வெள்ளி, 3 நவம்பர், 2017

57. நின் செயல் மன் செயல்

57. நின் செயல் மன் செயல்
புன் செயலின் ஓடும் புலன் செயல்போல் நின்செயலை
மன் செயல தாக மதி.

பொருள் : சிற்றின்பப் பொருள்களின் மேல் விரைந்து செல்லுகின்ற ஐம்பொறிகளின் செயல், உண்மையில், அப்பொறிகளைச் செலுத்துகின்ற உயிரின் செயலேயாகும். அதுபோல, மாணவனே, நீ செய்யும் செயல்கள் யாவும் உனக்கு முதலாகிய திருவருளின் செயல் என்றே அறிவாயாக.
சொற்பொருள் :
புன் செயலின் - புல்லிய இன்பத்தையே தரும் உலகப் பொருள்களின் மேல் 
ஓடும் - விரைந்து செல்லுகின்ற
புலன் செயல் போல் - ஐம்பொறிகளின செயல் அவற்றைச் செலுத்துகின்ற உயிரின் செயலாய் இருத்தல் போல
நின்செயலை - (மாணவனே) உனது செயல்களையெல்லாம்
மன் செயலதாக - உனக்கு முதலாகிய திருவருளின் செயல் என்றே
மதி - அறிவாயாக.

விளக்கம் :
உலகத்திலுள்ள சிற்றின்பப் பொருள்களைப் பற்றுவதற்காக ஐம்பொறிகளும் வெளியே ஓடுகின்றன. ஓர் இளைஞன் தனிமையான ஓரிடத்தில் கண்மூடித் தியானத்தில் அமர்ந்தான். சற்று நேரத்தில் அந்த வழியாகச் சில பெண்கள் வந்தார்கள். அவன் கண் திறந்து அக் காட்சியைக் காணும்படி நேர்ந்தது. அதனால் அவனது தியானம் கலைந்தது. அடுத்த நாள் முதல் யார் வந்தாலும் கண்களைத் திறக்கக் கூடாது என்று முடிவு செய்தான். மறுநாள் கண்களைத் துணியினால் கட்டிக் கொண்டு தியானத்தில் ஈடுபட்டான். அன்றைக்கும் அதே பெண்கள் வந்தார்கள். அவர்களது பேச்சொலியும், வளையல் ஒலியும் அவனது காதுகளைக் கவர்ந்தன. அப்பொழுதும் அவனது தியானம் கலைந்து விட்டது. இனிக் கண்களை அடைத்தது போலக் காதுகளையும் அடைக்க வேண்டும் என்று முடிவு செய்தான். மறுநாள் தன் இரு செவிகளையும் பஞ்சினால் மூடிவிட்டுத் தியானத்தில் அமர்ந்தான். வழக்கம் போல அதே நேரத்தில் அந்தப் பெண்களும் வந்தார்கள். கண்கள் காணாவிடினும், காதுகள் கேளா விடினும், அவனது நாசியாகிய பொறியை அவர்கள் சூடியிருந்த மல்லிகையின் நறுமணம் ஈர்த்தது. அதனால் அவனது தியானம் தடைப்பட்டது. இனி மூக்கினையும் மூடுவது என்று முடிவு செய்தான். அடுத்த நாளில் கண், காது, மூக்கு ஆகிய பொறிகளை அடக்கிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தான். சற்று நேரமாயிற்று. அவனது மனமானது எண்ணிக் கொண்டது. இது அந்தப் பெண்கள் வருகிற நேரமாயிற்றே. அவர்கள் வந்திருப்பார்களா இல்லையா? என்று எண்ணி மனம் அலைபாய்ந்தது. இந்த எண்ணம் வந்த பிறகு தியானம் செய்வது எங்கே!
இவ்வாறு கண் காது முதலிய பொறிகள் உருவம் ஓசை முதலியவற்றைப் பற்றுகிற செயல் அவற்றின் செயலா என்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும். அவையெல்லாம் கருவிகளாகிய சடப்பொருள்களே. அவற்றிற்கென்று என்ன செயல் இருக்கிறது? ஆன்மா செலுத்தவே அவை செயல்படுகின்றன. எனவே அவற்றின் செயலெல்லாம் ஆன்மாவின் செயலே யாதல் விளங்கும். இந்த ஐம்பொறிகளின் நிலையில் ஆன்மாவை வைத்துக் காணுதல் வேண்டும். ஐம்பொறிகளுக்கென்று தனித்த செயல் இல்லாமை போல, ஆன்மாவிற்கும் சுதந்திரமான செயல் ஒன்றும் இல்லை. ஆன்மா செலுத்தவே ஐம்பொறிகள் செயற்படுகின்றன. அதுபோலத் திருவருள் செலுத்தவே ஆன்மாவும் செயற்படுகின்றது. எனவே, ஐம்பொறிகளின் செயல் ஆன்மாவின் செயலாதல் போல, ஆன்மாவின் செயலும் திருவருளின் செயலேயாகிறது என்பது தெளிவாகும். இந்த உண்மையை நூல்கள் வாயிலாக உணர்தல் கூடும். ஆனால், அந்த நூலுணர்வினால் உண்மை ஞானம் பிறவாது. அருளாசிரியர் இந்த உண்மையை அறிவுறுத்த, அவரது உரையே மாணாக்கனுக்கு அனுபவ ஞானத்தைத் தந்துவிடும். நீ செய்வன வெல்லாம் திருவருள் செய்விக்கச் செய்யும் செயல்களாம் என்று அவர் உணர்த்த, மாணாக்கன் அவர் உணர்த்தியவாறே உணர்ந்து திருவருளைப் பற்றிக் கொள்வான்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...