12. உயிர்கள் மூவகையினர்
திரிமலத்தார்ஒன்று அதனில் சென்றார்கள் அன்றி
ஒரு மலத்தா ராயும் உளர்.
பொருள் : எல்லாவுயிர்களும் மூவகையுள் அடங்கி நிற்பர். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் உடையவர் எனவும், அவற்றுள் மாயை நீங்கிய இரு மலம் உடையவர் எனவும், மாயையோடு கன்மமும் இன்றி ஒரு மலமே உடையவர் எனவும் இங்ஙனம் மூவகையினராவர்.
சொற்பொருள் :
திரிமலத்தார் - மும்மலமும் உடையவர் எனவும்
அதனில் ஒன்று சென்றார்கள் - அம் மும்மலங்களுள் ஒன்று நீங்கி இரு மலம் உடையவர் எனவும்
அன்றி - அவரேயன்றி
ஒரு மலத்தாராயும் எனவும் - ஒரு மலமே உடையவர் எனவும்
உளர் - இங்ஙனம் அனைத்துயிரும் மூன்று வகையினராய் உள்ளனர்.
விளக்கம் : மும்மலமும் உடையவர் சகலர் எனவும், இருமலம் உடையவர் பிரளயாகலர் எனவும், ஒரு மலமே உடையவர் விஞ்ஞானகலர் எனவும் பெயர் பெறுவர். இம் மூவகை உயிர்களிடத்திலும் ஆணவ மலம் என்ற ஒன்று மட்டும் பொதுவாக உள்ளது என்பது விளங்கும்.
ஆணவப் பிணிப்பில் வேறுபாடு :
ஆணவ மலம் இயல்பிலே எல்லா வுயிர்களையும் பிணித்து நிற்பதாகும். ஆயினும் அப் பிணிப்பு ஒரே வகையாய் இல்லாது, உயிர்தோறும் வேறுவேறு வகையாகவே இருக்கும். அப்பிணிப்பு உயிர்களின் நிலைக்கேற்ப வன்மை, இடைமை, மென்மை என மூவகையாய் நிற்கும்.
சகலர் :
ஆணவ மலம் வன்மையாய்ப் பற்றிய உயிர்களுக்கு அம்மலத்திற்கு மாற்றுப் பொருளாக மாயை, கன்மம் என்னும் இரு மலங்களை இறைவன் சேர்ப்பிக்கின்றான். மாயை என்பது இங்கே அசுத்தமே வடிவாகிய பிரகிருதி மாயையைக் குறிக்கும். பிரகிருதி தனது முக்குணங்களால் உயிர்களுக்குப் பெருமயக்கத்தை விளைவிப்பதாகும். அது தனு, கரண, புவன, போகங்களாய் அமைந்து உயிர்களை மயக்குகிறது. உயிர்கள் உலக வாழ்வில் மயங்கி, ஆணவ மலத்தின் தூண்டுதலால் யான் எனது என்று பற்றுக் கொண்டு கன்மங்களைச் செய்கின்றன. இவ்வாறு ஆணவ பந்தம் வன்மையாய் உள்ள உயிர்களை ஏனைய மாயை, கன்மம் என்னும் இரு மலங்களும் வந்து பற்றும். மும்மலமும் உடைய இவர்கள் சகலர் எனப்படுகின்றனர். சகலர் என்ற சொல்லு<க்குக் கலையோடு கூடியவர் என்பது பொருள். கலை என்பது பிரகிருதி மாயையைக் குறிக்கும். எனவே, கலையாகிய பிரகிருதி மாயையோடு கூடியவர் சகலர் எனப் பெயர் பெற்றனர்.
பிரளயாகலர் :
இனி, ஆணவ மலம் வன்மையாய் நில்லாது இடைமையாய் நிற்கும் உயிர்களுக்கு மேற்கூறிய பிரகருதி மாயையின் தொடர்பு நீங்கும். ஆயின், கன்மம் எனப்படும் வினை உண்டு. அதனால் அவர்கள் ஆணவம், கன்மம் என்னும் இருமலம் உடையவராயினர். ஏதோ ஒரு பிரளயத்தில் (ஊழிக் காலத்தில்) இவர்கள் கலையாகிய பிரகிருதியினின்றும் நீங்கினர் ஆதலால் பிரளயாகலர் எனப்பட்டனர். அகலர் - கலையில்லாதவர்.
விஞ்ஞானகலர் :
இனி, ஆணவ பந்தம் மென்மையாய் உள்ள உயிர்களுக்குப் பிரகிருதியோடு கன்மமும் இல்லையாகும். அவர்கள் விஞ்ஞானகலர் எனப்படுவர். விஞ்ஞானமாவது சிறந்த ஞானம். அது சிவனால் உணர்த்தப்படுவது. எனவே அவர்கள் ஒரு காலத்தில் இறைவனால் உணர்த்தப்படும் சிறந்த ஞானத்தைப் பெற்றுப் பிரகிருதியோடு கன்மமும் நீங்கப் பெற்றமையால் இப்பெயர் பெற்றனர். இதுகாறும் கூறியவற்றால், பிரகிருதியோடு கூடியிருப்பவர் சகலர் என்பதும், பிரகிருதியினின்றும் நீங்கியவர் அகலர் என்பதும் விளங்கும்.
உயிர்கள், சகலர், அகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்
மூன்று மாயைகள் :
சகலர் பிரகிருதி மாயையோடு தொடர்புடையவர்கள் ஆதலால் அவர்கள் வாழும் உலகங்கள் பிரகிருதி மாயையில் உள்ளன என்பது விளங்கும். அவர்களுக்கு அமைந்த உடம்புகளும், நுகர்ச்சிப் பொருள்களும் பிரகிருதியின் காரியங்களே யாகும். இனிப் பிரளயாகலரும் விஞ்ஞான கலரும் பிரகிருதியினின்றும் நீங்கியவராயிற்றே. அவர்கள் வாழ்வது எங்கே? அவர்களுக்கு உடம்பு முதலியவை எவ்வாறு அமையும்? என வினவலாம். உயிர்களுக்கு இடம் மாயை ஆகும். உயிர்கள் மூவகையினராய் அமைதல் போல மாயையும் மூன்றாக அமையும். அவை சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை இடமாக அமையும் என அறிந்தோம். பிரளயாகலருக்கு அசுத்த மாயை இடமாகும். எனவே அவர்கள் வாழும் உலகங்கள் அசுத்த மாயையில் உள்ளன என்பது விளங்கும். விஞ்ஞான கலருக்குச் சுத்த மாயை இடமாகும். எனவே அவர்கள் வாழும் உலகங்கள் சுத்த மாயையில் உள்ளனவாகும். பிரளயாகலர், விஞ்ஞானகலர் ஆகியோர்க்கு உடம்பும் நுகர்ச்சிப் பொருள்களும் ஆகியவை அவ்வம்மாயைகளால் ஆனவை என்பதும் அறியத்தகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக