வெள்ளி, 3 நவம்பர், 2017

6. அவனுக்கு மேலானதொரு பொருளில்லை

6. அவனுக்கு மேலானதொரு பொருளில்லை
பல்லாருயிர் உணரும் பான்மையென மேல் ஒருவன்
இல்லாதான் எங்கள் இறை

பொருள் : <உயிர்கள் எண்ணற்றவை; அறியும் தன்மை உடையவை. ஆனால், அவை தாமே அறியமாட்டா; வேறொரு துணை அறிவிக்கவே அறிவன. அவ்வுயிர்களைப் போன்றவனல்லன் எம் இறைவன். அவன்தானே எல்லாவற்றையும் அறிபவன். தன்னை அறிவித்தற்குத் தனக்கு மேலாக ஒருவனை உடையவன் அல்லன்.
சொற்பொருள் :
பல் ஆர் உயிர் - எண்ணற்றனவாய் நிறைந்த உயிர்கள்
உணரும் பான்மையென - தாமே அறியமாட்டாமல், தமக்கு மேலோன் ஒருவன் அறிவிக்கவே அறிந்து வருதல் போல
எங்கள் இறை - எம் இறைவன்
மேல் ஒருவன் இல்லாதான் - தன்னை அறிவித்தற்குத் தனக்கு மேலானவனாக ஒருவனை உடையவனல்லன். (அவன்தானே எல்லாவற்றையும் அறிபவன்.)

விளக்கம் :
உயிர்கள் உணரும் பான்மை :
உயிர்கள் தாமே தனித்து நின்று பொருள்களை அறிவதில்லை. உடம்பின் புறத்திலும் அகத்திலும் அமைந்திருக்கும் கருவிகளைத் துணையாகக் கொண்டே அறிகின்றன. கண், செவி முதலிய ஐம்பொறிகள் புறத்தில் உள்ள கருவிகள். மனம் முதலியவை அகத்தில் உள்ள கருவிகள். இக்கருவிகள் இல்லையென்றால் உயிருக்கு அறிவு நிகழாது என்பதை அனுபவத்திற் காணலாம். உறங்குங் காலத்தில் இக் கருவிகள் செயற்படாமையால் உயிர் அறிவின்றிக் கிடக்கிறது. விழிப்புக் காலத்தில் இக் கருவிகள் செயற்படுவதனால் அவற்றின் துணைக் கொண்டு உயிர் அறிவு பெறுவதாகின்றது. இவ்வனுபவம் எதைக் காட்டுகிறது? <உயிர் கருவிகளின் துணையைப் பெறும் போதுதான் அறியும் நிலையை எய்தும் என்பதைத்தானே காட்டுகிறது. மேற்கூறிய மனம் முதலிய கருவிகள் உலகப் பொருள்களை அறிவதற்கு மட்டுமே துணையாகும். உயிர் தன்னியல்பை உணர்ந்து கொள்வதற்கு அவை துணை செய்யா; மெய்ப் பொருளாகிய இறைவனை உணர்தற்கும் அவைதுணை செய்யா. அதற்கு ஞானாசிரியரது அருள் உபதேசமே இன்றியமையாத துணையாகும். இப்படி எப்பொருளை அறிவதற்கும் வேறொரு துணை உயிருக்கு வேண்டியிருக்கிறது. உடம்பும் கருவிகளும் ஆகிய துணைகளையும், மற்றும் காலம், வினை போன்ற துணைகளையும் உயிர்களுக்குக் கூட்டி அறிவிக்கின்றவன் இறைவனே. அவன் உயிர்களுக்குக் கட்டு நிலையில் இக் கருவிகளின் வழியாக அறிவிக்கிறான். முத்தி நிலையில் நேரே அறிவிக்கின்றான். எனவே எந்நிலையிலும் அவன் அறிவிக்கவே உயிர்கள் அறிகின்றன. முடிவாகப் பார்த்தால் அவன் ஒருவனே உயிர்களின் அறிவுக்கு முழுமையான துணை என்பது விளங்கும். இம்முறையில் எல்லா உயிர்களும் தம்மை அறிவித்தற்கு மேலோன் ஒருவனை உடையனவாய் இருக்கின்றன.
மேலொருவன் இல்லாதான் :
இனி, இறைவனது அறிவு எத்தகையது பார்ப்போம். இறைவனது அறிவு தானே விளங்குவது; அஃதாவது, அறிவிக்கின்ற துணை ஒன்றை வேண்டாது தானே அறிவது. தானே விளங்கி நிற்கின்ற அறிவு ஆதலின் அது சுயம்பிரகாசம் எனப்படும். அவன் தானே அறிபவன் எனவே அவனுக்கு அறிவிக்க மேலோன் ஒருவன் இல்லை என்பது சொல்லாமலே விளங்கும். அவனே மேலோனாய் இருந்து எல்லாவற்றையும் ஒருங்கே யறிந்து எல்லாவுயிர்களுக்கும் அறிவித்து வருகின்றான். இச் செய்யுளில், இறைவனே சுதந்திர அறிவுடையவன் என்பதையும், உயிர்களது அறிவு சுதந்திரம் இல்லாதது என்பதையும் வெளிப்படையாகக் கூறி, உயிர்கள் யாவும் அவனுக்கு ஆட்பட்டு ஒழுகுதற்கு உரியன என்பதையும் குறிப்பாக உணர்த்தியுள்ளார் ஆசிரியர்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

빴지노사이트
빴지노사이트더 룼요 럴빴지노사이트더 메리트 카지노 조작 한로 한겜 출장마사지 빴지노사이트더 deccasino 룼요 룼요 한국 온라인 카지노 럴빴지노사이트더 한로 카지노 한겜 빴지노사이트�

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...