83. இரு வகை நடனம்
ஊன நடனம் ஒருபால்; ஒரு பாலா
ஞான நடம்; தான் நடுவே நாடு.
பொருள் : சிவாய நம என்னும் திருவைந்தெழுத்தில் ஊன நடனத்தைக் குறிக்கும் பொருள்கள் ஒரு பக்கம் சேர்ந்திருக்க, ஞான நடனத்தைச் செய்யும் பொருள்கள் மற்றொரு பக்கம் சேர்ந்திருக்க, அந்நடனங்களால் பயன் அடைகின்ற உயிர் அவ்விரு பொருள்களுக்கும் இடையே நிற்கும். மாணவனே, இதனை ஆராய்ந்து உணர்வாயாக.
சொற்பொருள் :
ஊன நடனம் - உயிருக்கு அறியாமையைச் செய்யும் பொருள்
ஒருபால் - ஒரு பக்கம் சேர்ந்திருக்க
ஞானநடம் - அறிவைத் தரும் பொருள்கள்
ஒருபாலா - மற்றொரு பக்கம் சேர்ந்திருக்க
தான் - அந்நடனங்களால் பயன் அடைகின்ற உயிர்
நடுவே - அவ்விரு வகைக்கும் இடையே நிற்கும்
நாடு - மாணவனே, இதனை ஆராய்ந்து உணர்வாயாக.
விளக்கம் :
நடனம் :
இறைவனது செயலை நடனம் என்றும், கூத்து என்றும் குறிப்பிடுவர். அனைத்துப் பொருள்களும் தத்தம் நிலைக்கேற்பச் செயற்படுமாறு இறைவனே அவற்றை இயக்கி வருகின்றான். உலகை இயக்குகிற செயல் அவனுக்கு விளையாட்டுப் போல அத்துணை எளிதாய் இருத்தலின் அதனைக் குறிக்கும் வகையில் அவனது செயலை நடனம் என்றனர். நடனம் என்பதற்கு விளையாட்டு என்பது பொருள்.
பெத்தமும், முத்தியும் இறைவன் செய்யும் செயலேயாதலின் அவையிரண்டும் நடனம் எனப்படும். பெத்தத்தில், ஆணவ மலத்தோடு மாயை கன்மம் என்னும் இரு மலங்களையும் சேர்த்து உயிர்கள் இம் மும் மலங்களிற் பட்டுச் சுழலு<மாறு செலு<த்துகின்றான். மும்மலப் பிணிப்பினால் உயிர்கள் அறிவு மயங்கித் தம்மையும், தலைவனாகிய இறைவனையும் அறியாது ஞானத்தில் வேட்கையின்றி உலக வாழ்வில் அழுந்தி நிற்கும். இத்தகைய பெத்தம் ஊன நடனம் எனப்படுகிறது. ஊனம் என்பதற்கு ஞானம் இல்லாமை என்பது பொருளாகும். ஊன நடனத்திற்பட்ட உயிர்கள் படிப்படியே அறிவு முதிர்ச்சி பெற்றுத் தம்மையும் தலைவனையும் உணரும் பக்குவத்தை எய்தும். அப்படிப்பட்ட உயிர்களுக்கு ஞானத்தைத் தந்து, மலம் மாயை கன்மங்களை நீக்கி இன்பப் பேற்றை வழங்குவான். இச் செயல் ஞான நடனம் எனப்படுகிறது. இதன் பொருள் வெளிப்படை. சிவனது சத்தி ஊன நடனத்தில் திரோதான சத்தியாயும், ஞான நடனத்தில் அருட்சத்தியாயும் செயற்படும். சிவசத்தி ஒன்றே யாயினும் செயல் பற்றி இவ்வாறு இரண்டாக வகுத்துக் கூறப்படுகிறது. திரோதான சத்தி மறைத்தலையும், அருட்சத்தி அருளலையும் செய்யும்.
ஊன நடனம் :
திருவைந்தெழுத்தில் ஊன நடனத்தைக் குறிப்பவை நம என்னும் எழுத்துக்களாகும். அவற்றால் குறிக்கப்படுபவை திரோதான சத்தியும், ஆணவ மலமும் ஆகும். ம என்பது ஆணவ மலத்தால் நிகழும் அறியாமையைக் குறிக்கும். அறியாமை நிலை கேவலம் எனப்படும். ந என்பது திரோதான சத்தி மாயை கன்மங்களைக் கூட்டி உயிரினது அறிவை விளக்கி வரும் நிலையைக் குறிக்கும். இதனால் உண்டாவது சிற்றறிவாகும். இவ்வாறு சிற்றறிவு விளங்கும் நிலை சகலம் எனப்படும். உயிர் அறிவு அறியாமைகளாகிய சகல கேவலங்களை மாறி மாறி அடைந்து வருகிறது. நமது உணர்வில் அவ்வப்போது நிகழ்கின்ற நினைப்பும், மறப்பும் சகல கேவலங்களேயாகும். புறவுலகில் வருகின்ற பகல் இரவு போல நமது உணர்வில் மாறி மாறி வருகின்ற பகலும் இரவுமாக இந்த அறிவு அறியாமைகளைக் குறிப்பிடுவர். இவ்வாறு உயிர் ஆணவத்தில் அழுந்தி அறியாமையுடைய தாயும், மாயை கன்மங்களில் அழுந்திச் சிற்றறிவுடைய தாயும் உலக வாழ்வில் உழன்று வரும். இங்ஙனம் உழலும்படியாகச் செய்வது இறைவனது திரோதான சத்தி. இங்ஙனம் செய்யும் செயலை ஊன நடனம் என ஆசிரியர் குறிக்கின்றார். பெத்த நிலையில் உள்ள உயிர்களெல்லாம் இந்த ஊன நடனத்திற் பட்டுச் செல்வனவேயாம்.
ஞான நடனம் :
திருவைந்தெழுத்தில் ஞான நடனத்தைக் குறிப்பவை சி, வா என்னும் எழுத்துக்களாகும். அவற்றால் குறிக்கப்படுபவை சிவமும் அருட்சத்தியும் ஆகும். சி என்பது சிவத்தில் அழுந்தி நிற்கும் இன்புறு நிலையைக் குறிக்கும். வா என்பது அதற்கு முன்னே அருளை உணர்ந்து அதில் அழுந்தி நிற்கும் அருள் நிலையைக் குறிக்கும். முத்தி நிலையில் உயிர் சகல கேவலங்களிற் செல்லாமல், அஃதாவது அறிவு அறியாமைகளை மாறி மாறி அடையாமல், ஒரு நிலைப்பட்ட மெய்யுணர்வினை உடையதாய், சிகார வகாரங்களால் குறிக்கப்படும் ஆனந்தநிலை, அருள்நிலை என்பவற்றில் நிற்கும். இவ்வாறு கேவல சகலங்களாகிய இரவு பகலை நீக்கி உயிரை இரவு பகலற்ற இடமாகிய திருவருளில் உய்த்து, அருள்நிலை ஆனந்த நிலை என்பவற்றில் நிலை பெறுத்தும் இறைவனது செயலை ஞான நடனம் என ஆசிரியர் குறிக்கின்றார்.
தான் நடுவே நாடு :
மேற்கூறியவற்றால், உயிர்களாகிய நமக்கு இரண்டு வகையான சார்புகள் உள்ளன என்பது புலனாகும். ஒன்று, ஞான நடனத்தால் குறிக்கப்படுகின்ற இறைவன் என்ற சார்பு. பிறிதொன்று, ஊன நடனத்தால் குறிக்கப்படும் உலகம் என்ற சார்பு. இவற்றுள் இறைவனாகிய சார்பே நமக்கு நிலையானது. அன்று தொட்டு இன்று வரையிலும், இனிமேலு<ம் என்றென்றும் இருப்பது. நம்மைவிட்டு நீங்காதது. உலகச் சார்போ நிலையில்லாதது; இடையில் வந்தது ஆகலின் நம்மை விட்டு இடையிலேயே நீங்கக் கூடியது.
அறியாமை காரணமாக நாம் இவ்வுலகச் சார்பையே நமக்குரிய உண்மையான சார்பு என்று தவறாக எண்ணுகிறோம். உலகியல் மீது மேலும் மேலும் பற்றுக் கொள்கிறோம்; உலகச் சார்பினால் விளையும் துன்ப நிலையை உணராதிருக்கிறோம். இறைவன் நடுவு நிலைமையன்; நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே என்று பாடினார் ஓர் அருளாளர். உயிர்களாகிய நாமும் ஒரு வகையில் நடு நிலைமை உடையவர்களே! எவ்வாறெனில், ஒரு பால் அறிவே வடிவான இறைவன். மற்றொருபால் அறிவில்லாத சடவுலகம். இவ்விரண்டிற்கும் நடுப்பட்டவர்கள் நாம். அவ்வகையில் நாம் நடுநிலைமையாளர்தாமே! தான் நடுவே நாடு என்று ஆசிரியர் குறிப்பிட்டது இதனையேயாம். தான்-சீவன்; அல்லது ஆன்மா.
திருவெழுத்து அஞ்சில் ஆன்மா
திரோதம் மாசுஅருள் சிவம் சூழ்
தர, நடு நின்றது
எனச் சிவப்பிரகாசச் செய்யுளிலும் ஆன்மா நடுநின்றமையை ஆசிரியர் குறித்திருத்தல் காணலாம்.
ஒரு குறிப்பு :
இறைவனது செயலை நாதன் நடம் எனப் பெயரிட்டு முதன் முதல் விளக்கிய பெருமை மனவாசகங் கடந்தார் என்ற ஆசிரியரைச் சாரும். உண்மை விளக்கம் என்ற அவரது நூலில் இறைவனது நடனத்தை அழகிய முறையில் விளக்கிக் காட்டும் செய்யுட்கள் பல உள்ளன. ஆயின் அவர் ஊன நடனம், ஞான நடனம் என்ற குறியீடுகளை எடுத்துப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. அவருக்குப் பின் வந்த உமாபதி சிவமே இறைவனது செயலை
ஊன நடனம் என்றும், ஞான நடனம் என்றும் முதன் முறையாகக் குறிப்பிட்டவராவர். அவர் இக்குறியீடுகளை அமைத்துக் கொள்வதற்குப் பின்வரும் திருவாசகப்பாடலே அடி நிலையாய் அமைந்ததோ என்று எண்ண வேண்டியுள்ளது.
ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான்
உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்
துடைய விச்சையே (திருச்சதகம் 95)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக