வியாழன், 2 நவம்பர், 2017

85. ஊன நடனத்தால் பாசநிலை நீங்காமை

85. ஊன நடனத்தால் பாசநிலை நீங்காமை
மால்ஆர் திரோதம் மலம் முதலா மாறுமோ
மேலா சி மீளா விடின்.

பொருள் : மயக்கம் பொருந்திய திரோதான சத்தியைக் குறிக்கின்ற நகாரமும், ஆணவ மலத்தைக் குறிக்கின்ற மகாரமும் முதலாய் நிற்க, சிவத்தைக் குறிக்கின்ற சிகாரம் முதலாகும் படி மீளுதல் இல்லையென்றால் பாசநிலை நீங்குமோ? நீங்காது.
சொற்பொருள் :
(திருவைந்தெழுத்தை ஓதும் முறைமையில்)
சி - சிவத்தைக் குறிக்கின்ற சிகாரம்
மேலா - முதலாய் நிற்கும் வகையில்
மீளாவிடின் - முறை மாறாமல் உள்ளதாயின்,
மால்ஆர் திரோதம், மலம் - மயக்கம் நிறைந்த திரோதான சத்தியைக் குறிக்கின்ற நகாரமும், ஆணவ மலத்தைக் குறிக்கின்ற மகாரமும்
முதலா - முதலாய் நிற்பதால்
மாறுமோ - மலம் முதலிய பாசங்கள் நீங்குமோ? அவை நீங்காவாம்.

விளக்கம் :
நமசிவாய எனப் பாச எழுத்துக்களாகிய நம முற்பட்டு நிற்க ஓதிவரின் பாசநிலை நீங்காது. முற்பட்டு நிற்பதே தலைமைப் பொருளாகும். அதன்பின் நிற்பது அடிமைப் பொருளாகும். அம்முறையில் பாசங்களே முற்பட்டு நிற்க, உயிர் அவற்றின் பின் நின்றால் உயிர் பாசங்களுக்கு அடிமைப்பட்டதாய் அவற்றினின்றும் மீள இயலாது. ஆதலால் பாசங்களின் வழிப்பட்ட இந்நிலை மாற வேண்டும். சிகாரத்தை முதலாகக் கொண்டு சிவாய நம என ஓதிவரின், சிவமும் அருளும் முன் நிற்க, உயிர் அவற்றின் பின் நிற்பதாய் அமையும். இங்ஙனம் சிவமும் அருளும் தலைமைப் பொருளாய் முன் நிற்க, உயிர் அவற்றிற்கு அடிமைப்பட்டு அவற்றின் வழி நின்று பாசம் நீங்கப் பெறும். இதனை வலியுறுத்தி,
நம் முதலா ஓதில் அருள் நாடாது; நாடும் அருள்
சிம் முதலா ஓதுநீ சென்று

என உண்மை விளக்கம் கூறுவதும் அறியத்தக்கது.
இதனால் ஊன நடனத்தின் வழிநிற்பின் பாசம் நீங்காது என்பதும், ஞான நடனத்தின் வழி நிற்றல் வேண்டும் என்பதும் கூறப்பட்டது. இச்செய்யுளால், பஞ்சாக்கரத்தின் வகைமையை யறியலாம். நகாரம் முதலாக அமைவது தூல பஞ்சாக்கரம் எனப்படும். சிகாரம் முதலாக அமைவது சூக்கும பஞ்சாக்கரம் எனப்படும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...