வெள்ளி, 3 நவம்பர், 2017

13. மாயையுள் அகப்பட்டு மயங்குவோர்

13. மாயையுள் அகப்பட்டு மயங்குவோர்
மூன்று திறத்து உள்ளாரும் மூலமலத்து உள்ளார்கள்
தோன்றலர் தொத்து உள்ளார் துணை.

பொருள் : மேற்கூறிய மூவகைப்பட்ட உயிர்களும் மூலமலமாகிய ஆணவத்தில் அகப்பட்டுள்ளார்கள். அவர்களுள் மாயைப் பிணிப்புள்ள சகலரே தமக்குத் துணையாய் உள்ள இறைவனை உணரப் பெறாது மயங்கி நிற்பர்.
சொற்பொருள் :
மூன்று திறத்து உள்ளாரும் - மும்மலம் உடையவர், இருமலம் உடையவர், ஒரு மலம் உடையவர் என மேற்கூறிய மூன்று வகையாரும்
மூலமலத்து உள்ளார்கள் - மூலமலம் எனப்படும் ஆணவமலப் பிணிப்பில் அகப்பட்டுள்ளார்கள். (அவருள்)
தொத்து உள்ளார் - மாயைப் பிணிப்பில் அகப்பட்டுள்ள சகலரே
துணை - தமக்குத் தோன்றாத் துணையாய் உள்ள இறைவனது இருப்பு
தோன்றலர் - தோன்றப் பெறாது மயங்கி நிற்பர்.

விளக்கம் :
தொத்து என்பதற்குக் கொத்து என்பது பொருள். அஃதாவது தொகுதி. இங்கு எண்ணற்ற, பல்வேறு வகைப்பட்ட ஆற்றல்களின் தொகுதியாகிய மாயையைக் குறித்தது. ஆறு கோடி மாயா சத்திகள் என்பது திருவாசகம். தொத்து உள்ளார் துணை தோன்றலர் என அமைத்துக் கொள்ள வேண்டும்.
தொத்து <உள்ளார் :
பெரு மயக்கத்தைச் செய்வதாகிய பிரகிருதி மாயையே உலகமாய்ப் பரிணமித்துச் சகலராகிய உயிர்களோடு தொடர்பு கொண்டுள்ளது. உடம்பும், உடம்பிலுள்ள ஐம்பொறிகள் மனம் முதலிய கருவிகளும், உடம்போடு கூடிய உயிர்கள் போக்குவரவு புரிதற்குரிய நிலமும், நிலத்திற் காணப்படும் சிறியனவும் பெரியனவும் ஆகிய நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய எல்லாம் அம் மாயையின் காரியங்களேயாகும். தனு, கரணம், புவனம், போகம் எனப்படும் இந்த ஆக்கப் பொருள்கள் யாவும் நிலையற்றவை; இடையில் நீங்கக் கூடியவை; உயிருக்கு வேறானவை. ஆனால் உயிர் அவற்றை அப்படி நினைக்கிறதா? அவை வேறு தான் வேறு என்று கருதாமல் அவற்றோடு உயிர் ஒற்றுமைப்பட்டிருக்கிறது. உடம்பும், ஐம்பொறிகளும், உலகியற் பொருள்களும் ஆகிய அவை அந்த அளவுக்கு உயிரை வசப்படுத்தியிருக்கின்றன.
ஐந்து இந்திரியங்களுக்கும் கட்டுப்பட்டே சகலராகிய உயிர்கள் வாழ்கின்றனர். எந்த அளவுக்கு அவை ஆட்டி வைக்கின்றனவோ அந்த அளவுக்கு அவர்கள் ஆடுகின்றனர். இந்த உலகத்தில் பிறந்து இந்த உடம்பையும் உடம்பில் ஐந்து இந்திரியங்களையும் பெற்றிருப்பது இந்த உலகிலுள்ள பொருள்களை ஆன மட்டும் அனுபவிப்பதற்கே என்று நினைக்கின்றனர். விட்டிற் பூச்சி எரிந்து கொண்டிருக்கிற விளக்கொளியைக் கண்ணால் பார்க்கிறது. கட் பொறிக்கு அடிமைப்பட்ட அது அதனைப் பழம் என்று நினைத்துக் கொண்டு அதிற் போய் விழுகிறது. அதன் வெப்பத்தால் தாக்கப்பட்டுப் பன்முறையும் மீள்கிறது. பின்னரும் விடாது சென்று முடிவில் அதிலேயே வீழ்ந்து இறக்கிறது. அதுபோல ஐம்பொறிகளுக்கு அடிமைப்பட்ட சகலர் உலக சுகத்தையே பெரிதாக எண்ணி மயங்கி அதனையே நாடுவர். அதனால் நோயும் துன்பமும் வந்து தாக்கினும் அதனை விடமாட்டாது அதிலேயே அழுந்திக் கிடப்பர். உடம்பும் ஐம்பொறிகளும் உயிரை வசப்படுத்தியிருப்பதைப் போல உலகப் பொருள்களும் உயிரறிவைப் பிணித்துள்ளன என்பதைச் சொல்ல வேண்டா. இருக்க ஓர் உறைவிடம் இருந்தால் போதும் என்று யாரும் நினைப்பதில்லை. எத்தனை இடங்கள் உண்டோ அத்தனையும் நமக்கே சொந்தமாக வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். வாழ்வதற்கு உரிய அளவுக்குச் செல்வம் இருந்தால் போதும் என்ற மனம் வருவதில்லை. உலகத்துச் செல்வமனைத்தும் தமக்கே உரிமையாக வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். மண், பொன் முதலிய நிலையற்ற உலகப் பொருள்கள் உயிரறிவை அந்த அளவுக்கு மயக்கித் தம்மையே விடாது பற்றும் படியாகச் செய்கின்றன. இவ்வாறு மாயாகாரியங்களால் பிணிப்புண்டு மயங்கி நிற்கும் சகலரையே தொத்து உள்ளார் என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.
துணை தோன்றலர்
சகலரே மேற்கூறியவாறு உலக மயக்கத்தில் ஆழ்ந்து, யான் எனது என்று செருக்குவர்; தமக்கு மேல் ஒரு முதற்பொருள் உண்டு என்பதை அறியாது மயங்குவர். தேவர்கள், அசுரர்கள், மக்கள், அடிமுடி தேடிய பிரமன் மாயோன் ஆகிய இவர்கள் யாவரும் சகலர் என்ற பிரிவைச் சேர்ந்தவரே என்பது அறிதற்குரியது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...