வெள்ளி, 3 நவம்பர், 2017

44. உலகர் உணராமைக்குக் காரணம்

44. உலகர் உணராமைக்குக் காரணம்
பொய் இருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய் இரண்டும் காணார் மிக.

பொருள் : ஆணவ மலமறைப்பினால் இருண்ட அறிவினையுடைய, பக்குவம் இல்லாத மாந்தர் ஞானமாகிய அருளையும் அறியார். அந்த அருளின் வடிவாகிய ஞானகுருவின் நிலையையும் அறியார்.
சொற்பொருள் :
பொய் - ஆணவ மல மறைப்பினால்
இருண்ட - அறியாமையே வடிவான
சிந்தை - அறிவினை உடையவராகிய
பொறியிலார் - திருவருளைப் பெறும் பக்குவம் இல்லாதவராகிய உலகர்
போதம் - ஞானம் ஆகிய அருளும்
ஆம்மெய் - அந்த அருள் கொண்டதாகிய குருவடிவும்
இரண்டும் - ஆகிய இவ்விரண்டையும்
மிகக் காணார் - முற்றிலும் அறிய மாட்டார்.

விளக்கம் :
பொய் :
ஆணவ மலத்தைப் பொய் என்ற சொல்லால் குறித்தார் ஆசிரியர். ஆணவ மலம் தன்னைப் பற்றியிருக்கிறது என்பதை உயிர்கள் சிறிதும் அறியமாட்டா. அம்மலம் உயிருக்குப் புலனாகாமல் உயிரின் கண் இல்லை என்று சொல்லும்படி பொய்ப் பொருள் போல் நிற்றலின் அதனைப் பொய் என்றார்.
பொறியிலார் :
பொறி என்பதற்கு, இவ்விடத்தில் பக்குவம் என்று பொருள் கூறப்பட்டது. திருவருளைப் பெறும் பக்குவம் இல்லாதவர் பொறியிலார் எனப்பட்டார். அவர்கள் அருளும் அருள் கொண்டதாகிய குரு வடிவும் ஆகிய இரண்டினையும் அறிய மாட்டார். அதற்குக் காரணம் ஆணவ மலமேயாகும். ஆணவமலம் உடையார்க்கு <உண்மை விளங்காது.
அருளும் குருவடிவும் :
போதமாம் மெய்யிரண்டும் என்ற தொடரை போதம், ஆம் மெய் ஆகிய இரண்டும் எனப் பிரித்து வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். போதம் என்பது ஞானம். இங்கு இறைவனது ஞானமாகிய அருளைக் குறித்தது. ஆம் மெய் என்பது அந்த அருள் கொண்டதாகிய குருவடிவு எனப் பொருள்படும். சிவனே குரு வடிவம் கொள்வான் என்று இதுவரை கூறிவந்து இங்கு, அருளே குருவடிவம் கொள்கிறது என்று கூறுவது ஏன்? என்று கேட்கலாம். சிவனும் அருளும் தம்மில் வேறல்ல என்பதை உணர்ந்தால் இவ்வினா எழாது. குருவாய் நின்று உணர்த்துவது சிவனே என்றாலும், குருவாய் நின்று உணர்த்துவது அருளே என்றாலும் பொருள் ஒன்றேதான். மலமாசு தீர்ந்து வாழும் தூய ஆன்மா ஆனவரின் அறிவில் இறைவனது அறிவாகிய அருள் விளங்கி நின்று அவ்வான்ம அறிவைத் தன் வயப்படுத்துகிறது. தன் வயப்படுத்துதலுக்கு ஓர் எடுத்துக் காட்டுக் கூறலாம். உலையில் இட்ட இரும்பை உலைத் தீ தன்னுள் அடக்கி அவ்விரும்பினிடத்தில் தீயே விளங்கி நிற்கிறது. இரும்பின் தன்மை கீழ்ப்பட்டு அடங்க, தீயின் தன்மையே மேம்பட்டு நிற்கிறது. இரும்பின் தன்மை என்பதின்றித் தீயே உள்ளது என்று சொல்லும்படி அவ்விரும்பைத் தீ தன் வயப்படுத்தி உள்ளது. அதுபோல இறைஞானமாகிய திருவருள் சுத்தான்மாவின் அறிவைத் தன்னுட்படுத்தி தானேயாய் விளங்கி நிற்கிறது.
தீயாய் நின்ற இரும்பு சுடுதலைச் செய்கிறது. இரும்பா அத்தொழிலைச் செய்கிறது? இரும்பை வயப்படுத்தி நின்ற தீயின் தொழில் அல்லவா அது? அதுபோல சுத்தான்மாவாகிய குருநாதர் ஞானத்தை உணர்த்துகிறார் என்றால், அச்செயல் அவர் செயலன்று. அவரறிவைத் தன்னுட்படுத்தி மேம்பட்டு நிற்பதாகிய அருள் செய்கின்ற செயல் அது. இதனால் அருள் குருவாய் நின்று உணர்த்துமாறு இனிது விளங்கும். இதுபற்றியே ஞானமாகிய அருளும், அந்த அருள் கொண்டதாகிய குருவடிவும் ஆகிய இரண்டையும் போதம் ஆம் மெய் இரண்டும் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...