வெள்ளி, 3 நவம்பர், 2017

23. அக இருள் புற இருளினும் கொடியது

23. அக இருள் புற இருளினும் கொடியது
ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்
இரு பொருளும் காட்டாது இது.

பொருள் : புற இருள் ஒரு பொருளையும் காண ஒட்டாதபடி நமது கண்ணை மறைத்து விடும். ஆயினும் தன்னைக் காட்டி நிற்கும். அஃதாவது, தான் ஒரு பொருள் உண்டு என்பதை நாம் உணர நிற்கும். அக இருளாகிய இந்த ஆணவ மலம் இறைவன். உயிர் முதலிய பிற பொருள்களையும் அறிய வொட்டாது. தன்னையும் காட்டிக் கொள்ளாது. இவ்வாறு பிற பொருள், தான் என்ற இரண்டையும் நாம் அறிய முடியாத வகையில் நமது அறிவை மறைத்து நிற்கும்.
சொற்பொருள் :
இருள் - புற இருள்
ஒரு பொருளும் காட்டாது - உலகப் பொருள்களுள் ஒன்றையும் காண ஒட்டாது கண்ணை மறைத்து நிற்கும். (ஆயினும்)
உருவம் காட்டும் - தனது இருப்பை நாம் உணர நிற்கும். (ஆனால்)
இது - அக இருளாகிய இந்த ஆணவ மலமோ
இரு பொருளும் காட்டாது - பிற பொருள், தான் என்னும் இரு பொருள்களையும் நாம் அறிய முடியாத வகையில் நமது அறிவை மறைத்து நிற்கும்.

விளக்கம் :
கண் வேறாகவும், உயிராகிய நாம் வேறாகவும் இருக்கிறோம். புற இருள் வந்து கண்ணை மறைக்கும்போது பொருள்களைக் காணும் காட்சி தடைப்படுகிறது. கண் வழியாகப் பார்த்தறிகின்ற நாம் கண்ணுக்கு வேறாக இருப்பதனாலே கண் செயற்படாதபோது அதை வைத்துக் கண்ணை மறைக்கின்ற இருள் வந்துற்றது என்பதை அறிந்து கொள்கிறோம். அவ்விருளுக்கு மாற்றுப் பொருள்களாகிய விளக்கு முதலியவற்றின் உதவியை நாடி அவ்விருளை அகற்ற முயல்கிறோம். புற விருளை உணர முடிவதனாலேயே அதனை நீக்குகிற முயற்சியும் எழுகிறது. இது பற்றியே இருள் உருவம் காட்டும் என்றார் ஆசிரியர். உருவம் என்பதற்கு இருப்பு என்பது பொருள். புறவிருள் உயிருக்கு வேறாகிய கண்ணைத்தான் மறைக்கிறது. அக இருளாகிய ஆணவமோ உயிரறிவை மறைத்து அதற்கு அறியாமையை உண்டாக்குகிறது. <உயிர் தனது அறிவிலுள்ள மறைப்பினைச் சிறிதும் உணர முடிவதில்லை. அம் மறைப்பினால் உண்டாகும் அறியாமையையும் தெரிந்து கொள்வதில்லை. மாறாக, அவ் வறியாமையையே அறிவு என்று நம்பி விடுகிறது! தேர்வறையில் எழுதும் மாணவர்கள் இதற்குத் தக்க எடுத்துக்காட்டு ஆவர். அவர்கள் சில கேள்விகளுக்குத் தவறாகவே விடையெழுதிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அது அவர்களுக்குத் தெரிவதில்லை. தாம் எழுதுவது சரியான விடையே என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அறியாமையில் இருந்த போதிலும் அதுவே அவர்களுக்கு அறிவாகத் தோன்றுகிறது! அதனாலேயே அப்படி நினைக்கிறார்கள். நம்மிடத்தில் அறியாமை இருப்பது தெரிந்தால் அல்லவா அதற்கான காரணம் யாது என ஆராய்ந்து அதனை நீக்கிக் கொள்ள முயல்வோம்? அறியாமையே அறிவு போலத் தோன்றும் போது அறியாமை பற்றிய ஆராய்ச்சி எப்படி உண்டாகும்? அதனை நீக்குகிற முயற்சியும் எப்படி உண்டாகும்? இவ்வாறு உயிர் தன்னறிவை ஒன்று மறைத்து நிற்கிறது என்பதை எவ்வகையிலும் உணர முடியாமற் போகிறது.
உயிரறிவை மறைத்து ஆணவம் செய்கின்ற காரியங்கள்தாம் எத்தனை! எத்தனை! சிலவற்றை இங்கே காட்டுவோம். சிலர் யார் என்ன அறிவுரை கூறினாலும் தான் பிடித்த தவறான போக்கை விடுவதில்லை. இன்னும் சிலர் மற்றவரின் கருத்து என்னவென்று தெரிந்து கொள்ளத் துளியும் விரும்ப மாட்டார்கள்; தங்கள் கருத்தை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பாகுபடுவார்கள். ஒப்புக் கொள்ளாதவரை விடமாட்டார்கள்! சிலர் எதிரில் இருப்பவரின் கருத்துத் தவறு என்று காட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும். அவமானப்படுத்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். மற்றும் சிலர் பிறரிடம் தகுதியிருந்தாலும் அதை மதிக்க மாட்டார்கள். தம்மிடம் தகுதியில்லாத போதிலும் தம்மையே பெரிதாக மதித்து மகிழ்வார்கள். இவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது இவ்வியல்பு தம்மிடம் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்படி நடந்து கொள்ளும் போக்கிற்குக் காரணமாயிருப்பது தம்மிடமுள்ள ஆணவ மலம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். ஆணவ மலம் தன்னைக் காட்டாமல் எண்ணிறந்த வகைகளிற் செயற்படும் என்பதை, மாந்தர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஆணவ மலத்தின் இயல்பை உமாபதி சிவம் போல எடுத்துக் காட்டியவர்கள் வேறு யாறுமில்லை. உலகில் இருளை விட இருண்ட பொருள் உண்டா? உண்டு. உயிர்களிடத்தில் அஞ்ஞானமாகிய மயக்கத்தைச் செய்கின்ற ஆணவமலம் அப்படிப்பட்ட பொருள். அதன் முன்னால் உலகத்து இருளும் ஒளி என்று சொல்லும்படி ஆகிவிடும் என்றால் அந்த ஆணவ மலம் எவ்வளவு இருண்டதாக இருக்க வேண்டும்! இக் கருத்துப்பட இருள் ஒளிர இருண்ட மோகமாய், அறிவு முழுதினையும் மறைக்கும் என்று சிவப்பிரகாசத்தில் (செ.20) கூறினார் ஆசிரியர். மேலும் ஆணவமலம் தானொரு பொருள் இல்லை என்னும்படி உயிரில் பொருந்தியிருக்கும் எனவும், ஆணவம் உளது என்பதைத் திருவருள் துணையால் அறியலாமே யன்றி வேறு எவ்வகையாலும் அறிதல் இயலாது எனவும் அந்நூலிற் கூறியுள்ளமை (செ.36) அறியற்பாலது. இப்படி ஆணவம் தன்னைக் காட்டாததோடு, துன்றும் பவத்துயறும் இன்பும் துணைப் பொருளும் ஆகிய பிற பொருள்களையும் உணர விடாமற் செய்யும். இதுபற்றியே இரு பொருளும் காட்டாது இது என்றார் ஆசிரியர். முந்திய செய்யுளில் ஆணவம் இருள் போன்றது என்று குறிப்பிட்டார். இச் செய்யுளில் அஃது இருளினும் வலியது என்று கூறி அதன் கொடுமை மிகுதியை உணர்த்தினார்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...