வெள்ளி, 3 நவம்பர், 2017

43. குருவின் நிலையை உலகர் உணராமை

43. குருவின் நிலையை உலகர் உணராமை
அருளா வகையால் அருள் புரிய வந்த
பொருளா அறியா புவி.

பொருள் : சிவமாகிய முதற்பொருளே நேர் நின்று அருளாமல் குரு வடிவில் மறைந்து நின்று அருள் செய்ய நினைந்து இவ்வாறு வந்திருக்கிறது என்பதை உலகத்தார் உணரமாட்டார்கள்.
சொற்பொருள் :
அருளா வகையால் அருள்புரிய - நேரே வந்து அருளாமல், குருவடிவில் மறைந்து நின்று அருள் புரிதற்கு
வந்த - வந்திருக்கின்ற
பொருளா - சிவமாகிய முதற்பொருள் என்று
புவி - உலகத்தார்
அறியா - ஞானகுருவை உணர மாட்டார்கள்.

விளக்கம் :
உண்மையை உணரும் பக்குவம் இல்லாத உலக மக்கள் ஞானாசிரியரைத் தம்மில் ஒருவராகவே கண்டு போவர். ஞானாசிரியர் சிவமே என்பது பக்குவம் உடைய மாணாக்கர்க்கே விளங்குவதாகும். இதனை விளக்கும் நிகழ்ச்சியொன்றை இங்கே குறிப்பிடலாம். துறையூரில் ஒரு சிவாச்சாரியார் சிறந்து விளங்கினார். சகலாகம பண்டிதர் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தார். மெய் கண்டார் ஆகிய ஞானக் குழந்தை பிறப்பதற்கு அவர்தம் தந்தையாருக்கு வழியருளிச் செய்தவர் இவரேயாவர். அக்குழந்தை மூன்றாண்டு நிரம்பாத அப்பிள்ளைப் பருவத்திலேயே இறையனுபவம் கைவரப் பெற்று ஞானத்தை உபதேசித்து வருவது பற்றிக் கேள்விப்பட்டார் சகலாகம பண்டிதர். அக் குழந்தையைக் காண விரும்பித் திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்றார். அங்குள்ளோர் அவரைச் சிறப்பாக வரவேற்று, மெய்கண்டார் ஆகிய அக்குழந்தை இருக்குமிடத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். மெய்கண்டார் தம் மாணவர்களுக்கு ஆணவ மலம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அந்நிலையில் அவர் முன்னே போய் நின்றார் சகலாகமபண்டிதர். தம்மை அக்குழந்தை வந்து வணங்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவ்வாறு நிகழவில்லை. அதனால் அவர் உள்ளத்தில் சிறிது வருத்தம் உண்டாயிற்று. அத்தோடு தம்மை விட அக்குழந்தைக்கு என்ன தெரியும் என்ற எண்ணமும் எழுந்தது.
அவர் மெய்கண்ட தேவரைப் பார்த்து ஆணவ மலத்தின் இயல்பு யாது? எனக் கேட்டார். மெய் கண்டார் மறுமொழி ஏதும் கூறவில்லை. அவரை அடிமுதல் முடிவரை ஏற இறங்க நோக்கித் தமது வலக்கைச் சுட்டு விரலால் அவரையே சுட்டிக் காட்டினார். மெய்கண்ட தேவரது அருள்நோக்கத்தால் சகலாகம பண்டிதரிடமிருந்த ஆணவ மலம் அடியோடு அகன்றது. சிவனே குழந்தை வடிவில் ஞானகுருவாய் எழுந்தருளியிருப்பதை உணராதபடி செய்தது தம்மிடமிருந்த மலச் செருக்கே என்று உணர்ந்தார். மெய்கண்டாரை கண்ணுதலும் கண்டக் கறையும் கரந்தருளி மணணிடை வந்த சிவனாகவே தெளிந்து, அவரது திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சினார். மெய்கண்ட தேவர் அவரை ஆட்கொண்டு அருள்நந்தி என்னும் தீக்கைப் பெயர் சூட்டித் தம் மாணாக்கருள் அவரைத் தலைவராகக் கொண்டருளினார். மலம் நீங்கிய பக்குவர்க்கே ஞானாசிரியர் நிலை உள்ளவாறு விளங்கும் என்பதை இந்நிகழ்ச்சி வாயிலாக அறியலாம். உலகத்தார் உணராமற் போவதற்குக் காரணம், அவரிடமுள்ள பக்குவமின்மையே என்பது சொல்லாமலே விளங்கும். இதுபற்றி அடுத்த செய்யுளில் எடுத்து விளக்குவார் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...