வெள்ளி, 3 நவம்பர், 2017

48. மூவகை உயிர்களுக்கும் ஞானம் உணர்த்தும் முறை

48. மூவகை உயிர்களுக்கும் ஞானம் உணர்த்தும் முறை
அகலர்த் தரும் அருளை; ஆர்க்கும் வினை நீக்கும்;
சகலர்க்கு வந்து அருளும் தான்.

பொருள் : இறைவன் விஞ்ஞானகலர் ஆகிய உயிர்களுக்கு உள்ளிருந்தே ஞானத்தை உணர்த்துவான்; பிரளயாகலர் ஆகிய உயிர்களுக்குத் தெய்வ வடிவில் முன்தோன்றி அவரைப் பிணித்துள்ள வினையை நீக்கி ஞானத்தை அருள்வான். சகலர் ஆகிய உயிர்களுக்கு ஆசிரியர் வடிவில் வந்து அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தை அருள்வான்.
சொற்பொருள் :
தான் - இறைவன்
அகலர்(க்கு) - விஞ்ஞானகலர் ஆகிய அகலர்க்கு
அருளைத் தரும் - குருவாகி வராமலே உள்நின்று ஞானத்தை உணர்த்திவிடுவான். (பிரளயாகலர் ஆகிய அகலர்க்கு இறைவன் தனது இயற்கை வடிவத்துடன் முன்னே நின்று)
ஆர்க்கும் வினை - அவரைப் பிணித்துள்ள வினையாகிய கட்டினை
நீக்கும் - அறுத்து ஞானத்தை உணர்த்துவான்
சகலர்க்கு - (இனி, மேற்கூறிய இருவர் போலன்றி) மாயாமல பந்தம் உடையவராகிய சகலர்க்கு
வந்து - குரு வடிவில் பின்நின்று
அருளும் - அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தை அருள்வான்.

விளக்கம் :
மூவகை உயிர்களும் இறைவன் உணர்த்தவே ஞானத்தைப் பெறும் என்பதும், அவர் தம் பக்குவ வேறுபாட்டிற்கு ஏற்ப அவர்களுக்கு ஞானத்தை உணர்த்தும் முறை ஒரே வகையாக அமையாமல் வெவ்வேறாய் அமையும் என்பதும் இச்செய்யுளில் கூறப்பட்டன. அகலர் பற்றியும், சகலர் பற்றியும் உயிரவை நிலையில் (செய்யுள் 12,13) விரிவாக அறிந்தோம். விஞ்ஞான கலரும், பிரளயா கலரும் அகலர் எனப்படுவர். அவ்விருவருக்கும் இறைவன் அருள்புரியும் முறைமை முதலடியில் கூறப்பட்டுள்ளது. முதலடியில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்கியம் விஞ்ஞான கலர் பற்றியது. இரண்டாம் வாக்கியம் பிரளயாகலர் பற்றியது. எனவே, விஞ்ஞானகலர்க்கு (உள்நின்று) அருளைத் தரும்; பிரளயாகலருக்கு (முன்நின்று) ஆர்க்கும் வினையை நீக்கும் எனப்பொருள் கொள்ள வேண்டும்.
ஆணவம் ஆகிய ஒரு மலம் மட்டுமே உடையவர் விஞ்ஞான கலர். அம்மலமும் அவர்களிடம் மிக மெல்லியதாய் வாசனை அளவாய் நிற்கும். அஃது அவர்கள் அறிவை மயக்காது. ஆதலால் அவர்களுக்கு இறைவன் உயிர்க்குயிராய் உள்நின்று உணர்த்தினாலே போதும். அவர்கள் ஞானம் பெற்று விடுவர். பிரளயாகலரிடத்தில் ஆணவமலம் வன்மையாயும் இல்லாமல், மென்மையாயும் இல்லாமல், இடைப்பட்ட நிலையில் இருக்கும். அவர்களுக்கு வினையும் உண்டு. இவ்வாறு இருமலம் உடையவராயிருப்பர். இம்மலங்களால் ஓரளவு மயங்கும் நிலை அவர்களுக்கு இருக்கும். அவர்களில் பக்குவம் உடையவர்களுக்கு இறைவன் நான்கு தோள்களும், முக்கண்ணும், கறைமிடறும் ஆகிய தனது இயற்கை வடிவத்துடன் முன் தோன்றி ஞானத்தை உணர்த்துவான். இனி, சகலர் என்போர் மும்மலம் உடையோர். ஆணவ மலம் அவர்களை வன்மையாய்ப் பற்றியிருக்கும். வலியவினையும் அவர்களைப் பிணித்திருக்கும். பெரு மயக்கத்தைச் செய்கின்ற பிரகிருதி மாயையின் தொடக்கத்தில் அகப்பட்டவர்கள் அவர்கள். அவர்களில் பக்குவப்ட்டவர்களுக்கு ஞானத்தை வேறு முறையில் தான் உணர்த்தவேண்டும். பிரளயாகலருக்குப் போல, இவர்களுக்கும் நேர் நின்று அருள் புரிய இறைவன் தனது உண்மை வடிவில், அஃதாவது நான்கு தோள்களும் நெற்றிக் கண்ணும் நீலகண்டமும் ஆகிய வடிவில், முன்னே தோன்றினால் அவர்கள் அதைக் கண்டு அஞ்சி விடுவர். மக்கள் வடிவிற்கு வேறுபட்ட எந்த வடிவமும் அவர்களுக்கு அச்சத்தையே தருவதாகும். அதுபற்றியே சகலராகிய பக்குவான்மாக்கள் அச்சமின்றி அணுகுதற் பொருட்டு இறைவன் தனது உண்மை வடிவில் தோன்றாமல் ஆசிரியர் வடிவில் மறைந்து நின்று ஞானத்தை உணர்த்துவான் என்பது கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...