ஞாயிறு, 26 நவம்பர், 2023

முதல் தந்திரம் - 9. கொல்லாமை

முதல் தந்திரம் - 9. கொல்லாமை


பண் :

பாடல் எண் : 1

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. 

பொழிப்புரை :

மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய குருவழிபாட்டிற்கும் பல மலர்களால் தொடுக்கப்பட்டமாலை முதலியவை இன்றியமையாதனவே. ஆயினும், சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும் சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின் முனையுமாம்.

குறிப்புரை :

``குருபூசைக்கும்`` என்ற உம்மை, `சிவ பூசைக் கேயன்றி` என, இறந்தது தழுவிற்று. ``பன்மலர்`` என்பதன்பின், `வேண்டும், ஆயினும்` என்பவற்றை வருவித்து, `ஒண்மலர் நல் தார் கொல்லாமை` எனவும், `தீபம் சித்தமும் அமர்ந்திடம் ஆவி உச்சியும்` எனக்கூட்டுக. ``சித்தம் `` என்றதை அடுத்து நின்ற குறிப்பால, `உற்று ஆர்தல் இருதயத்தில்` என்பது தோன்றிற்று. ``தீபமும்`` என்ற உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. ``ஓர்`` என்றது `ஒருவகை` என்னும் பொருட்டு, ``தார்`` என்றதனால் ``கொல்லாமை`` என்றது, `கொல் லாமைகள்` எனப்பன்மையாய் நின்றமை பெறப்பட்டது. உயிர்ப் பன்மையால் கொல்லாமைகளும பலவாயின. ஒருசார் உயிர்களைக் கொல்லாதார் மற்றொருசார் உயிர்களைக் கொல்வாராதலின், `எல்லா உயிர்களிடத்தும் கொள்கின்ற கொல்லாமை நோன்பே வேண்டும்` என்பார், `கொலலாமை மலர்` என்னாது, ``கொல்லாமை மலர்த் தார்`` என்றார். ஞான நெறியார் செய்கின்ற அகப்பூசைக்குக் கொள்ளப்படும் எட்டு மலர்களுள்ளும் கொல்லாமையே தலையாயதாகச் சொல்லப் படும். அவ்வெட்டு மலர்களாவன. `கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` எனபன. இவ்வாறு சிவஞான மாபாடியத்து (9 அதி.3)க் கூறப்பட்டது. `அமர்ந்த` என்னும் பெயரெச்சத்து கரம் தொகுத்தலாயிற்று. இறைவன் எழுந்தருளியிருந்து அன்பரது வழிபாட்டினை ஏற்றுக்கொள்ளும் இடம் இலிங்கமாதல் உணர்க. இருதயமாகிய ஆசனத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி ஆன்மாவும், மூர்த்திமான் சிவனுமாதல் பற்றித் திருநாவுக்கரசர், ``காயமே கோயிலாக`` (தி.4 ப.76 பா.4) என்னும் திருப்பாடலுள், ``மனம் மணி இலிங்கமாக`` என ஓதியருளினமை காண்க. ``மனம்`` எனப்படுவது ஆன்மாவே என்பது உணர்த்தற்கு, நினைகருவியாகிய மனத்தை, ``கடிமனம்`` என முன்னே அடைகொடுத்துப் பிரித்தருளினார். உபநிடதங்களுள் தகரவித்தை கூறுமிடத்து, ``இருதயமாகிய தாமரை மலரின் மேல் விளங்குகின்ற சுடரின் முனையில் பரமான்மா நிற்கின்றது`` எனக் கூறப்படுவதில், `சுடர் என்றது, சீவான்மாவை` என்பது பின்னர், `பரமான்மா` என வருதலான் அறியப்படும் (மகாநாராயணோப நிடதம்). ``எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே`` என உண்மை விளக்க (32) நூலும் ஆன்மாவை` இலிங்கம்` என்றது காண்க. ஆன்மா வேயன்றித் திருவைந்தெழுத்தும் சிவபெருமானுக்கு இலிங்கமாம். தனது சத்தியும் இலிங்கமாம். இவ்வாறு பல தலைப்படக் கூறுதல் என்னை என ஐயுறும் மாணாக்கர்க்கு, `சிவபெருமானுக்குத் திருவைந் தெழுத்துத் தூல சரீரமும், ஆன்மா சூக்கும சரீரமும், சத்தி அதிசூக்கும சரீரமும் ஆதலின், அதுபற்றி ஐயமில்லை` என்பதை மாபாடியம் உடையார் தமது சிவஞான சித்தி (சூ. 9. 9) உரையுள் இனிது விளக்கினார். `கொல்லாமை என்னும் அறம் ஞான பூசையிலும் முதல் மலராகக் கொள்ளப்படும் சிறப்புடைத்து` என்பது கூறுவார், அப்பூசையின் உறுப்புக்கள் பிறவும் உடன் கூறினார் என்க.
இதனால், கொல்லாமையது சிறப்பு உணர்த்தப்பட்டவாறறிக.

