத் திருவைந்தெழுத்தை ஓது). அவ்வாறு சிகாரம் முதலாக மீளுமாறு ஓதாமல் மேலும் மேலும் நகாரத்தை முற்படக் கொண்டு ஓதுவதற்கு ஏதுவாகிய உலகப்பற்று, அந்தோ! மிகவும் இரங்கத்தக்கது.
சொற்பொருள் :
ஆதாரம் - (விசேட தீக்கை பெற்றுக் கிரியை நெறியில் நிற்கும் மாணவனே அனைத்துப் பொருளுக்கும் ஆதாரமாய் உள்ள சிவத்தை)
ஆராதி - நீ வழிபடுவாயாக. (அஃதாவது, சிகாரத்தை முற்பட வைத்துத் திருவைந்தெழுத்தை ஓதுக.)
அது - சிகாரம்
மீண்டு - முதலெழுத்தாக மீளுமாறு வைத்து ஓதுதலை
பாராது - கருதாமல்
மேல் - முன் போலவே
ஓதும் - நகாரத்தை முற்பட வைத்து ஓதுதற்குக் காரணமாகிய
பற்று - உலகப் பற்று
அந்தோ - ஐயோ! (பெரிதும் இரங்கத் தக்கது.)

விளக்கம் :
(மாணவனே) ஆதாரம் ஆராதி; அது (முதலாக) மீளப் பாராது மேல் ஓதும் பற்று, அந்தோ; (இரங்கத்தக்கது) என வேண்டும் சொற்களை வருவித்து அமைத்துக்கொண்டால் பொருள் நன்கு விளங்கும். உலகப் பற்றை விட விரும்பாதவர் முதலில் சமய தீக்கை பெற்றுத் திருவைந்தெழுத்தை நகாரம் முதலாகக் கொண்டு உச்சரித்தற்கு உரியர். அங்ஙனம் ஓதி வரவர, உலகப் பற்றும் ஓரளவு நீங்கி வரும். அந்நிலையில் அவர் விசேட தீக்கை பெற்றுத் திருவைந் தெழுத்தைச் சிகாரம் முதலாகக் கொண்டு உச்சரித்தற்கு உரியர். சிகாரம் முதலாகிய திருவைந்தெழுத்து பற்றினை விட விரும்புவோர் ஓதுதற்குரியது. இத்தகைய விடேசதீக்கை பெற்றும் சிகாரம் முதலாக ஓதும் முறைமையை நோக்காமல், நிட்காமியமாக வழிபாட்டினைச் செய்யாமல், உலகப் பயனில் பற்று நீங்காமல் நிற்கும் மாணவரை நோக்கியே இச்செய்யுளைக் கூறுகின்றார் ஆசிரியர். நம என்னும் எழுத்துக்கள் ஊன நடனத்தைக் குறிப்பன எனப் பார்த்தோம். நகாரம் முதலாக ஓதி ஊன நடனத்தின் வழி நின்றால் அது பிறவி நீங்குதற்கு வழியாகாது. சிகாரம் முதலாக ஓதுதலே ஞான நடனத்தின் வழி நிற்றலாகும். சிகாரம் முதலாக ஓத முயலாமல், உலகியலில் பற்று நீங்காமல் இருப்பது இரங்கத்தக்கது என்கிறார் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...