வெள்ளி, 3 நவம்பர், 2017

53. பொருள்கள் தம்மில் இயைந்து நிற்றல்

53. பொருள்கள் தம்மில் இயைந்து நிற்றல்
செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்
உய்வான் உளன் என்று உணர்.
பொருள் : மாணவனே, வினையைச் செய்பவனாகிய நீயும், உன்னால் செய்யப்படுவனவாகிய இருவினைகளும், அவற்றின் பயன்களாகிய இன்பத் துன்பங்களும், அப்பயன்களை உன்னோடு கூட்டுவிப்பவனாகிய இறைவனும் என இம்முறையில் நீ பாசத்தோடும் பதியோடும் தொடர்பு கொண்டுள்ளாய். இவ்வாறு யான் உள்ளேன் என்று உன்னியல்பை உணர்வாயாக.
சொற்பொருள் :
செய்வானும் - (மாணவனே!) வினையைச் செய்பவனாகிய நீயும்
செய்வினையும் - உன்னால் செய்யப்படும் வினையும்
சேர்பயனும் - அவ்வினையின் வழியாக உன்னை வந்து அடைகின்ற இன்பத் துன்பங்களாகிய பயனும்
சேர்ப்பவனும் - அவ்வினையின் பயன்களை உன்பால் சேர்ப்பிப்பவனாகிய இறைவனும் (ஆகிய இந்நான்கு பொருள்களை)
உய்வான் - யான் உய்தி பெறுதற்கு
உளன் - உடையேன்
என்று உணர் - என்று உணர்வாயாக.
விளக்கம் :
முந்திய செய்யுளில், சித்தாந்தத்திற் கொள்ளப்படும் பொருள்களைப் பெயரளவில் சொல்லிச் சென்றார். இச் செய்யுளில், அப்பொருள்கள் தம்முள் எவ்வாறு தொடர்பு பட்டு நிற்கின்றன என்பதைக் காட்டுகிறார். ஏகன் எனப்பட்ட இறைவன் சேர்ப்பவன் ஆகின்றான். அனேகன் எனப்பட்ட உயிர் செய்வான் ஆகின்றான். இருள், கருமம், மாயை ஆகியவை செய்வினையும், சேர் பயனும் ஆகியவற்றுக்குக் காரணம் ஆகின்றன. மும்மலங்களும் தம்முள் இயைந்து இன்ப துன்ப விளைவிற்கு எவ்வாறு ஏதுவாகின்றன என்பதைக் காண்போம். இன்பத் துன்பங்கள் உயிருக்கு இயற்கையல்ல; உயிரோடு என்றும் உடனாக இருப்பவையல்ல. அவை இடையிலே வந்து உயிரைப் பற்றுகின்றன. பின் இடையிலே நீங்கி விடுகின்றன. இன்பத் துன்பங்கள் இவ்வாறு தோன்றி நீங்குவதால் அவை காரியம் எனப்படும். ஒரு காரியத்திற்குப் பல காரணங்கள் உண்டு. அக்காரணங்கள் எல்லாம் கூடியபோதே அக்காரியம் நிகழும். அக்காரணங்களை மூன்றாகக் கூறுவர். அவை முதற்காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என்பன. இவற்றுள் முதற்காரணமே முதன்மையுடையதாய் இருக்கும். ஏனைய காரணங்கள் அதற்குத் துணையாய் அமையும். உதாரணமாக குடம் என்ற காரியம் தோன்றுவதற்கு முதற் காரணமாக இருப்பது களிமண். சக்கரம், கழி, நீர் முதலியவை அதற்குத் துணை செய்வதால் துணைக் காரணம் எனப்படும். இனி, முதற் காரணமாகிய களிமண்ணையும், பிற துணைக் காரணங்களையும் இயைவித்துக் குடமாகிய காரியத்தைச் செய்கின்ற குயவன் நிமித்த காரணம் ஆகின்றான்.
இன்பத் துன்பங்கள் காரியம் என்று கூறினோம். எனவே அவற்றிற்கும் மேற்கூறிய மூன்று காரணங்கள் தேவை என்பது விளங்கும். இன்பத் துன்பங்களுக்கு முதற் காரணமாய் இருப்பது வினையாகும். துணைக் காரணமாய் அமைவது மாயையாகும். நிமித்த காரணமாய் நிற்பது ஆணவ மலமாகும். இக்கருத்தை மே<லும் சிறிது விளக்குவோம். நெல்லில் முளை, தவிடு, உமி என்ற மூன்று <உள்ளன. முளை என்பது முளைத்தற் சத்தியைக் குறிக்கும். நெல்லில் <உள்ள முளைத்தற் சத்தியே முளையைத் தோற்றுவிக்கிறது. அச்சத்தி இல்லையேல் நெல் எக்காலத்திலும் முளைக்காது. எனவே முளைத்தற் சத்தியே முளை தோன்றுவதற்கு முதற்காரணம் என்பது புலனாகும். இம்முளைத்தற் சத்திக்குத் துணைபுரிந்து நிற்பது அரிசியோடு ஒட்டிக் கொண்டுள்ள தவிடு ஆகும். தவிட்டை நீக்கி விட்டால் முளைத்தற் சத்தி தன் காரியத்தைத் தோற்றுவிக்க மாட்டாது. எனவே, தவிடு முளை தோன்றுவதற்குத் துணைக் காரணம் என்பது புலனாகும். இனி, அம்முளைத்தற் சத்தியைக் கெடாது பாதுகாத்து அது முளையைத் தோற்றுவித்தற்கு நிமித்தமாக நிற்பது உமியாகும். இதனால், உமி நிமித்த காரணம் என்பது புலனாகும்.
முளைத்தல் என்னும் காரியத்திற்கு முளைத்தற்சத்தி முதற் காரணமும், தவிடு துணைக் காரணமும், உமி நிமித்த காரணமும் ஆதல் போல, இன்பத் துன்பங்களாகிய காரியத்திற்குக் கன்மம் முதற்காரணமும், மாயை துணைக் காரணமும், ஆணவம் நிமித்த காரணமும் ஆகின்றன. இந்த ஒப்புமையைப் பின்வருமாறு அமைத்துக் காட்டலாம்.
உவமை - பொருள்
1. முளை (முளைத்தற்சத்தி) - கன்மம்
2. தவிடு - மாயை
3. உமி - ஆணவம்
கன்ம மலம் முதற் காரணமாய் நின்று இன்பத் துன்பங்களை உயிரறிவில் தோற்றுவித்து <உயிருக்கு போகத்தைத் தருகிறது. இன்பத் துன்பங்கள் உயிருக்கு நேரே வருவதில்லை. உலகப் பொருள்களின் வழியாகவே வருகின்றன. உலகப் பொருள்கள் யாவும் மாயையின் காரியங்கள் என்பது வெளிப்படை. எனவே மாயை இன்பத் துன்பங்களுக்குச் சார்பாய் உள்ள தனு, கரண, புவன போகங்களைத் தந்து கன்ம நுகர்ச்சிக்குத் துணை செய்கிறது என அறியலாம். மேலும், தனது காரியங்களாகிய உடம்போடும் உலகோடும் உயிரைப் பிணிப்புண்டு நிற்கச் செய்கிறது. இவ்வாறு மாயை துணைக் காரணமாய் நின்று உயிருக்குப் பந்தத்தைத் தருகிறது. ஆணவ மலம் நிமித்த காரணமாய் நின்று, இன்பத் துன்பங்களைத் தோற்றுவிக்கின்ற கன்மம் உயிரைவிட்டு நீங்காதவாறு அக்கன்மத்தை நிலை நிறுத்துகிறது. உயிரிடத்தில் நான் என்ற உணர்வை உண்டாக்கி உயிருக்கு நுகர்வோனாம் தன்மையைக் கொடுக்கிறது. இம்மும் மலங்களின் செயற்பாட்டினைப் பின் வருமாறு அமைத்துக் காட்டலாம்.
மலங்கள்: செயல்கள்:
1. கன்மம்-முதற்காரணம்-போகத்தைத் தருதல்
2. மாயை-துணைக்காரணம்-பந்தத்தைத் தருதல்
3. ஆணவம்-நிமித்தகாரணம்-நுகர்வோனாம் தன்மையைத் தருதல்
இவ்வாறு மும்மலங்களும் இயைந்து நின்று இன்பத் துன்ப அனுபவங்களுக்கு ஏதுவாகின்றன.
உய்வான் உளன் என்று உணர் :
இறைவன் சேர்ப்பவனாய் நிற்க, உயிர் செய்வோனாகவும் நுகர்வோனாகாவும் இருந்து, பிறவித் துன்பத்திற் பட்டு உழல்கிறது. இதிலிருந்து விடுபடும் வழியில்லையோ? என்று மாணவர் கேட்கக் கூடும். அதற்குப் பின்வருமாறு குறிப்பாய் விடை கூறுகிறார் ஆசிரியர். எல்லாக் கேட்டிற்கும் மூலமாய் உள்ள ஆணவ மலமே தீராத பெரு நோயாகும். அதற்கு மருந்தாகவே வினைப்பயனைச் சேர்ப்பிக்கின்றான் இறைவன். ஆகவே, செய்வானும் செய்வினையும் சேர்ப்பயனும் சேர்ப்பவனும் ஆகிய இந்நான்கு பொருள்களை நீ உடையவனாக இருப்பது நீ உய்தியடைதற் பொருட்டேயாகும் என்று தெளிவிப்பாராய், உய்வான் உளன் என்று உணர் என்கிறார் ஆசிரியர். இந்நான்கு பொருள்களும் ஆன்மாவை மலத்தினின்றும் நீக்கி ஈடேற்றுவன என்பது கருத்து.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...