பண் :


பாடல் எண் : 2

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

: ``கொல்லிடு, சொல்லிடு`` என்பவற்றில் இடு, துணைவினை, ``நில்லிடும்`` என்றதில் இடு, இசைநிறை, வல்லடிக் காரர், வலிய தண்டலாளர்; யம தூதர். வலிக் கயிறு - வலிமையுடைய கயிறு; யம பாசம். இஃது அவர் நினைத்த அளவில் நினைக்கப் பட்டோரை இறுகிக் கட்டும் கடவுள் தன்மை பெற்றது. ``நில்லென்று`` என்றது, தம் தலைவன் முன் கொண்டுபோய் நிறுத்திக் கூறுவது.
இதனால், கொலைப் பாவத்தினது கொடுமை கூறும் முகத்தால் கொல்லாமை வலியுறுத்தப்பட்டது.

நம்பிக்கை

 நம்பிக்கை

எதிர்மறையானவற்றை நம்பிக்கைமிக்கதாக மாற்றுவது முன்றேனற்றத்தை கொண்டுவருகின்றது.


சிந்திக்க வேண்டிய கருத்து

ஒருவர் நம்மிடம் எதிர்மறையாக நடந்து கொள்ளுடம் போது, நாம் பாதிப்படைவதுடன் வருத்தமடைகின்றோம்.  நாம் அமைதியாகவும், சமநிலை வகிக்கவும் முயற்சி செய்தாலும், நம்முடைய எதிர்மறையான உணர்வுகள் சூழ்நிலையை மேலும் மோசமாக்குகின்றன..  இவ்வாறு நடக்கும் போது, நாம் நம்பிக்கை இழப்பதை நாம் பார்க்கின்றோம்.  அதன்பின் நாம் சிந்திப்பதிலோ, பேசுவதிலோ அல்லது செய்வதிலோ எந்தவொரு நன்மையும் இருப்பதில்லை.


செயல் முறை

மிகவும் எதிர்மறையான சூழ்நிலையான சூழ்நிலைகளில் நேர்மறையாக இருந்து முன்னேற்றத்தை அனுபவம் செய்வதற்கு நான் நம்பிக்கையுடன் இருப்பதே ஒரே வழியாகும்.  எந்தவொரு சூழ்நிலையும் முழுவதுமாக எதிர்மறையாகவோ அல்லது நம்பிக்கையற்றதாகவோ இருப்பதில்லை என நான் பரிந்து கொள்வது அவசியாமாகும்.  இது சூழ்நிலையை மிகவும் நெருக்கமாக பார்பதற்கும் அதில் இருக்கும் நேர்மறைதன்மையை கண்டுபிடிப்பதற்குமான வலிமையை எனக்கு கொடுக்கும்

பன்னிரண்டாம் திருமுறை-

https://archive.org/details/PanniruThirumurai-PanirNdamThirumurai-ThirunindraSarukam

12.5-திருத்தொண்டர் புராணம்-திருநின்ற சருக்கம்


12.05.21 திருநாவுக்கரசு நாயனார் புராணம்
12.05.22 குலச்சிறை நாயனார் புராணம்
12.05.23 பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம்
12.05.24 காரைக்காலம்மையார் புராணம்
12.05.25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
12.05.26 திருநீலநக்க நாயனார் புராணம்
12.05.27 நமிநந்தியடிகள் நாயனார் புராணம்

பாடியவர்: 
ஓதுவார் பா. சற்குருநாதன

வெள்ளி, 4 ஜூன், 2021

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பண் :

பாடல் எண் : 1

ஆயத்துள்நின்ற அருசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில
மாயக் குழியில் விழுவ மனைமக்கட்
பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

முதுநூல்களின் கூற்றை அறவே புறக்கணித்து, முழுதும் தம் அறிவைக் கொண்டே ஆராய்தலாகிய அத்தொழிலில் நிற்கின்ற புறச்சமயங்கள் புறப்பொருள்களை எவ்வளவு ஆராய்ந் துணரினும், அவ்வாராய்ச்சி அறிவினுள்தானே உள்ள கடவுளைக் காணமாட்டாதனவாகின்றன. அதனால், அவை பொய்ம்மையாகிய குழியில் வீழ்ந்து கெடுவன ஆகின்றன. ஆகையால், அவையெல்லாம் மனைவி மக்கள் முதலாகிய தளையில் அகப்பட்டுத் துன்புறுதற்கான வழிகளேயாகும்.

குறிப்புரை :

`அறுசமயத்தவர் காண்கிலர், விழுவர்` என்பனவும் பாடம். `அதனுள்` என்பதில் அன்சாரியை தொகுத்தல் பெற்றது, அறிவுள் நிற்பவனை ஒற்றுமைபற்றி உடலுள் நிற்பவனாக ஓதினார். முன்னும், பின்னும் பல இடங்களில் இவ்வாறே ஓதுதல் காண்க. மாயம் - பொய்; இங்கு மயக்கத்தைக் குறித்தது. ``பதைக்கின்ற ஆறே`` என்னும் பயனிலைக்கு, `அவை` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.

இதனுள் `ஆய்தல்` என்பது `சிவனே முதற்கடவுள்` என்னும் சைவத்தின் துணிபை முற்றாகவும், ஒருவாறாகவும் மறுத்துக் கூறுதலை ஆதலின், அச்செயலையுடையன மேற்கூறிய மதங்களேயாதல் அறிக. ஈற்றடியில் சகரமும் போலிவகையால் இன எதுகையாம். அன்றி, `உயிரெதுகை பெற்றது எனினும் அமையும்`.

இதனால், புறச் சமயங்கள் சிவனது முதன்மையைச் சிறிதும் உணராதனவும், முற்ற உணராதனவுமாய்க் கேடுபயத்தல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 2

உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன்

வள்ளற் றலைவன் மலருறை மாதவன்

பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்

கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

பொழிப்புரை :

உயிர்க்கு உயிராய் அவற்றின் அறிவில் பொருந்தி யிருத்தலை விரும்பி, அண்டத்தில் உலகெங்கும் நிறைந்தும், பிண்டத்தில் உள்ளக்கமலத்தில் தியானப்பொருளாய் விளங்கியும் நிற்பவனும், அருள் வள்ளலும், அனைத்துலகிற்கும் தலைவனும், பொள்ளல் நிறைந்த உடலில் உயிர்ப்பாய், உட்புகுதல் வெளிவருதல் களைச் செய்தும் உயிர்களால் அறியப்படாது மறைந்து நிற்பவனும் ஆகிய முதற்பெருங்கடவுளாம் சிவபெருமானைப் புறச் சமயிகள் தங்கள் கருத்தில் கொள்ளமாட்டாதவர்களாகின்றனர்.

குறிப்புரை :

`இஃது அவர் வினை யிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `எங்கும் நிற்றல் முதலிய பலவற்றிற்கும் உயிர்கள்மீது வைத்த கருணையே காரணம்` என்றற்கு, உள்ளத்துள்ளே நிற்றலை விரும் பினமையை முதற்கண் தனிப்பட எடுத்து ஓதினார். ``உள்ளம்`` என்பது அறிவைக் குறித்தது என்னை? ``மலர்`` எனப் பின்னர் இதயத்தைக் குறித்தலின். ``தவம்`` என்றது தியானத்தை. தவன் - தவத்தால் அடையப்படுபவன். புகுதல் புறப்படுதல்களைக் கூறினமையின், அஃது உயிர்ப்பாதல் விளங்கிற்று.

