வெள்ளி, 3 நவம்பர், 2017

46. அருளாசிரியரின் இன்றியமையாமை

46. அருளாசிரியரின் இன்றியமையாமை
எமக்கு என்? எவனுக்கு எவை தெரியும் அவ்வ
தமக்கு அவனை வேண்டத் தவிர்.

பொருள் : எந்த ஒருவனுக்கு எந்தக் கலை தெரியுமோ அந்தக் கலையை அறிந்து கொள்வதற்கு அந்த ஒருவனது துணையையே நாட வேண்டியுள்ளது. அப்படியிருக்க, ஞானமாகிய அரிய பொருளை அறிய விரும்பும் நாம் அந்த ஞானத்தை உணர்த்தும் வல்லமையுடைய ஞானாசிரியரின் துணையை அல்லவா நாட வேண்டும்? அப்படிச் செய்யாமல், ஞானாசிரியரின் துணை இல்லாமலே ஞானத்தைப் பெறலாம் என்று கருதுவது பேதமையாகும்.
சொற்பொருள் :
எவனுக்கு - எவன் ஒருவனுக்கு
எவை தெரியும் - எக் கலைகள் நன்கு தெரியுமோ
அவ்வ - அக் கலைகளை
தமக்கு - தாம் தெரிதற் பொருட்டு
அவனை வேண்ட - அவனது துணையையே உலகத்தார் நாடி நிற்றல் எங்கும் காணப்படும் இயல்பாக இருக்க,
எமக்கு - ஞானத்தைப் பெற விரும்பும் எமக்கு
தவிர் - அதனை உணர்த்த வல்ல ஞானாசிரியரின் துணையைத் தவிர்தல்
என்? - எவ்வாறு கூடும்?

விளக்கம் :
இச்செய்யுளின் நடை, அதன் பொருள் எளிதில் விளங்காதபடி கடினமான முறையில் அமைந்துள்ளது. எனவே, சொற்களைப் பின்வருமாறு அமைத்துக்கொண்டு பொருள் செய்தல் வேண்டும். எவனுக்கு எவை தெரியும் - எவன் ஒருவனுக்கு எக் கலைகள் தெரியுமோ? அவ்வ தமக்கு அவனை வேண்ட - அக்கலைகளை அறிந்து கொள்வதற்கு அந்த ஒருவனது துணையை நாடுதலே உலகத்தில் காணப்படும் இயல்பாக இருக்க, தவிர் எமக்கு என்? - ஞானத்தை உணர்த்தவல்ல ஞானாசிரியர் துணையைத் தவிர்தல் ஞானத்தை உணர விரும்பும் நமக்கு எங்ஙனம் கூடும்? இதன் பொருளை மேலும் சிறிது விளக்குவோம். வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் ஓர் இளைஞன் சமையல் செய்யும் முறையைக் கற்றுக் கொள்ள விரும்பினான். கடைக்குச் சென்று சமையல் செய்வது எப்படி என்பது பற்றிய வகைவகையான புத்தகங்களில் சிலவற்றை வாங்கி வந்தான். அவற்றைப் படித்துப் பார்த்தபோது அவனுக்குக் குழப்பந்தான் உண்டாயிற்று. ஏனென்றால் ஒன்றில் உள்ளது போல, மற்றொன்றில் இல்லை. ஏதோ ஒரு வகையாகத் தாளில் குறிப்பெடுத்துக் கொண்டு சிற்றுண்டி செய்து பார்த்தான். தோசை மாவைக் கல்லில் வார்த்துப் பெயர்த்து போட முயன்றான். ஆனால், அது கல்லோடு அத்துவித இயைபு கொண்டு விட்டது போலும்! திருப்பிப் போட முடியாதபடி அது கல்லோடு ஒட்டிக் கொண்டு விட்டது. மற்றொரு சமயம், உப்புமா என்ற பெயரைப் பார்த்து உப்பை அள்ளிப் போட்டு விட்டான் போலும்! அதைக் கீழே கொட்டுவதைத் தவிர வேறுவழியில்லை. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். சமையல் புத்தகங்களை யெல்லாம் மூட்டை கட்டி வைத்தான். பேசாமல் (சமையல் தெரிந்த) ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டான்.
எளிய சமையலு<க்குக் கூட நூல்கள் கைகொடுத்து உதவாதபோது, இசை நாட்டியம் போன்ற நுண் கலைகளை அவை பற்றிய நூல்களைப் பயின்றே ஒருவர் தெரிந்து கொண்டு விடலாம் என்று கூறுவது எவ்வளவு அறியாமை என்பது புலனாகும். அவ்வக் கலைகளில் வல்ல ஆசிரியரைத் துணையாகக் கொண்டே அக்கலைகளை நாம் அனுபவமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு அவ்வாசிரியரிடம் பல காலம் முறையாகப் பயில வேண்டும். அவரது வழிகாட்டுதல் மூலமாகவே அக்கலைகளைப் பற்றிய நுணுக்கங்களைப் பெற முடியும். உலகியல் கலைகளின் நிலையே இவ்வாறிருக்க, உலகியல் கடந்த பொருளாகிய ஞானத்தை ஞானாசிரியர் இல்லாமலே நூல்கள் வழியாகப் பெற்றுவிட முடியும் என்று கூறுவது எத்துணைப் பேதைமை என்பது இதனால் விளங்கும். ஞானாசிரியன் இல்லாமல் கற்கும் போது ஞான நூல்களின் பொருள் விளங்காமல் நிற்கும்; அல்லது மாறுபாடாகத் தோன்றும். ஆதலால் ஞானநூல்கள் ஞானகுரவன் இன்றிப் பொருள் தெளிவைத் தரமாட்டா. சத்தி நிபாதம் என்னும் பக்குவம் வரப்பெற்றோர், தாமே மெய்ந்நெறியை உணர்ந்து ஒழுக முடியாதா? அவருக்கும் ஞானாசிரியர் வேண்டுமோ? என்று கேட்கலாம். பிறவியிலேயே கண்ணில்லாதவன் ஒருவன் மருத்துவ முறையினால் கண் பார்வை பெற்றான் என்றால், அவன் பொருள்களைக் காணும் திறனைப் பெற்றவன் ஆகிறான். ஆனால், இது இன்னபொருள் என்பதை அவனால் உணர முடியாது. அந்தப் பொருளை அறிந்த வேறொருவன் உணர்த்தவே அவன் அதனை உணர்தல் கூடும். அதுபோல, சத்தி நிபாதம் என்னும் பக்குவநிலையில் ஆணவ மல மறைப்பு நீங்கப் பெற்றவர் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணரும் ஆற்றலைப் பெறுவரே யன்றித் தாமே அப் பொருள்களின் இயல்பைத் தெரிந்து கொள்ள மாட்டார். அவற்றின் இயல்பையெல்லாம் உணர்ந்த ஞானாசிரியர் உணர்த்தவே அவற்றை உணர்ந்து கொள்ள முடியும். சத்தி நிபாதம் வரப் பெற்றோர்க்கும் அருளாசிரியரின் துணை இன்றியமையாதது என்பதை இச்செய்யுளில் வலியுறுத்தியுள்ளார் உமாபதி சிவம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...