45. குருவடிவாகிய போர்வை
பார்வை யென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வை யெனக் காணா புவி.
பொருள் :
பழகிய விலங்கைக் காட்டிக் காட்டு விலங்குகளைக் கைப்பற்றுவதுபோல, இறைவன் நம்மைப் போல் இருப்பவராகிய ஞான குருவைக் கொண்டு பக்குவ ஆன்மாக்களை வயப்படுத்தி ஆட்கொள்ளுகிறான். இறைவன் தன்னை மறைத்துக் கொண்டு வரும் போர்வையே குருவடிவம் என்ற உண்மையை உலகத்தார் உணர மாட்டார்.
சொற்பொருள் :
பார்வையென - காட்டு விலங்குகளைக் கைப்பற்றுவதற்கு வாயிலாக வேடர் பழக்கி வைத்திருக்கும் பார்வை விலங்கு போல
மாக்களை - பக்குவ ஆன்மாக்களை
முன்பற்றிப் பிடித்தற்கு - ஆட்கொள்ளுதற் பொருட்டு
ஆம் போர்வை யென - இறைவன் தன்னை மறைத்துக் கொண்டுவரும் போர்வையே குருவடிவம் என்று
புவி - <உலகத்தார்
காணா - உணர மாட்டார்கள்.
விளக்கம் :
தீ இரும்பைத் தன் வண்ணம் ஆக்குவது போலச் சுத்தான்மாவாகிய குருவைச் சிவன் தானாக்கி விடுவான். அந்நிலையில் அந்தக் குரு சிவனேயாவார். அவர் சிவனேயான தன்மை பக்குவம் வாய்ந்த மாணவர்க்கு இனிது புலப்படும்.
சற்குருவின் செயல் :
சிவனது அருளே தன் வடிவாய் நிற்கின்ற உண்மைக் குருவாகிய அவர் தன்னை அடைந்த மாணவர் பலருள்ளும் பாசப்பற்று அறும் பக்குவத்தை எய்திய மாணவனுக்கே ஞானத்தை உணர்த்துவார். அவர் ஒரு வார்த்தையைச் சொல்வாராயின், அந்த ஒரு வார்த்தை முப்பொருளின் இயல்பை உள்ளவாறு விளங்கச் செய்யும். அவர் தனது அருள் மொழியாலும், திருவடி சூட்டலாலும் தன்னை அடைந்த மாணவராகிய பசுவைப் பாசங்களினின்றும் நீக்கிச் சிவத்தில் சேர்க்க வல்ல சற்குரு ஆவார். மேற்கூறியவற்றால், ஞானகுரு தோற்றத்தால் நம்மில் ஒருவர் போல இருப்பினும் உண்மையில் அவர் நம்மின் வேறானவர் என்பது விளங்கும். ஓர் உவமை மூலம் இக்கருத்தை விளங்க வைக்கிறார் ஆசிரியர் <உமாபதிசிவம்.
பார்வை விலங்கும், குரு வடிவமும் :
வேடர்கள் காட்டு விலங்குகளைக் கையகப்படுத்துவதற்காக அவ்வவ் இனத்து விலங்கினைப் பழக்கி வைத்திருப்பர். அது பார்வை விலங்கு எனப்படும். அவ்விலங்கினைக் கொண்டு அவ்வினத்தைச் சேர்ந்த காட்டு விலங்குகளை அழைக்கச் செய்து பின் அவற்றைக் கைப்பற்றுவர். இந்தப் பார்வை விலங்கு போன்றது குரு வடிவம். பார்வை விலங்கைக் கண்டு ஏனைய விலங்குகள் அச்சமின்றி அணுகி வரும். அதுபோல இறைவன் தன்னை மறைத்துக் கொண்டு நிற்கும் குருவடிவம் பக்குவ ஆன்மாக்கள் ஆகிய மாணவர்கள் அச்சமின்றி அணுகி ஆட்படுவதற்கு வாயிலாய் உள்ளது.
நம்மின் வேறானவர் :
பார்வை விலங்கு தோற்றத்தால் ஏனைய விலங்குகள் போல இருப்பினும் உண்மையில் அவற்றினின்றும் வேறானதுபோல, ஞான குருவும் நம்மனோர் போலத் தோன்றினாலும் <உண்மையில் அவர் நம்மின் வேறானவரே யாவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக