வெள்ளி, 3 நவம்பர், 2017

4. முத்தொழில் செய்பவன்

4. முத்தொழில் செய்பவன்
ஆக்கிஎவையும் அளித்து ஆசுடன் அடங்கப்
போக்கும் அவன்போகாப் புகல்.

பொருள் : இறைவன் உயிர்களிடம் உள்ள ஆணவ மலமாகிய அழுக்கினை நீக்க வேண்டியே அவ்வுயிர்களுக்கு உடம்பும், ஐம்பொறி முதலிய கருவிகளும், உலகும், உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய எல்லாவற்றையும் படைத்துக் கொடுக்கின்றான்; உயிர்கள் குறித்த காலம் வரை அவற்றோடு பொருந்தி வாழும்படியாக அவற்றை நிலை நிறுத்தி காக்கின்றான்; பின், ஆணவ மலம் நீங்கும் நிலையை அடையும் காலத்தில் அம் மலத்தோடு சேர்த்து, தான் படைத்துக் காத்த உடம்பு முதலிய பொருள்களையும் ஒரு சேரப் போக்கி உயிரைத் தூய தாக்குகின்றான். இப்பேருதவியைச் செய்யும் இறைவனே உயிர்களுக்கு நீங்காத புகலிடம் ஆவான்.
சொற்பொருள் :
எவையும் - தனு, கரணம், புவனம், போகம் ஆகிய எல்லாப் பொருள்களையும்
ஆக்கி - மாயையிலிருந்து படைத்துக் கொடுத்து
அளித்து - குறித்த காலம் வரை அவை நிலைபெறும்படி காத்து (ஆணவ மலம் ஆகிய மாசு தேய்ந்து மெலிவுற்ற காலத்தில்)
ஆசுடன் - அம்மலத்தோடு
அடங்க - (தான் படைத்துக் கொடுத்த உடம்பு முதலிய பொருள்களையும்) ஒருசேர
போக்கும் - உயிர்களிடமிருந்து நீக்கி அவை தன்னை அடையும்படி செய்கின்ற
அவன் - அவ்விறைவனே
போகாப் புகல் - உயிர்களுக்கு நீங்காத புகலிடம் ஆவான்.

விளக்கம் :
ஆசு : ஆசு என்பதற்குக் குற்றம் என்பது பொருள். உயிரிடத்தில் இயற்கையாகவே ஆணவ மலம் என்ற குற்றம் உள்ளது. உயிர் என்று உண்டோ அன்றே அதனிடத்தில் இந்தக் குற்றமும் உடனாகச் சேர்ந்து இருத்தலினால் சகச மலம் என்று சொல்லப்படும். சகச மலம் - இயற்கையாய் உள்ள அழுக்கு. ஆடையில் உள்ள அழுக்கு அதன் வெண்மையை மறைப்பது போல உயிரிலுள்ள ஆணவ மலமாகிய அழுக்கு அதன் அறிவை மறைத்து நிற்கிறது. அம் மறைப்பினால் உயிருக்கு அறியாமை உண்டாகிறது. அறியாமையினால் வருவது துன்பமே. எனவே முடிவாகப் பார்த்தால் எல்லாத் துன்பங்களுக்கும் மூல காரணம் ஆணவ மலமே என்பது விளங்கும். இது பற்றியே ஆணவ மலம் மூல மலம் என்றும் சொல்லப்படும். இதன் இயல்பையெல்லாம் இருள் மல நிலை என்ற மூன்றாம் அதிகாரத்தில் விரிவாகக் காணவிருக்கிறோம்.
உலக வாழ்க்கை :
மூல மலமாகிய ஆணவத்தை நீக்கும் பொருட்டே உயிரோடு உடம்பு முதலியவற்றைக் கூட்டுவிக்கிறான் இறைவன். உடம்புதனு எனப்படும். மனம் முதலிய கருவிகள் கரணம் எனப்படும். இந்த உலகு புவனம் என்று குறிக்கப்படும். உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்கள் போகம் எனப்படும். உயிர்கள் இறையருளால் தனு கரணம் புவனம் போகம் ஆகிய இந்நான்கினோடும் பொருந்தி வாழ்வதே உலக வாழ்க்கை. உயிர்கள் தனுவாகிய உடம்பினுள் நின்று, கரணங்களின் உதவியால் அறிந்து புவனத்திடையே போக்குவரவு செய்து, போகங்களை நுகர்ந்து கொண்டு வாழ்கின்றன.
ஐந்தொழில்கள் :
உயிர்கள் என்றும் உள்ளவை யாதலின் அவற்றை இறைவன் படைத்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆயின், இறைவனின் தொழில்களுள் ஒன்றாகப் படைத்தல் என்பது கூறப்படுகிறது. அதன் கருத்து, உயிர்களுக்கு வேண்டிய உடம்பு, கருவிகள், நிலம், நுகர்பொருள் ஆகிய நான்கையும் படைத்துக் கொடுக்கிறான் என்பதாகும். உடம்பு முதலிய நான்கும் அறிவற்ற சடப் பொருள்கள். இவற்றை மாயை என்ற சடப் பொருளிலிருந்து இறைவன் தோற்றுவிக்கிறான். குடம் வனைபவன் குடமாகிய காரியத்தைக் களிமண் என்ற காரணப் பொருளிலிருந்து உண்டாக்குகிறான். குடத்திற்குக் களிமண் மூலப் பொருள். அதுபோல, உடம்பு முதலிய நான்கினுக்கும் மாயை மூலப் பொருளாகிறது. இறைவன் செய்வோனாய் நின்று, மாயையிலிருந்து உடம்பு முதலியவற்றை ஆக்குகிறான். இதுவே படைத்தல். இவ்வாறு ஆக்கிக் கொடுத்த உடம்பு முதலியவற்றை அந்தந்த உயிர்களின் வினைக்கேற்றவாறு எத்துணைக் காலம் நிறுத்த வேண்டுமோ அத்துணைக் காலம் நிறுத்தி வைக்கிறான். இதுவே காத்தல். இனி, வினைப் போகமே ஒரு தேகங் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப் போதளவும் நில்லாது என்றபடி முன் நிறுத்திய உடம்பு முதலியவற்றை உயிர்களிடமிருந்து நீக்குதலே அழித்தல் எனப்படுகிறது.
இதனால், படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய இத்தொழில்களை இறைவன் உடம்பு முதலிய சடப்பொருள்களிடத்தில் நிகழ்த்துகிறான் என்பது விளங்கும். இம் முத்தொழில்கள் போக, வேறு இரண்டு தொழில்களையும் இறைவன் செய்கின்றான் என்று சைவ சித்தாந்தம் கூறும். அவை மறைத்தல், அருளல் என்பன. அவற்றைப் பின்வருமாறு விளக்கலாம். பெறுதற்கரிய உடம்பினையும், அறிதற்குரிய ஐம்பொறி முதலிய கருவிகளையும் பெற்ற உயிர்கள் அவற்றைக் கொண்டு உலகை அறிந்து உலக வாழ்வில் மயங்கிக் களிக்கின்றன. உலகில் இன்பம் சிறிதாக, துன்பமே பெரிதாயிருக்கின்றது. துன்பத்தைத் தரும் பல பிணிகளைக் கொண்ட <உடம்பிலே அப்பிணிகளுக்கு இடையில் உயிர் கட்டுண்டிருக்கின்றது. ஆயின் உயிர் தன் நிலையை உணராமல், உலகில் சிறிதாயுள்ள இன்பத்தை நுகர விரும்புகின்றது. இஃது எது போன்றது எனில், பாம்பின் வாயில் அகப்பட்டுள்ள தவளையின் வாயில் பிடிபட்டிருக்கும் வண்டு அந்த நிலையிலும் தன் முன் உள்ள ஒரு பூவில் மறைந்து கிடக்கும் சிறிய அளவினதாகிய தேனை உறிஞ்சி யெடுத்து உண்ண விரும்புதலைப் போன்றது எனலாம்.
இவ்வாறு உயிர்கள் உலக இன்பத்திலேயே விடுதல் அறியா விருப்பம் கொண்டு வாழ்கின்றன. உள் நின்று தம்மைச் செலு<த்தி வருகின்ற இறைவனை அறிய மாட்டாது உலகத்தையே அறிந்து நிற்கின்றன. உலக ஆசை இருக்கின்ற வரையில் உயிர்க்குப் பிறப்பும் உண்டு; இறப்பும் உண்டு. இவ்வாறு இறைவன் உயிர்களுக்குத் தன்னைக் காட்டாமல் மறைந்திருந்து அவற்றைத் துன்பமே மிகுந்த உலக வாழ்வில் இச்சை கொள்ளுமாறு செலுத்தி வரும் செயல் மறைத்தல் எனப்படும். உலக வாழ்வில் பல்காலும் உழன்று வினைத் துன்பத்தை உயிர் நுகர நுகர, அதனைப் பற்றியிருந்த ஆணவ மலம் தேயும்; நல்லுணர்வு சிறிது உண்டாகும். உலகியலில் உவர்ப்புத் தோன்றும். அந்நிலையில் அவ்வுயிர் உலகை நோக்காது இறைவனை நோக்கும். இறைவன் அப்படிப்பட்ட உயிர்களுக்கு ஞானத்தை நல்கி அவை தன்னையடைந்து இன்புறுமாறு செய்வான். இச் செயல் அருளல் எனப்படும். இறைவன் படைத்தல் முதலிய மூன்று தொழில்களையும் சடமாகிய உடம்பும் உலகும் ஆகியவற்றின் மேல் நிகழ்த்துவான் என முன்னே குறிப்பிட்டோம். மறைத்தலும் அருளலு<ம் ஆகிய இவ்விரு தொழில்களையும் இறைவன் சித்தாகிய உயிர்களின் மேல் நிகழ்த்துகின்றான் என்பதை நினைவிற் கொள்ளுதல் வேண்டும். இதுகாறும் கூறியவற்றால் இறைவன் செய்யும் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தாகும் என்பது விளங்கும்.
