வெள்ளி, 3 நவம்பர், 2017

18. சார்ந்ததன் வண்ணமாதல்

18. சார்ந்ததன் வண்ணமாதல்
இருளில் இருளாகி எல்இடத்தில் எல்ஆம்
பொருள்கள் இலதோ புவி.

பொருள் : இருள் உள்ளபோது இருளேயாகியும், ஒளி வந்தபோது ஒளியேயாகியும் இவ்வாறு சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற பொருள்கள் இவ்வுலகில் இல்லையோ?
சொற்பொருள் :
இருளில் - இருள் உள்ள காலத்தில்
இருளாகி - இருளே யாகியும்
எல் இடத்தில் - ஒளிவந்த பொழுதில்
எல் ஆம் - ஒளியே யாகியும்
பொருள்கள் - இங்ஙனம் சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற பொருள்களை
புவி - இவ்வுலகம்
இலதோ - உடையதாய் இல்லையோ?

விளக்கம் :
உயிர் எதனை எதனைச் சார்கிறதோ அதன் அதன் தன்மையைத் தன் தன்மையாகக் கொள்ளும். உயிர் சார்தற்குரிய பொருள்கள் இரண்டே. அவை சத்து, அசத்து என்பன. சத்து என்பது சிவம். அசத்து என்பது பாசம். உயிர் சத்தாகிய சிவத்தைச் சார்கிறபோது சிவத்தின் தன்மையைப் பெற்றுச் சிவமாகவே நிற்கும். நாம் ஒழிந்து சிவமானவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ என்னும் அனுபவ மொழி இதனை உணர்த்தும். சத்தைச் சார்தலின்றி அசத்தாகிய பாசத்தைச் சார்கிறபோது பாசத்தின் தன்மையைப் பெற்றுப் பாசமாகவே இருக்கும். இவ்வாறு உயிர் இரு தன்மையும் உடையதாய் நிற்கும் என்று முந்திய செய்யுளில் உணர்த்தினார் ஆசிரியர்.
அதனை ஏற்காது மறுப்போர் பின்வருமாறு கூறுவர். சத்து, அசத்து என்னும் இருவகைப் பகுப்பே உள்ளன. பொருள்கள் யாவும் இப்பாகுபாட்டில் அடங்கி நிற்பன. அம்முறையில் உயிரைச் சத்து என்று சொல்ல வேண்டும். அல்லது, அசத்து என்று சொல்ல வேண்டும். இவ்விரண்டினுள் ஒன்றாய் நில்லாமல், உயிர் அவ்விரண்டன் தன்மையும் உடையதாய் நிற்கும் என்றல் பொருந்தாது என அவர்கள் கூறுவர். அவர்களுக்கு விடையாக இச் செய்யுளைக் கூறுகின்றார் ஆசிரியர். இருவகைப்பட்ட தன்மைகளை அடைகிற பொருள்கள் உலகில் பல உண்டு. எடுத்துக்காட்டாகக் கண், பளிங்கு, வானம் ஆகிய பொருள்களைக் குறிப்பிடலாம். கண் இரவு நேரத்தில் இருளைச் சார்ந்து இருளாய் நிற்கும். ஒளி வந்த காலத்தில் அவ்வொளியைப் பெற்று ஒளியாய் நிற்கும். அவ்வாறே பளிங்கு இரவில் இருளைக் கவர்ந்து இருள் வடிவாகவே இருக்கும். பகலில் சூரியவொளியைக் கவர்ந்து ஒளிவடிவாய்த் திகழும். அதுபோல வானம் இரவு நேரத்தில் கரிய இருள் சூழ்ந்து இருளாய் விளங்கும். பகலில் சூரியனின் பொன்னொளியைப் பெற்று ஒளிமயமாய் விளங்கும். இப்படிக் கண் முதலிய பல பொருள்கள் இருளில் இருளாகியும் ஒளியில் ஒளியாகியும் இரு மாறுபட்ட தன்மைகளை உடையனவாய் நிற்பதை அனுபவமாகக் பார்க்கிறோம். அவற்றைப் போல உயிரும் தம்முள் மாறுபட்ட சத்தையும் அசத்தையும் சார்ந்து அவ்விரண்டன் தன்மைகளையும் அடையக் கூடியதாய் உள்ளது.
சத்து என்பது உயர்ந்தது. அசத்து என்பது இழிந்தது. உயிர் அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பொதுமைப் பொருளாகும். இடைப்பட்டதாய் நிற்பதால் அவ்விரண்டையும் சார்தற்கு உரியதாகின்றது. அவ்விரண்டன் தன்மையையும் பெறுவதாகின்றது. சார்ந்த தன் வண்ணமாய் நிற்பதாகின்றது. இங்ஙனம் இச் செய்யுளில், சார்ந்ததன் வண்ணமாகின்ற பொருள்கள் இவ்வுலகில் இல்லையோ எனக் கேட்டு, அவை உண்டு என்பதை வலியுறுத்தி, அங்ஙனமே உயிரும் ஆணவ இருளோடு கூடி அறியாமையுற்றும் திருவருள் ஒளியோடு கூடி நல்லுணர்வு விளங்கியும் சார்ந்ததன் வண்ணமாய் நிற்பது என உணர்த்தினார் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...