வியாழன், 2 நவம்பர், 2017

75. முத்தியில் உயிரும் சிவமும் நிற்கும் முறைமை

75. முத்தியில் உயிரும் சிவமும் நிற்கும் முறைமை
ஒன்றானும் ஒன்றாது இரண்டானும் ஓசையெழாது
என்றால் ஒன்றன்று இரண்டும் இல்.

பொருள் : உயிரும் கடவுளும் பொருளால் ஒன்றே எனில், முத்தியில் ஒன்றுதல் என்பது நிகழாது. ஒன்றுதலாவது இரு பொருள்களின் செயலாகும். பொருள் ஒன்றே உள்ளது என்றால், ஒன்றுதல் என்பது எப்படி நிகழ முடியும்? இனி, முத்தியில் உயிரும் கடவுளும் இரண்டாய் நிற்கும் என்றலும் பொருந்தாது. அவை இரண்டாய்ப் பிரிந்து நிற்பின் அங்கே ஒன்றுதல் என்னும் பேச்சு எழுவதற்கே வழியில்லை. இதனால், முத்தியில் உயிர் இறைப்பொருளோடு ஒன்றாய்ப் போய் விடாமலும், உயிரும் இறைவனும் தம்முள் இயையாத வேறுபட்ட இரண்டு பொருள்களாய் நில்லாமலு<ம், உயிர் இறைவனோடு கலப்பினால் ஒன்றாய் நின்று பேரின்பத்தை நுகரும் என்பது பெறப்படும்.
சொற்பொருள் :
ஒன்றானும் - உயிரும் சிவமும் (குட ஆகாயமும் பெரிய ஆகாயமும் போல) பொருளால் ஒன்றேயெனின்
ஒன்றாது - முத்தில் அவை ஒன்றும் என்பது கூடாது.
இரண்டானும் - இனி, உயிரும் சிவமும் (இருளும் ஒளியும் போல) இரு வேறு தன்மையையுடைய பொருள்களாயிருப்பின்
ஓசை எழாது - ஒன்றுதல் என்னும் பேச்சு எழுவதற்கே வழியில்லை. 
என்றால் - இவ்வாறாதலின்
ஒன்றன்று - உயிரும் சிவமும் பொருளால் ஒன்றும் அன்று.
இரண்டும் இல் - தம்முள் இயையாத, இருவேறு தன்மைப்பட்ட பொருள் ஆதலும் இல்லை.

விளக்கம் :
ஒருமைக் கொள்கையை மறுத்தல் :
ஆசிரியர் முதலில் ஏகான்மவாதம் என்னும் ஒருமைக் கொள்கையை எடுத்து மறுக்கிறார். அக் கொள்கைப்படி, உள்ள பொருள் ஒன்றே. அதுவே பிரமம் ஆகிய பரம் பொருள். அதனின் வேறாய் உயிர் என்பதொன்று இல்லை. அப்பிரமமே எண்ணிறந்த உயிர்களாய்த் தோற்றம் அளிக்கிறது. குடத்தினுள் இருக்கும் ஆகாயமும் வெளியில் உள்ள ஆகாயமும் ஒன்றேயாம். குடம் உடையும்போது உள்ளேயிருக்கும் குட ஆகாயம் வெளியிலு<ள்ள பெரிய ஆகாயத்தோடு சேர்ந்து விடுகிறது. அதுபோல, பிரமமும் உடம்பில் தொடக்குண்டிருக்கும் சீவனும் உண்மையில் ஒன்றுதான். முத்திநிலையில் சீவன் உடம்பின் தொடர்பு நீங்கித் தன் உண்மை நிலையாகிய பிரமம் ஆகிவிடும் என்று அக்கொள்கை கூறும். இவ்வொருமைக் கொள்கையை ஒன்றானும் ஒன்றாது என்ற தொடரால் மறுக்கின்றார் ஆசிரியர். உயிரும் இறைவனும் குட ஆகாயமும் பெரிய ஆகாயமும் போலப் பொருளால் ஒன்றாய் இருப்பின், அவை பின்னர் ஒன்றும் என்றல் கூடாது. ஒன்றுதல் என்பது இரு பொருளின் செயலாகும். ஒரு பொருளுக்குப் பிறிதொரு பொருள் இருந்தாலன்றி ஒன்றுதல் என்பது நிகழாது. முத்தியில் ஒன்றுதல் நிகழ்வதனால், பொருள் ஒன்றன்று; இரண்டே என்பது விளங்கும்.