முத்தொழிலாய் அடங்குதல் :
இறைவன் தொழில்கள் இங்ஙனம் ஐந்தாக, இச் செய்யுளில் ஆக்கி எனவும், அளித்து எனவும், போக்கும் எனவும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றுதானே இறைவன் தொழிலாகக் கூறப்பட்டுள்ளது என எண்ணலாம். இது பற்றிச் சிறிது விளக்குதல் வேண்டும். இறைவன் தொழில்களை ஐந்தாக விரித்து நோக்காமல் படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்றாகத் தொகுத்துக் கூறுதலும் உண்டு. எங்ஙனம் எனில், உடம்பு முதலியவற்றை நிலை நிறுத்தலாகிய காத்தல் தொழில் நிகழ்வதனால் அன்றோ, உயிர்கள் இறைவனை நோக்காது உலகையே நோக்கி நின்று உலக வாழ்வில் மயங்கி நிற்கும் படியான மறைத்தல் தொழில் நிகழ்வதாகிறது. காத்தல் இல்லையேல் மறைத்தல் நிகழ வழியில்லை. எனவே, மறைத்தலைக் காத்தல் தொழிலில் அடக்கிவிடலாம். இனி, ஆணவ மலம் நீங்குதற்குரிய காலத்தில் அதனோடு சேர்த்துத் தான் படைத்துக் காத்த உடம்பு முதலியவற்றையும் ஒரு சேரப் போக்குதலே அழித்தல் தொழில் என்பாராய், ஆசுடன் அடங்கப் போக்கும் என்றார் ஆசிரியர். இதுவே உயிர் மாசு நீங்கிய நிலையாகும். இவ்வாறு உயிரின் மாசினை நீக்குகிற அழித்தல் தொழிலை இறைவன் செய்கிறான் என்பதைச் சொல்லவே, மாசு நீங்கிய உயிரை அவன் ஆட்கொண்டு அருள்புரிகிறான் என்பதும் சொல்லாமலே விளங்கும். எனவே அருளலை அழித்தல் தொழிலில் அடக்கிவிடலாம். இங்ஙனம், மறைத்தல் காத்தலில் அடங்க, அருளல் அழித்தலில் அடங்க, இம்முறையில் ஐந்தொழிலும் முத்தொழிலாய் அடங்கி நிற்றல் காணலாம். இத் தொகுத்தல் முறை பற்றியே ஆசிரியர் இறைவன் தொழிலை மூன்றாகக் கூறினார் என அறியலாம். இச்செய்யுள், இறைவன் செய்யும் முத்தொழில்களை வெளிப்படையாகவும் அவன் உயிர்களிடத்துச் செய்யும் மறைத்தல், அருளல் என்னும் இரண்டு செயல்களைக் குறிப்பாகவும் உணர்த்துகிறது.
கட்டுநிலையும் முத்தி நிலையும் :
ஆசுடன் கூடி நின்ற நிலை உயிர்க்குக் கட்டு நிலை என்று சொல்லப்படும். கட்டு நிலையைக் குறிக்கப் பந்தம், பெத்தம் என்ற வேறு சொற்களும் நூல்களில் வழங்கும். கட்டு நீங்கி இறைவனை அடையும் நிலை முத்தி நிலை என்று சொல்லப்படும். கட்டு நிலை என்றும் துன்பமே யாதலின் அதனின் நீங்கி இறைவனையடையும் முத்தி நிலையே இன்புறு நிலையாகும்.
போகாப் புகல் :
போக்கும் அவன் போகாப் புகல் என்று முரண் சுவை அமைத்துக் கூறுகிறார் ஆசிரியர். உயிரிடத்துள்ள ஆசினை அவனே நீக்குகிறான். ஆயின் அவனோ உயிரிடத்தில் இமைப் பொழுதும் நீங்காதவனாய் இருக்கிறான். உயிர்களுக்கு இரண்டு நிலைகள் தாம் உண்டு. ஒன்று, கட்டு நிலையில் இருக்கும். அதிலிருந்து விடுபட்டால் முத்தி நிலையில் இருக்கும். இவ்விரண்டு நிலைகளிலு<ம் உயிர்களுக்குப் புகலிடமாய் உள்ளவன் இறைவனே. நாம் என்றும் இறைவனிடம் அடங்கியிருக்கிறோம் என்பதையும், அவனே நமக்கு என்றும் துணையாக உள்ளவன் என்பதையும் கட்டுண்ட உயிர்கள் உணர்வதில்லை. மனைவி மக்கள், உற்றார் உறவினர் முதலியோரையே உற்ற துணை என்று எண்ணுகின்றனர். இவர்களெல்லாம் இடையிலே வந்து சேர்ந்தவர்கள்; இடையிலே நீங்கக் கூடியவர்கள். இவர்கள் எப்படிக் கடைசி வரை துணையாக இருக்க முடியும்? இறைவன் ஒருவனே நமக்குப் போகாப் புகல் என்ற உண்மையைத் தெளிந்து அவனையே புகலாக அடைதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...