வெள்ளி, 3 நவம்பர், 2017

47. இருள் நீங்குவது குருவின் திருநோக்கால்

47. இருள் நீங்குவது குருவின் திருநோக்கால்
விடம் நகுலம் மேவினும் மெய்ப் பாவகனின் மீளும்
கடனில் இருள் போவது இவன் கண்.

பொருள் : பாம்பு கடித்து ஏறிய நஞ்சானது, பாம்புக்குப் பகையாகிய கீரியே வந்து கடிபட்டவன் உடல் மீது விழுந்து புரண்டாலும் நீங்காது. ஆயின், மாந்திரிகன் ஒருவன் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவித்து அந்த மந்திர வடிவேயாக நின்று பார்க்கும் பார்வையினால் அந்தவிடம் நீங்குவதாகும். உயிரில் உள்ள மலமாகிய இருள் நீங்குவதும் இம்முறைமையில் ஆகும். இறைவன் உயிர்க்கு உயிராக உடன் நின்ற போதிலும் <உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்குவதில்லை. இறைவனாய் நிற்கும் ஞான குருவின் திருநோக்கத்தாலேயே அது நீங்குவதாகும்.
சொற்பொருள் :
விடம் - பாம்பு கடித்து ஏறிய நஞ்சு
நகுலம் - பாம்புக்குப் பகையாகிய கீரியே
மேவினும் - நேரே வந்து பாம்பு தீண்டியவனது உடல்மேல் விழுந்து புரண்டாலும் (நீங்காது. ஆனால்)
மெய்ப்பாவகனின் - மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவிக்கவல்ல உண்மையான மாந்திரிகனது பார்வையால்
மீளும் - நீங்கும்
கடனில் - முறைமை போல
இருள் - ஆணவ மலமாகிய இருள்
போவது - நீங்குவது
இவன் - (உ<யிர்க்கு <உயிராய் உள் நிற்கும் சிவனால் அன்றி) சிவமேயாய் நிற்கும் ஞானகுருவின்
கண் - திருநோக்கினால் ஆகும்.

விளக்கம் :
இறைவன்தான் ஆன்ம அறிவில் எப்பொழுதும் நீங்காமல் இருக்கிறானே. அவ்வாறு இருக்கின்ற அவன் உள்ளிருந்தபடியே ஆணவ மலத்தை நீக்கக் கூடாதா? என்று கேட்கலாம். அக்கேள்விக்கு விடையாகவே இச் செய்யுளை அமைத்துள்ளார் ஆசிரியர். மாந்திரிகளை உவமை காட்டி மேற்கூறிய ஐயத்தைத் தெளிவிக்கிறார். கருட பாவனை என்பது நூல்களில் சொல்லப்படுகிறது. அதனை அறிந்து கொண்டால் இச் செய்யுளில் கூறப்பட்டுள்ள பாவகன் நிலை எளிதில் விளங்கிவிடும். மந்திர நூல்களில் உலகப் பொருள் ஒவ்வொன்றும் மூன்றாகப் கொள்ளப்படுகிறது. அவை பவுதிகப் பொருள் என்பன. பவுதிகப் பொருள் என்பது உலகத்தில் நாம் கண்ணாற் காணும் பொருள். அப்பொருளுக்குரிய மந்திரம் ஆன்மிகப் பொருள் எனப்படும். அம் மந்திரத்தை இடங்கொண்டு பயன்தரும் அதி தெய்வம் தைவிகப் பொருள் எனப்படும். கருடனிடத்திலும் இவ்வாறு மூன்று உள்ளன என அறியலாம். நாம் காணும் கருடப் பறவை ஆதி பவுதிக கருடன். அதற்குரிய மந்திரம் ஆதி ஆன்மிக கருடன். அந்த மந்திரத்திற்குரிய அதி தெய்வம் ஆதி தைவிக கருடன். இங்கே, அதி தெய்வம் என்றது சிவனது சத்தியேயாகும். அச் சத்தியே மந்திர வடிவாய் நின்று அம்மந்திரத்தைக் கணிக்கும் மாந்திரிகனுக்குப் பயன் தருகிறது.
மாந்திரிகன் அந்தச் சக்தியைத் தியானிக்கிறான்; அந்தச் சத்தியையே தானாகப் பாவிக்கிறான். ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது என்பது நாம் அறிந்தது. அம்முறையில் மாந்திரிகனது ஆன்மா மந்திர வடிவாய் உள்ள சத்தியைத் தானாகப் பாவித்தால் அந்தச் சத்தி மயமாய் ஆகி விடுகிறது. அதனால் அவன் கருடனாகவே நிற்கிறான். அவனது உடம்பு கருடனாக மாறவில்லை. அவன் மந்திர கருடனை நாள்தோறும் தியானித்துப் பழகிய பயிற்சியினால் அவனது ஆன்மா அக்கருடனே தானாய் நிற்கிறது. எனவே, கருடனாய் நிற்கிறான் என்பதற்குப் பொருள், மந்திர வடிவாய் நிற்கிறான் என்பதே யாகும். அவ்வாறு நின்று அவன் பாம்பினால் கடியுண்டவனைத் தன் மந்திரக் கண்கொண்டு பார்ப்பானாயின் விடம் நீங்கியொழியும். சிவசத்தியே மந்திர வடிவாய் நின்று விடத்தை நீக்குகிறது. இக்கருடபாவனை போல மாந்திரிகன் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவிக்கின்ற பாவனையை இச்செய்யுளில் கூறியுள்ளார் ஆசிரியர். கருடபாவனை பற்றி மேலே சொன்ன அத்தனையும் இப்பாவனைக்கும் பொருந்தும். கீரியே நேரே வந்தும் பாம்பின் விடம் நீங்காமை, இறைவன் உயிரில் பொருந்தியிருந்தும் உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்காமைக்கு உவமையாகும். மந்திர வடிவாய் நிற்கும் பாவகன் அருள் மயமாய் நிற்கும் குருவிற்கு உவமையாவான். பாவகனது மந்திரப் பார்வையால் விடம் நீங்குதல், குருவினது அருள் நோக்கத்தால் மலம் போவதற்கு உவமையாகும். இறைவன் சகலர் ஆகிய உயிர்களுக்கே இவ்வாறு குருமூர்த்தி வழியாக மலத்தைப் போக்கி ஞானத்தை உணர்த்துவான். சகலரினும் மேம்பட்ட வேறு உயிர்களுக்கு அவன் வேறு வகையில் உணர்த்துவான். அம்முறைகளை அடுத்த செய்யுளில் நாம் காணவிருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...