வெள்ளி, 3 நவம்பர், 2017

63. பொய்க்கருத்து

63. பொய்க்கருத்து
காண்பான் ஒளி இருளில் காட்டிடவும் தான்கண்ட
வீண் பாவம் என்னாய் விடும்?

பொருள் : ஒருவன் இருளில் நிற்குங் காலத்தில் ஒளி தோன்றி எப்பொருளையும் அவன் காணுமாறு அவற்றை அவனுக்குக் காட்டுகிறது. ஆனால், அவன் அவ்வொளியினாலேயே தான் கண்டதாக எண்ணுவதில்லை. தானே கண்டு விட்டதாகக் கருதிக் கொள்கிறான். அதுபோலப் பெத்த நிலையிலும், முத்தி நிலையிலும் உயிர் யாதொன்றையும் அறியும் படியாகத் திருவருளே அறிவித்து வருகிறது. யாதொரு செயலையும் செய்யும்படியாகத் திருவருளே செய்வித்து வருகிறது. ஆனால், உயிர் திருவருளாலேயே தனக்கு அறிவும் செயலும் நிகழ்கின்றன என்பதை எண்ணுவதில்லை. தானே அறிந்தும் செய்தும் வருவதாகக் கருதுகிறது. இது பொய்யான கருத்தாகும். இப்பொய்க் கருத்து என்ன பயனைச் செய்யும்?
சொற்பொருள் :
இருளில் - ஒருவன் இருளில் உள்ளபோது
காண்பான் - அவன் பொருள்களைக் காணும்படி
ஒளி காட்டிடவும் - ஒளி தோன்றி அவனுக்கு அவற்றைக் காட்டி நிற்கவும்
தான் கண்ட - ஒளியின்றி அப்பொருள்களைத் தானே கண்டுவிட்டதாகக் கருதுகிற
வீண்பாவம் - பொய்யான கருத்து
என்னாய் விடும் - அவனுக்கு என்ன பயனைச் செய்யும்?
முந்திய குறட்பாவில் உள்ளது போல இங்கும் உவமை மட்டுமே உள்ளது. இதனைக் கொண்டு ஆசிரியர் கூற வந்த கருத்தை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்.

விளக்கம் :
கட்டு நிலையில் உயிர் திருவருளை மறந்து தானே எல்லாவற்றையும் அறிவதாகக் கருதும். இது ஆணவ மலத்தினால் நிகழ்வது. இனி, ஆணவமலம் நீங்கிய நிலையிலும் கூட உயிர் திருவருளை உணராமல்தானே எல்லாவற்றையும் அறிவதாகக் கருதும். அதுதான் வியப்பு! ஞானாசிரியரின் உபதேசத்தைப் பெற்ற மாணாக்கன் நான் யார்? என்பதைச் சிந்திக்கின்ற காலத்தில் இந்த உடம்பும் ஐம்பொறி முதலிய கருவிகளும் ஆகிய இவையெல்லாம் சடப்பொருள்களே என்றும் நான் இவற்றுக்கு வேறானவன் என்றும் உணர்வான். அங்ஙனம் உணர்ந்து அவற்றைத் தனக்கு வேறாகக் கண்டு அவற்றின் தொடர்பிலிருந்து நீங்குவான். உயிருக்கு இயற்கையிலே விரிந்த அறிவு உண்டு. அது வியாபக அறிவு எனப்படும். இப்படிப்பட்ட அறிவை ஐம்பொறி முதலிய தத்துவங்கள் கட்டுப்படுத்தியிருந்தன. அஃதாவது, ஆணவமலத்தைச் சிறிதளவு நீக்கி உயிரினது அறிவைச் சிறிதே விளங்கும் படி செய்தன. இத்தத்துவங்கள் உள்ளவரையில் உயிருக்குச் சிற்றறிவே விளங்கும். இத்தத்துவங்களைத் தனக்கு வேறாகக் கண்டு நீங்கும்போது, இது காறும் மறைந்திருந்த பதியினது ஞானமாகிய திருவருள் வெளிப்பட்டு அவ்வான்மாவினது வியாபக அறிவை விளங்கச் செய்யும். இவ்வாறு தத்துவங்களின் நீங்கித் தனது வியாபக நிலையைத் தலைப்பட்ட மாணாக்கன் அந்நிலையில் தன்னையே பெரும் பொருளாக மதிப்பான். நானே பிரம்மம் என்று உணர்வான். இவ்வுணர்வு உண்மையுணர்வு ஆகாது. ஆணவ மலம் நீங்கினாலும் அதன் வாசனை நீங்காமையால் ஏற்படுகிற மயக்கவுணர்வு இது. வியாபக அறிவைப் பெற்ற அப்பொழுதும் உள் நின்று உணர்த்தி வருவது திருவருளேயாகும். இதனை உணராமல் தானே வியாபக நிலையைப் பெற்றதாகவும், தானே எல்லாவற்றையும் அறிவதாகவும் உணர்வது மயக்க உணர்வுதானே.
இதனையே வீண் பாவம் என்று குறிப்பிடுகிறார் நம் ஆசிரியர். பாவம் என்பதற்குக் கருத்து என்று பொருள். எனவே வீண்பாவம் என்பது பொய்யான கருத்து எனப் பொருள் படும். ஆணவ மலமாகிய பாசத்தில் நின்றவர்கள் திருவருளை மறந்து தானே அறிந்தும் செய்தும் வருவதாகக் கருதுவதிலே வியப்பொன்றும் இல்லை. ஆணவ மலத்தின் நீங்கியவரும் திருவருளை மறந்து இவ்வாறு கருதுவாராயின் அஃது அவர்க்குப் பெரியதோர் இழுக்காகும். நானே பிரம்மம் (அகம் பிரம்மாஸ்மி) என உணர்வது, மெய்ப் பொருளை உணர்வதற்கு முன்னே தோன்றி நீங்குகிற ஓர் இடைப்பட்ட அனுபவ நிலையாகும். ஒருவன் தலைநகரில் உள்ள அரச மாளிகைக்குச் செல்ல விரும்புகிறான். அந்தக் குறிக்கோளோடு புறப்பட்டு வருகிறான். தலைநகரைச் சூழ்ந்துள்ள புற நகரை அடைகிறான். அதுவே அரச மாளிகையை அடைந்ததாகுமா? அது போன்றதே இந்த இடைப்பட்ட உணர்வு நிலை. இதுவே முடிந்த மெய்யுணர்வு ஆகாது என்று சைவசித்தாந்திகள் கொள்வர். நானே முதற்பொருள் என்னும் உணர்வு நிலையில் நின்ற மாணாக்கனுக்கு ஞானாசிரியர் திருவருளின் உண்மையைப் பின்வருமாறு நினைப்பிப்பார். உன்னறிவை நீயே வேறு துணையின்றி அறிவாயாயின், இவ்வளவு காலமாகப் பாசத்தோடு கூடிப் பிறந்து இறந்து துன்புற்றிருக்க மாட்டாய். நீரும் அதில் பொருந்திய சுவையும் போல உன் அறிவினுள் என்றும் நீங்காத அறிவாகி நின்று உணர்த்தி உன்னை இந்நிலைக்குக் கொண்டு வந்தது திருவருளே என்பதை உணர்வாயாக என்று தெளிவிப்பார். எனவே, உயிர் திருவருளை மறத்தலே அதற்கு மாசு ஆகும். அம்மாசு சிறிது இருப்பினும் அஃது <உயிர்க்குப் பேதைமையாய் முடியும் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...