இருமைக் கொள்கையை மறுத்தல் :
இனி, மற்றொரு கொள்கை உள்ளது. அது முன்னைய கொள்கை போலில்லாமல் உயிரும் கடவுளும் என இரண்டு பொருள்களை ஒப்புக் கொள்ளும். ஆயின் அவற்றின் இயல்பைக் கூறும் போது, அவை இருளும் ஒளியும் போல இருவேறு தன்மைப்பட்ட பொருள்கள் என்று கூறும். இக் கொள்கை துவைதம் அல்லது பேத வாதம் எனப்படும். தமிழில் இருமைக் கொள்கை எனக் குறிக்கப்படும். இக் கொள்கையை இரண்டானும் ஓசையெழாது என்ற தொடரால் மறுக்கின்றார் ஆசிரியர். வேறுபட்ட தன்மையை உடைய இரு பொருள்கள் எக்காலத்திலும் ஒன்றுதல் இயலாது. ஆதலால் உயிரும், கடவுளும் இருளும் ஒளியும்போல வேறானவை என்றால் ஒன்றின என்ற சொல் எழுவதற்கே வழியில்லாமற் போகிறது. இவ்வாறு இருமைக் கொள்கை பொருந்தாமையை எடுத்துரைக்கிறார்.
சைவ சித்தாந்த நிலை :
இங்ஙனம் முதலடியில் இரு சாரார் கொள்கைகளையும் மறுத்துரைத்த ஆசிரியர் அடுத்த அடியில் சைவ சித்தாந்தக் கொள்கை இது எனத் தெரித்துக் காட்டுகிறார். முத்தியில் உயிர், சிவம் எனப் பொருள் இரண்டு உளதாயினும் அவை இரண்டாய்ப் பிரித்து நிற்றல் இல்லை. நுகர்பவன் நுகரப்படும் பொருளுக்கு வேறாய் நிற்பின் இன்ப நுகர்ச்சி உண்டாகாது. அவன் அப்பொருளோடு ஒன்றுபடும் போதே இன்ப நுகர்ச்சியைத் தலைப்படுவான். இஃது உலக இன்பத்திற்கும் பொருந்தும்; முத்தியின் பத்திற்கும் பொருந்தும். முத்தியில் நுகர்பவனாகிய உயிர் நுகரப்படும் பேரின்பப் பொருளாகிய சிவத்திற்கு வேறாய் (உயிரும் சிவமும் இரண்டாய்) பிரிந்து நிற்குமானால் உயிருக்குப் பேரின்பம் விளையாது. முதற் கொள்கை கூறியபடி உயிர் சிவத்தோடு ஒன்றாய்ப் போய் விடுமானாலு<ம் இன்ப நுகர்ச்சி உண்டாகாது. நுகர்பவனாகிய உயிரே இல்லாத போது நுகர்ச்சி எப்படி ஏற்படும்?
இதுவரை கூறியவற்றால், முத்தியில் உயிர் சிவத்தோடு ஒன்றாய்ப் போதலும் இல்லை. இரண்டாய் நிற்றலும் இல்லை என்பது விளங்கும். இதனையே ஒன்றன்று இரண்டு மில் என்ற தொடரால் உணர்த்துகிறார் ஆசிரியர். இங்ஙனமாயின், வேறு எப்படிக் கொள்வது? என்ற வினா எழும். சைவ சித்தாந்தம் இதற்கு விடையளிக்கிறது. உயிரும் சிவமும் ஒரு பொருள் அல்ல; தம்முள் இயைபில்லாத, இரு வேறு தன்மைப்பட்ட பொருள்களும் அல்ல. அவை இரண்டு ஆயினும் இயைந்து ஒன்றாதற்குரியவை. அம்முறையில் உயிர் சிவத்தோடு, இரண்டு என்று சொல்ல வாராதபடி, ஒன்றி, வேறு காணப்படாது நிற்கும் என்பதாம்.
உப்பும் நீரும் :
இவ்வாறு உயிர் சிவத்தோடு ஒன்றாய் நிற்றலுக்கு உவமையாக நீரில் உப்பானது கலந்து அந்நீரோடு ஒன்றாய் நிற்றலை எடுத்துக் காட்டுவர். உப்பும் நீரும் இரு வேறு பொருள்களாயினும் தம்முள் இயைந்து ஒன்றாதற்குரிய பொருள்கள். அவை போல உயிரும் சிவமும் உள்ளன. நீரில் கலந்த உப்புக் கண்ணுக்குப் புலனாகாது நீர் மட்டுமே உள்ளது போலத் தோன்றும். அதுபோல உயிர் சிவத்தோடு ஒன்றி வேறு காணப்படாது நிற்கச் சிவம் ஒன்றுமே உள்ளது போலத் தோன்றும். உப்பும், நீரும் இயைந்துள்ள நிலையில் அதனை ஒன்று என்பதா? இரண்டு என்பதா? <உப்பு அடியோடு இல்லாமற் கெட்டொழியுமாயின், ஒன்று என்று சொல்லி விடலாம். ஆனால், உப்புக் கெடாமல் நிற்கிறது. நீரில் உள்ள உவர்ப்புச்சுவை நீங்காமையால் உப்பாகிய பொருள் அங்கே கெடாமல் உள்ளது என அறியலாம். எனவே அதனை ஒன்று என்பது பொருந்தாது. இனி, இரண்டு என்று சொல்ல வேண்டுமாயின், உப்பு தனது கட்டித் தன்மை நீங்காமல், நீருக்கு வேறாய் நிற்றல் வேண்டும். அப்பொழுதுதான் நீரும் உப்பும் ஆகிய இரண்டு அங்கே உள்ளன என்று கூற முடியும். ஆனால், உப்பு அவ்வாறு தனியே நிற்றல் இன்றித் தனது கட்டித் தன்மை நீங்கி நீரோடு வேறற நிற்கிறது. எனவே அதனை இரண்டு என்று சொல்வதும் பொருந்தாது.
உயிரும் சிவமும் :
இதுபோலத் தான் முத்தியில் உயிரும் சிவமும் இயைந்துள்ளன. அதனை ஒன்று என்பதா? இரண்டு என்பதா? சிவத்தை அணைந்த உயிர் கெட்டொழியுமாயின், ஒன்று என்று சொல்லி விடலாம். ஆனால், உயிர் கெடாமல் நிற்கிறது. சிவம் இன்பத்தைத் தரும் பொருளாய் நிற்க, உயிர் இன்பத்தைப் பெறுபவனாய் நிற்றல் நீங்காமையால், உயிர் அங்கே கெடாமல் உள்ளது என அறியலாம். எனவே அதனை ஒன்று என்பது பொருந்தாது. இனி இரண்டு என்று சொல்ல வேண்டுமாயின், உயிர் தனது சீவத்தன்மை நீங்காமல் சிவத்திற்கு வேறுபட்டு நிற்றல் வேண்டும். அப்பொழுது தான் உயிரும் சிவமும் ஆகிய இரண்டு அங்கே உள்ளன என்று கூற முடியும். ஆனால், உயிர் அவ்வாறு தனியே நிற்றல் இன்றித் தனது சீவத் தன்மை நீங்கிச் சிவத்தோடு வேறற நிற்கிறது. எனவே அதனை இரண்டு என்று சொல்வதும் பொருந்தாது. இவ்வாறு உயிரும் சிவமும் ஒன்றாகாமல் இரண்டாகாமல் நிற்கும் முறைமையையே ஒன்றன்று இரண்டும் இல் - எனக் குறிப்பிட்டார் நம் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...