வியாழன், 2 நவம்பர், 2017

77. தன் செயல் அறுதல்

77. தன் செயல் அறுதல்
பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி
நீ ஒன்றும் செய்யாது நில்.

பொருள் : மாணவனே, பேய் வசப்பட்டாரது தன்மை போல அருள் வயப்பட்டு நிற்கும் தன்மை உனக்கு உண்டாகும் வரையும், நீ தன் முனைப்போடு யாதொரு செயலு<ம் செய்யாமல் நிற்பாயாக.
சொற்பொருள் :
நீ - மாணவனே, நீ
பேய் ஒன்றும் தன்மை - பேய் பிடிக்கப்பட்டாரது தன்மை போல அருள் வயப்பட்டு நிற்கும் தன்மை
பிறக்கும் அளவும் - உனக்கு உண்டாகும் வரையும்
இனி - இனிமேல்
ஒன்றும் செய்யாது - தன் முனைப்போடு யாதொரு செயலும் செய்யாமல்
நில் - நிற்பாயாக.

விளக்கம் :
செய்யாமை செய்தல் :
செய்யும் செயல் எதுவும் சிவனால் அன்றி நிகழ்வதில்லை. சிவனால் அன்றிப் பயன் கொடுத்தல் இல்லை. நீயே உள் நின்றும் செய்வித்தும் செய்கின்றாய் என்றும், நிலவுவதோர் செயல் எனக்கு இன்று; உன் செயலே என்றும் நினைத்து ஒழுகுவர் ஞானிகள். தற்போதம் இழந்து, தம் செயலற்று நிற்கும் அவர்கள் தம்மில் விளங்கும் சிவத்துடன் ஒற்றித்து நிற்கும் தன்மையால் தம்மால் நிகழவரும் எச்செயலையும் சிவன் செயல் என வைத்து இயற்றுவர். ஆதலால், அச்செயலால் அவர்க்குப் புண்ணியமோ பாவமோ விளைதல் இல்லை. பாம்பு கடித்து இறந்த வணிகன் ஒருவனை உயிர் பெற்றெழச் செய்து வணிகக் கன்னி ஒருத்திக்கு வாழ்வளித்தார் ஞானசம்பந்தர். அப்பூதியடிகளின் மகனை விடம் நீங்கி எழும்படியாகச் செய்து அப் பெற்றோர்களுக்குப் பெருநலம் செய்தார் அப்பர். முதலைவாயில் அகப்பட்டு இறந்த அந்தணச் சிறுவனை அவனது வளர்ச்சியோடு மீட்டுக் கொடுத்து தவினார் சுந்தரர். இப்பெரு மக்களுக்கு இச் செயல்களால் யாதொரு புண்ணியமும் விளையாமையை அறியலாம். தந்தையினது காலை வெட்டிய சண்டேசுரருக்கு அதனால் யாதொரு பாவமும் விளையாமையையும் அறியலாம்.
இவ்வாறு ஞானிகள் செயல் செய்தும் புண்ணிய பாவங்கள் பொருந்தாமல், வினையால் சிறிதும் பற்றப்படாமல் இருப்பர். அவரது செயல் செய்யாமை செய்தல் எனப்படும். செய்யாமை செய்தல் என்பதனைச் சிறிது விளக்குவோம். கற்றிருந்தும் அதன் பயனாய் அறிவு ஏற்படாத நிலை கற்றும் கல்லாமை எனப்படும். உண்டும் அதன் பயனாகிய நிறைவு ஏற்படாத நிலை உண்டும் உண்ணாமை எனப்படும். அதுபோலச் செயல் செய்தும் அதன் பயனாகிய வினைத்தாக்கம் ஏற்படாத நிலை செய்தும் செய்யாமை எனப்படும். இதனையே செய்யாமை செய்தல் என்றும் குறிப்பிடலாம். திருக்களிற்றுப் படியார் என்னும் பதிகம் இப்படித்தான் குறிப்பிடுகிறது. ஐயோ நாம் செய்யாமை செய்து செயலறுக்கலாயிருக்கச் செய்யாமை செய்யாதவாறு என்று அந்நூல் உலகர் நிலைக்கு இரங்கிக் கூறுகிறது. எச்செயலையும் தன்னோடு இயைபுபடுத்திக் கொள்ளாது, தன் செயல் சிவன் செயலாம்படி சிவனோடு ஒற்றித்து நின்று செய்தலே செய்யாமை செய்தலாகும் என்பது இதனால் நன்கு விளங்கும்.
பேய் ஒன்றும் தன்மை :
பேய் ஒன்றும் தன்மையாகிய உவமையில் வைத்து இந்நிலையை இங்கு விளக்குகிறார் நம் ஆசிரியர். பேய் பிடித்த ஒருவன் தன் உணர்விழந்து நிற்பான் என்பது கண்கூடு. அவனுக்குத் தன்னறிவும் இல்லை. தன் செயலும் இல்லை. பேயினுடைய அறிவும் செயலுமே அவன்பால் நிகழ்கின்றன. அதுபோலத் தன் செயல் ஒன்றுமின்றித் திருவருளின் வசப்பட்டு நிற்றலே துரியம் என்னும் அருள் நிலையாகும். இந்நிலையை அடைய அவாவும் மாணவனை வழிப்படுத்துகிறார் ஆசிரியர். தன் செயலறுதலே துரியமாகிய அருள்நிலை வருவதற்கு வழியாகும். அருள்நிலையைத் தலைப்பட்ட பின்னர் துரியாதீத நிலையாகிய இன்புறு நிலையைத் தலைப்படுதல் எளிது என்பது கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...