2. சத்தியோடு கூடியவன்
தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும் சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.
பொருள் : ஒருவனாகிய எம் இறைவன் பிறப்பு இறப்பிற் படாமல் என்றும் ஒரு தன்மையனாய் உள்ளவன். அந்த நிலைமையைப் பலவாகிய உயிர்களும் பெறும்படியாகச் செய்யும் தனது சத்தியோடு அவன் வேறின்றி நிற்கிறான்.
சொற்பொருள் :
எங்கள் பிரான் - எம் இறைவன்
தன் நிலைமை - பிறப்பு இறப்புக்கள் இன்றி, என்றும் ஒரு தன்மையனாய் இருக்கின்ற தனக்குள்ள அந்த நிலைமையை
மன் உயிர்கள் - தன்னைப்போல நிலை பெற்றவனாகிய எல்லாவுயிர்களும்
சார - அடையும்படியாக
தரும் - உதவி செய்கின்ற
சத்தி - தனது சத்தியோடு
பின்னம் இலான் - வேற்றுமையின்றி நிற்கின்றான்.
விளக்கம்
தன்னிலைமை : அறியாமையைச் செய்யும் ஆணவ மலமும், பிறவித் துன்பத்தைத் தரும் கன்ம மலமும், அசுத்தமாகிய மாயா மலமும் ஆகிய மும் மலங்களின் தொடர்பை உடையன உயிர்கள். இம்மலத் தொடர்பினாலேயே அவை பிறப்புட் படுகின்றன. இறைவன் மலத்தோடு சிறிதும் தொடர்பில்லாதவன். அதுபற்றியே நின்மலன் எனப்படுகின்றான். மல சம்பந்தம் இன்மையால் அவனுக்குப் பிறப்பில்லை என்பது அறியப்படும்.
மாற்றம் என்பது பிற பொருளின் வயப்படுவதால் வருவது. இறைவன் மலங்களின் வயப்படாமல் தன் வயத்தனாய் நிற்பவன். ஆகவே அவன் மாற்றமடையாமல் என்றும் ஒரு தன்மையனாய் நிற்பான் என்பது அறியப்படும். இவ்வாறு பிறப்பிற் படாது என்றும் யாதொரு மாற்றமும் இன்றி நிற்பதே இறைவனின் நிலைமையாகும். <உயிர்கள் மலங்களின் வசப்பட்டு, நிலையில்லாத உலகச் சார்பை எய்தி, மாறி வரும் பிறவிச் சுழற்சியிற் பட்டுத் திரிகின்றன. இச் சுழற்சியிலிருந்து விடுபட்டு <உயிரானது ஒரு நிலைப்பட்ட தன்மையை எய்த வேண்டுமாயின் என்றும் ஒரு தன்மையனாய் உள்ள இறைவனைச் சார்தல் வேண்டும். மலச் சார்பை விட்டு இறைவனைச் சார்ந்தால் அவ்விறைவனது தன்மையை உயிர்களும் பெறலாம். அவ்வாறு தன்னிலைமையை மன்னுயிர்கள் அடையும்படி செய்வது இறைவனது சத்தியே யாகும். சத்தி என்பது யாது, அதன் செயற்பாடுகள் யாவை என்பதை இங்குச் சுருக்கமாகக் காண்போம்.
சிவமும் சத்தியும் :
ஒருவனாகிய இறைவன் தானும் தன் சத்தியும் என இரு தன்மைப்பட்டு நிற்பன். இதனை எளிதில் விளங்கிக் கொள்வதற்கு இரண்டு எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. ஒன்று சூரியனும் அதன் ஒளியும். மற்றொன்று நெருப்பும் அதன் சூடும். சூரியன் பொருள். ஒளி அதன் குணம். நெருப்பு பொருள். சூடு அதன் குணம். இவ்வாறு பொருளும் குணமும் என இரண்டாய்ச் சொல்லும்படி நின்றாலும் உண்மையில் அவை யிரண்டும் ஒன்றேயாம். பொருளை யின்றிக் குணம் இல்லை. குணம் இன்றிப் பொருள் இல்லை. அதுபோலச் சிவம் என்பது பொருள். சத்தி அதன் குணம். சிவமும் சத்தியும் என இரண்டாய்ச் சொல்லு<ம்படி நின்றாலும் அவை வேறு பொருள்கள் அல்ல. உண்மையில் அவை யிரண்டும் ஒன்றேயாம். தானும் சத்தியும் ஒரு பொருளே என்பதை உணர்த்தவே சிவபெருமான் ஓருடம்பிலே ஆண் பெண் என இரு திறத்தனாய்க் காட்சியளிக்கிறான். சத்தி எனினும் ஆற்றல் எனினும் ஒன்றே. இறைவனது சத்தியாய் - ஆற்றலாய் நிற்பது அவனது பேரறிவேயாகும். சத்தி தன் வடிவேது என்னில் தடையிலா ஞானமாகும் என்பர். சிவத்தினது சத்தி பிறிதொன்றால் தடுக்கப்படுதல் இல்லாத பேரறிவே எனக் கூறியிருத்தலைக் காணலாம்.
சூரியன் தானும் தன் ஒளிக் கதிரும் என இயைந்து நிற்கும். சேய்மையில் உள்ள தன்னிலையில் அது சூரியன் எனப்படும். அதன் ஒளிக்கதிர் உலகத்தில் பரவி உலகப் பொருள்களோடு தொடர்பு கொண்ட நிலையில் அது ஒளி எனப்படும். அதுபோல இறைவன் எவற்றுக்கும் மேலாம் நிலையில் தன்னளவில் நிற்கையில் சிவம் எனப்படுவான். அவனது நுண்ணிய பேரறிவாகிய சத்தி எல்லாப் பொருள்களிலும் அவற்றின் உள்ளும் புறம்புமாய் நீக்கமற நிறைந்து நிற்க, இவ்வாறு அவன் உலகு <உயிர்களோடு தொடர்பு கொண்ட நிலையில் சத்தி எனப்படுவான். ஒருவனாகிய இறைவன் எல்லாப் பொருள்களிலும் இவ்வாறு இரண்டறக் கலந்து நிற்றல் அவனது சத்தியினாலே என்பது இதனால் விளங்கும். இக்கருத்தே முதற்செய்யுளில் அகர வுயிராகிய உவமையில் வைத்து உணர்த்தப்பட்டது. இறைவன் உலகுயிர்களோடு கலந்து நின்று இயக்குகிறான் என்றும் கூறலாம்; அவனது சத்தி அவ்வாறு கலந்து நின்று இயக்குகிறது என்றும் கூறலாம். இரண்டிற்கும் கருத்து ஒன்றுதான். ஓர் ஓவியர் இந்த ஓவியத்தை எழுதினார் என்று கூறுவதற்குப் பதிலாக அவரது கை இந்த ஓவியத்தை உருவாக்கியது என்று கூறலாம் தானே. ஓவியரும் அவரது கையும்போல இறைவனும் அவனது சத்தியும் என்று ஒருவகையில் கொள்ளலாம்.
நங்கையினால் நாம் அனைத்தையும் செய்கிறோம்!
அதுபோல நங்கையினால் இறைவன் அனைத்தையும் செய்கிறான்.
முதலில் உள்ள நங்கை நம் கை எனப்பிரிந்து பொருள் தரும். அடுத்து வரும் நங்கை பெண் எனப் பொருள் பட்டு இறைவனது சத்தியைக் குறிக்கும். சிவனே செயலைச் செய்பவனாக, சத்தி அவனுக்குத் துணையாதல் பற்றிச் சத்தியை அவனுக்குத் துணைவியாக வைத்துப் போற்றும் நிலை உண்டாயிற்று. சிவனே தலைமைப் பொருள் என்பதும், சத்திஅவன் வழிப்பட்டு நிற்பது என்பதும் இதனால் அறியப்படும் எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள். இறைவன் சிவமும் சத்தியுமாய் நிற்றலை விளக்குவதற்கு நெருப்பும் அதன் சூடும் என்ற மற்றொரு உவமையை முன்னே குறிப்பிட்டோம். உணவுப் பொருள்களைச் சுவையாக உண்பதற்கு ஏற்ற வகையில் பக்குவப்படுத்துதலைப் பாகம் செய்தல் என்பர். பாகத் தொழிலில் வறுத்தல், பொரித்தல், அவித்தல் முதலிய பலவகைச் செயல்கள் உண்டு. பல வகைப்பட்ட இச் செயல்களையெல்லாம் நெருப்பினது சூடு ஒன்றே செய்கிறது. அதுபோல இறைவனது சத்தி ஒன்றே படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய பல செயல்களைச் செய்கிறது.
இறைவனது சத்தி ஒன்றே யாயினும் அதனால் நிகழ்த்தப்படும் செயல்கள் பலவாதல் பற்றிப் பல சத்திகளாகச் சொல்லப்படும். <உயிர்களின் அறிவை மும் மலங்களின் செலுத்தி, அவ்வுயிர்கள் இறைவனை நோக்காது உலகத்தையே நோக்கி நிற்கும்படி செய்யும் சத்தி திரோதான சத்தி எனப்படும். இப் பெயர் அது செய்யும் மறைத்தல் தொழில் பற்றி வந்ததாகும். திரோதானம்-மறைத்தல். இத் தொழிலால் பக்குவம் பெற்ற உயிர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து இறைவனைக் காட்டி இன்புறும்படி செய்யும் சத்தி அருட்சத்தி எனப்படும். இவ்வாறு இறைவனது சத்தி கட்டு நிலையில் உயிர்க்குயிராய் உடன் நின்று உயிர்கள் பக்குவம் பெறும்படி உதவும்; முத்தி நிலையில் அவ்வாறு உடன் நின்று தன்னிலைமையை மன்னுயிர்கள் பெறும்படி உதவும். அச் சத்தியோடு பிரிப்பின்றி நிற்கின்றான் எங்கள் பெருமான் என்பது இச் செய்யுளில் உணர்த்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக