வெள்ளி, 3 நவம்பர், 2017

59. ஒளிக்குள் ஒளிந்து நில்!

59. ஒளிக்குள் ஒளிந்து நில்!
களியே மிகுபுலனுமாக் கருதி ஞான
ஒளியே ஒளியா ஒளி.

பொருள் : ஞானமாகிய அருள் வழியாக உண்டாகும் இன்பத்தையே அடையத்தக்க மேலான பேரின்பமாக உணர்ந்து, அத்திருவருள் ஞானத்தையே பற்றாகப் பற்றி நின்று, அந்த ஞான ஒளிக்குள் புகுந்து நீ ஒளிந்து நிற்பாயாக.
சொற்பொருள் :
களியே - முதல்வனை அவனது அருள் வழியாகக் காணுமிடத்துத் தோன்றுகிற இன்பத்தையே
மிகு புலனுமா - அடையத்தக்க மேலான பேரின்பமாக 
கருதி - உணர்ந்து
ஞான ஒளியே - அத்திருவருள் ஞானத்தையே
ஒளியா - பற்றாகப் பற்றி நின்று
ஒளி - அந்த ஞான ஒளிக்குள் புகுந்து நீ ஒளிந்து நிற்பாயாக.

விளக்கம் :
இனிய சுவைக் கரும்பு :
இறைவன் கரும்பைத் தேனைப் பாலைக் கனியமுதைக் கண்டைக் கட்டியை ஒத்திருப்பின் அந்த முத்தியினில் என்பர். பார்த்தாலும் நினைத்தாலும் பரிந்து உள்ளுணர்ந்தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக்கரும்பாக அவன் இருக்கிறான் என்பர்.
முன்பு கண்டறியாத இன்பம் :
இத்தகைய இனிய பொருளாகிய அவனை நமது அறிவாகிய பாசஞானத்தால் அறிய முடியாது. அவனது அறிவாகிய பதி ஞானத்தாலேயே அவனை அறிய முடியும். அருளே பதி ஞானம் எனப்படுகிறது. பேரின்பப் பொருளாகிய பதியைப் பதிஞானமாகிய அருள் வழியாகக் காணுமிடத்து, முன்பு என்றும் கண்டறியாத ஓர் இன்பம் தோன்றும். ஞான நெறியிற் செல்லும் சாதகன் அதனையே அடையத்தக்க பெரும் பயனாகக் கருதிப் பற்ற வேண்டும் என்பார், களியே மிகு புலனுமாக் கருதி என்றார்.
பதி ஞானமாகிய ஒளி :
அருளாகிய பதிஞானம் ஒளியாய் இருப்பது; <உயிரில் உள்ளொளியாய்க் கலந்திருப்பது. இதுவரையில் கருவிகளால் வரும் பாச ஞானத்தைப் பற்றி நின்ற சாதகன் அப்பாச ஞானத்தை விடுத்துத் தன்னுள் விளங்கும் பதி ஞானத்தையே தனக்குப் பற்றுக் கோடாகப் பற்ற வேண்டும் என்பார் ஞான ஒளியே ஒளியா என்றார்.
ஒளியிலே ஒளிந்து நில் :
அவ்வாறு பதி ஞானமாகிய ஒளியையே பற்றாகப் பற்றி நீ அதனுள் ஒளிந்து நிற்பாயாக என்று மாணவனுக்கு அறிவுறுத்துகிறார் ஆசிரியர். இருளான இடத்திலேதான் ஒளிந்து நிற்க முடியும். ஒளியிடத்தில் எப்படி ஒளிந்து நிற்பது! இஃது உலகியலில் நடவாத காரியம். ஆனால் அருளியலில் இந்நிலை மாறுகிறது. இங்கே, ஞான ஒளியில் சாதகன் ஒளிந்து நிற்க வேண்டும். அதன் கருத்து, அவன் தன்னை இழந்து, யான் எனது என்னும் நினைப்பு இன்றித் திருவருளின் வசப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும். ஞான ஒளியிலே புகுந்து நின்றால் உலகப் பொருள்களிலே அவனது கருத்துப் போகாது. தண்ணீருக்குள் மூழ்கி நிற்பவனுக்கு வெளியிலுள்ள பொருள்கள் எப்படித் தெரியும்? அது போல, ஞானத்துள் மூழ்கி நிற்பவனுக்கு வெளியுலக விடயங்களாகிய இன்பத் துன்பங்கள் தோன்றுதலும் இல்லை. அவற்றால் அவன் கவரப்படுதலும் இல்லை.
நாவுக்கரசர் வாழ்வில் :
நாவுக்கரசர் வாழ்வில் நிகழ்ந்த ஒன்றை இங்கே நினைத்துப் பார்க்கலாம். அவரை வெய்ய நீற்றறையில் விடுத்துக் கதவைத் தாளிட்டுக் காவலும் இட்டனர். ஆண்ட அரசு அதனுள்ளே சென்ற பொழுது அம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் பெருமானுடைய தாள் நிழலைத் தலைக் கொண்டார் என்றும், மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுதிருந்தார் என்றும் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார். தாள் நிழலைத் தலைக் கொண்டார் என்பது, அவர் தன் செயலற்றுத் திருவருளுக்குள் அடங்கி நின்றார் என்பதைக் காட்டும் மூண்ட மனம் நேர் நோக்கி என்பது, தன்னறிவில் வேறொன்றும் புலப்படாது திருவடி நினைவில் உறைத்து நின்ற அவரது நிலையைக் குறிக்கும். இவ்வாறு அவர் ஞான ஒளியில் ஒளிந்து நின்றமையால் ஊனம் இலராகி இருந்ததோடு, ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி உவந்திருந்தார். இவ்வரிய நிகழ்ச்சியை நினைப்பிக்கும் வகையில், களியே மிகு புலனுமாக் கருதி ஞான ஒளியே ஒளியா ஒளி என்றார் ஆசிரியர் எனலாம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...