வியாழன், 2 நவம்பர், 2017

82. ஐந்தெழுத்தில் நிற்கும் பொருள்கள்

82. ஐந்தெழுத்தில் நிற்கும் பொருள்கள்
இறை சத்தி பாசம் எழில் மாயை ஆவி
உற நிற்கும் ஓங்காரத் துள்

பொருள் : ஓங்காரத்தின் பரிணாமம் ஆகிய ஐந்தெழுத்தில் இறையும், அதன் சத்தியும், தளையாகிய ஆணவமும், எழில் மிக்க மாயையும், ஆன்மாவும் என்பவை பொருளாகப் பொருந்தி நிற்கும்.
சொற்பொருள் :
(சி,வா,ய,ந,ம என்னும் ஐந்தெழுத்தில்)
இறை - இறைவன்
சத்தி - அவனது ஆற்றல்
பாசம் - தளையாகிய ஆணவமலம்
எழில் மாயை - எழில் மிக்க மாயை
ஆவி - உயிர் என்பவை
உற நிற்கும் - பொருளாகப் பொருந்தி நிற்கும்
ஓங்காரத்துள் - ஓம் என்னும் பிரணவத்திலும் அவ்வாறேயாம்.

விளக்கம் :
சிவாய நம என்னும் ஐந்தெழுத்தில் அவ்வெழுத்துக்களின் பொருள்கள் இவை என்பதைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். இவருக்குக் காலத்தால் முற்பட்டதாகிய உண்மை விளக்கம் என்னும் நூல்
சிவன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந்தும்
அவன்எழுத்து அஞ்சின் அடைவாம்

எனக் கூறிற்று. எனவே, சிகாரம் சிவன்; வகாரம் அருட்சத்தி; யகாரம் ஆன்மா; நகாரம் திரோதான சத்தி; மகாரம் ஆணவமலம் என்றதாயிற்று. இவ்வாறு அந்நூல் சிவாய நம என்னும் ஐந்தெழுத்தில் அவ்வெழுத்துக்கள் நின்ற வரிசை முறையிலேயே அவற்றின் பொருளை வரிசைப்படுத்திக் கூறியுள்ளமை காணலாம். ஆயின் நம் ஆசிரியர் உமாபதிசிவம் அதுபோல வரிசை முறையில் பொருள் கூறவில்லை என்பது காணத்தக்கது. முன்னே உள்ள சிகார வகாரங்களின் பொருளை இறைசத்தி என வரிசையாகக் குறிப்பிட்டவர், அடுத்து அம் முறையை மாற்றி, அவ்வைந்தெழுத்தைப் பின்னிருந்து நோக்கிப் பொருள் கூறலுறுகிறார். பின்னிருந்து நோக்கினால் ம, ந, ய என வரும். அவற்றின் பொருளையே பாசம், எழில் மாயை, ஆவி எனக் குறிப்பிடுகிறார். எனவே மகாரம் பாசம்; நகாரம் மாயை; யகாரம் ஆன்மா என்றதாயிற்று. இவ்வாறு ஆசிரியர் மாற்றி வைத்துப் பொருள் கூறக் காரணம் என்ன என்று கேட்கலாம். ஆசிரியர் அவ்வாறு கூறியதற்கு ஒரு நோக்கம் உண்டு. அடுத்த செய்யுளில் ஊன நடனமும், ஞான நடனமும் ஐந்தெழுத்தில் அமைந்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.
சி, வா என்பது ஞான நடனம்
ம, ந என்பது ஊன நடனம்
ய என்பது இவ்விரண்டிற்கும் நடுப்பட்டது.

இவ்வாறு அடுத்த செய்யுளில் கூறுவதற்கு ஏற்ப இம்முதற் செய்யுளில் பொருள்களை இறை, சத்தி, பாசம், எழில் மாயை, ஆவி என அமைத்துக் கொண்டார். இவ்வமைப்பை நோக்கினால், ஞான நடனம் எனப்பட்ட இறையையும் சத்தியையும் முதலில் கூறினார் என்பதும், அடுத்து ஊன நடனம் எனப்பட்ட பாசத்தையும் மாயையும் கூறினார் என்பதும், பின்னர் அவற்றின் இடைப்பட்டதாகிய உயிரைக் கூறினார் என்பதும் புலனாகும். சி, வா, ய, ந, ம என்பவற்றில் ஆசிரியர் கொண்ட இப்பொருள மைப்புக்கு நேரே இடமில்லை என்பது தெளிவு. ஆகவே, முதலில் நிற்கும் சி, வா என்பவற்றை அப்படியே முறை நிரல் நிறையாகக் கொண்டு இறையும் சத்தியும் எனப் பொருள் கூறினார். எஞ்சிய எழுத்துக்களை இறுதியில் நின்று எதிர் நிரல் நிறையாகக் கொண்டு ம, ந, ய என வைத்து பாசம், மாயை, ஆவி எனப் பொருள் கூறினார். எனவே, அடுத்த செய்யுளின் நிலைக்கு ஏற்ப இச் செய்யுளில் பொருள்களை இறை, சத்தி, பாசம், மாயை, ஆவி எனக் கூறினாராயினும் சி, வா, ய, ந, ம என்பவற்றின் பொருள் முறையே இறை சத்தி, ஆவி, மாயை, பாசம் என்பனவேயாம் என அறியலாம்.
திருவைந்தெழுத்தில் நகாரம் திரோதான சத்தியைக் குறிக்கும் என்பதே வழக்கு. மேலே காட்டிய உண்மை விளக்கச் செய்யுளும் அவ்வாறே குறித்தது காணலாம். ஆயின் நம் ஆசிரியர் நகாரத்தின் பொருள் மாயை எனக் கூறியிருப்பது நோக்குதற்குரியது. இதில் மாறுபாடு ஏதும் இல்லை. மாயை கன்மங்கள் திரோதான சத்திக்குக் கருவியாய் அமைதலின், திரோதான சத்தியைக் கூறவே மாயை கன்மங்களையும் கூறியதாகக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறே, மாயையைக் கூறவே, அதனைக் கூட்டுவிக்கின்ற திரோதான சத்தியையும் கூறியதாகக் கொள்ளுதல் வேண்டும். ஆசிரியர் மகாரத்திற்குப் பாசம் எனப் பொருள் கூறினாராயினும், பாசங்களுள் முதலாவதாகிய ஆணவ மலத்தையே தலைமை பற்றி இங்குக் கொள்ளுதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...