``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்

கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` 1

என்று அருளினமையும் இங்கு நோக்கத்தக்கது. இறைவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றல். அவை உடலொடு நிலைத்து நின்று, அந்தக் கரணங்களின்வழி வினைகளை நுகர்ந்தும், ஈட்டியும் வருதற் பொருட்டாம். உயிர்ப்பு இதயத்துடிப்பின் வழித்தாதலையும், இறைவன் இதய வெளியில் ஆடுபவனாகக் கூறப்படுதலையும் இங்கு நினைக்க. இங்ஙனம் உயிர்ப்பாய் உள்ளவனை அறியமாட்டாதவர் தங்களை அறிவராக (ஞானியராக)ச் சொல்லிக்கொள்ளுதல் நகை விளைப்பது என்பதாம். `தலைவனை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது.

இதனால், புறச்சமயிகள் உண்மை ஏதுக்கள் பல இருப்பவும் அவற்றைக்கொண்டு உண்மையைக் கருதியேனும் உணர மாட்டாதவ ராயிருத்தல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 3

உள்ளத்தும் உள்ளன் புறத்துளன் என்பவர்க்

குள்ளத்தும் உள்ளன் புறத்துளன் எம்மிறை

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்

குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

பொழிப்புரை :

எங்கள் இறைவனாகிய சிவபெருமானை அகச் சமயிகள் பொதுவாகவும், சிறப்பாகவும், `அகம், புறம்` என்னும் இரண்டிடங்களிலும் உள்ளவனாக அறிந்து, இயன்ற அளவில் அவனை அணுக முயல்கின்றனர். அவர்கட்கு அவன் அவர்களது தகுதிக்கு ஏற்ப அவ்விடங்களில் ஏற்ற பெற்றியால் அகப்படுகின்றான். புறச்சமயிகள் அவனை `எவ்விடத்திலும் இலன்` எனக் கூறிப் பிணங்கு கின்றார்கள், அவர்கட்கு அவன் அவற்றுள் ஓரிடத்தும் காணப்படுதல் இல்லை.

குறிப்புரை :

``உண்மையுமாய் இன்மையுமாய்``1 என்ற திரு வாசகத்திற்கும் இதுவே கருத்தாதல் அறிக. நான்கிடத்தும் ``புறத்தும்`` என்னும் எச்ச உம்மை தொகுத்தல் பெற்றது. தான், அசைநிலை, ஏகாரம், தேற்றம்.

இதனால், புறச்சமயிகள் அச்சமயத்தை விட்டு அகச்சமயம் புகுந்தன்றி உய்யமாட்டாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 4

ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்

ஆறு சமயப் பொருளும் அவனலன்

தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்

மாறுதல் இன்றி மனைபுக லாமே.

பொழிப்புரை :

புறச்சமயங்கள் ஆறனையும் தோற்றுவித்தவர்கள் மெய்ப் பொருளைக்கண்டு அதனைப் பிறருங் காணவழி கூறினா ரல்லர். அதனால் சிவன் அந்த ஆறுசமயப்பொருளில் ஒன்றேனும் ஆயிற்றிலன். இந்த உண்மையை, உலகீர், தெளிமின்கள்! நன்கு தெளி மின்கள்!! தெளிந்தீர்களாயின், அதன்பின் தவற்றின் நீங்கி, நேர் வழியை அடைந்து, வீடு பெறுதல் கூடும்.

குறிப்புரை :

``சமயம்`` என்றது இங்குப் புறச் சமயத்தையே யாதல் வெளிப்படை. காணுதல் - உணர்தல். அதுபின் பிறர்க்கு உணர்த்தி யதனைக் குறித்தது. இனி, ``சமயம்`` என்றதனை ஆகுபெயராக்கி, `அவற்றை உணர்ந்தும்நூலை ஆக்கியவர்` என்று உரைப்பினும் ஆம். இச் சமயத்தவரும். இவர்தம் நூல்களும் பசுக்களும், பசு வாக்கியங் களும் ஆதலின், அவராலும் அவர்தம் நூலாலும் மெய்ப்பொருள் பற்றப்படாதாயிற்று.

``இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை

நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணம்

தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வோடும்

அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன`` 2

எனவும்,

``சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்

மடங்கொண்ட விரும்பியராய் மயங்கிஓர் பேய்த்தேர்ப்பின்

குடங்கொண்டு நீர்க்குச்செல்வார்`` 1

எனவும் போந்த திருவாக்குகளும் புறச்சமயங்கள் மயக்க உரைக ளாதலை விளக்குதல் காண்க.

``அவன்`` என்றது, மேல், ``எம் இறை`` என்றதனைச் சுட்டிற்று. ``தேறித் தெளிமின்`` என்றது ஒருபொருட் பன்மொழி மறித்தும் இவ்வாறு கூறியது வற்புறுத்தற் பொருட்டு. மாறுதல் - நெறியின் நீங்குதல். `அஃது இன்றி` எனவே, நேர்வழியைப் பற்றுதல் பெறப்பட்டது. `வீடு` என்பது இல்லத்திற்கும் பெயராய் வழங்குதலின், அச் சொல் நயம் பற்றி ``மனைபுகலாமே`` என்றார். `வழி தவறிச் சென்று காடு மேடுகளில் அலையாமல், நேர்வழியைக் கண்டு, அதன் வழி விரைவில் இல்லத்தை அடைந்து இன்பறலாம்` என்பது நயம். இங்கு, ``அவன் அலன்`` என்று, சிவமாய் விளங்காமையை ஆதலின், ``அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய்`` 2என்றாற் போல்வன இதனொடு மாறுகொள்ளாமை அறிக.

இதனால், புறச் சமயங்கள் வீடாகிய பேரின்பத்தைப் பயவாமையே யன்றிப் பிறவியாகிய பெருந்துன்பத்தை மிகுவித்தல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 5

சிவமல்ல தில்லை இறையே சிவமாம்

தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்

கவமல்ல தில்லை அறுசம யங்கள்

தவமல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.

பொழிப்புரை :

சிவம் அல்லது வேறு பதிப்பொருளும், சிவமாம் பயனைத் தருகின்ற தவம் அல்லது வேறு தவமும் இல்லை. ஆறாகக் கூறப்படுகின்ற புறச்சமயங்கள் தம்மை அடைந்தவர்க்கு இவ்வுலகில் வீண் முயற்சியாவதன்றி வேறு இல்லை. அதனால், அவை தவமாதல் இல்லை. ஆகையால் மெய்ப்பொருளை அடைய விரும்புகின்ற வர்களே, நீங்கள் சிவபெருமானது திருவடியைச் சார்ந்து பிழை மின்கள்.

குறிப்புரை :

`சிவம் அல்லதில்லை அறையே` என்பது பாடமாயின், `சிவம்` என்பதன்றிப் `பொருள் பொதிந்த சொல் வேறில்லை` என உரைத்து, `சிவமன்றி வேறு மெய்ப்பொருள் இல்லை` என்பது அதனாற் போந்த பொருளாகக் கொள்க. ``சிவமாந் தவம்`` என்பதில், பெயரெச்சம், `நோய் தீரும் மருந்து` என்பது போலத் `தவமல்லது இல்லை தவம்` என ஒருசொல் வருவிக்க, ``அவம்`` என்பதன்பின், `ஆதல்` என்பது எஞ்சிநின்ற கருவிப் பெயர் கொண்டது. `அவை தவமல்ல` என எழுவாய் வருவித்துக்கொள்க. ``நீர்`` என்றது உண்மையைத் தலைப்பட விரும்பினோரையாதலின், அவரே விளிக்கப்படுவாராயினர். ``சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு`` 1 என்றார் ஔவையாரும்.

இதனால், புறச் சமயம் வேறு முயற்சியைப் பயத்தலல்லது` பயன் தாராமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 6

அண்ணலை நாடிய ஆறு சமயரும்

விண்ணவ ராக மிகவும் விரும்பியே

முண்ணின் றழியும் முயற்றில ராதலின்

மண்ணின் றொழியும் வகைஅறி யார்களே.

பொழிப்புரை :

சிவபிரானை இகழாது போற்றுகின்ற அகச் சமயங்கள் ஆறிலும் நிற்போர் அவ்வச்சமயக் கடவுளரது உலகத்தை அடைந்து இன்புற்றிருக்க, புறச் சமயிகள் அவற்றை விடுவித்துப் பிற விண்ணுலகங்களை அடைதலை மிகவும் விரும்பி, வினைக்கட்டி னின்றும் வெளிப்படமாட்டாது, அதனுள் நின்றே அழிகின்ற அவச் செயலாதலால், அவர்கள் பிரகிருதிக்கு மேல் செல்லும் வழியை அறியாதவர்களேயாவர்.

குறிப்புரை :

`ஆறு சமயமும்` என்பது இரட்டுற மொழிதலாய், `வேறு விண்ணவர் ஆக` எனப்பொருள் தந்து, ``மிகவும் விரும்பியே`` என்பத னோடும் இயைந்தது. ``முள்`` என்றது முட்புதரை. `வினையைக் காடாக உருவகித்துக் கூறலும் மரபு` என்பது, ``நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் ... ... ... 2 என இதனுட் பின் வருதலும், ``இருவினை மாமரம்``3 என்றமையும் போல்வன பற்றி உணர்க. முயற்று - முயற்சி; என்றது தவத்தை யாகலின், `அதனை யிலர்` என்றது. அவச்செயலை உடையாராதலைக் குறித்தது. ``மண்`` என்றது அது முதல் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்கட்கு உபலக்கணமாய், அவ்வத் தத்துவ புவனங்களின் மேல் நின்றது.

அகச்சமயம் ஆறாவன:- பாசுபதம், மாவிரதம், வைரவம்` சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்பன. காபாலமும், காளா முகமும், பாசுபதம், மாவிரதம் என்பவற்றுள்ளே அடங்கும். `சாத்தம்` என்றது சுத்த சாத்தத்தையே; வாம மதத்தையன்று. இம்மதங்களில் நிற்போர் சிவதீக்கை பெறுதலில்லையாயினும், உருத்திரன் முதலி யோரைச் சிவனது மூர்த்தி பேதங்களாகக்கருதி வழிபடுதலும், சிவனைத் தேவருள் ஒருவனாக வைத்து இகழ்தல் இன்மையும் உடைய ராகலின். இவரை ``அண்ணலை நாடியசமயர்`` என்றும், இவர் பிர கிருதிக்கு மேல் உள்ள சீகண்ட வுருத்திரர் முதலிய உருத்திரலோகங் களை அடைவர் ஆகலின் பிறரை ``மண்ணின் றொழியும் வகையறி வார்களாய், விண்ணவராவர்`` என்றும் அருளிச் செய்தார். இவருள் பாசுபதர் மதம் முதலியவற்றையே பொதுமையில் `சைவம்` என வைத்து, `சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` எனச் சமயங்கள் ஆறு என்பாரும் உளராயினர். சைவத்தை நீக்கி, `சௌமியம்` என்பது கூட்டி, `ஆறு` என்பாரும் ஒருசாரார்.

`உலகாயதர் விண்ணவராக விரும்புதல் இன்மையின்` அங்ஙனம் விரும்புபவராகக் கூறியது புத்தர் முதலிய பிறரையேயாம். அவரெல்லாம் தாம் தாம் ஓர் உலகத்தை முத்தியுலகமாகக் கற்பித்துக் கொண்டு அவற்றின்கண் செல்ல விரும்பினாராயினும், அவர் அடைவது பிரகிருதிக்குக் கீழ் உள்ள தத்துவ புவனங்களையே என்பது நாயனாரது திருவுள்ளமாதலின் அவரை, `மண்ணின்றொழியும் வகையறியாதவர்` என்று அருளிச்செய்தார்.

இதனால், புறச்சமயங்கள் பிரகிருதியைக் கடப்பிக்க மாட்டாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 7

சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்

பவகதி பாசப் பிறவிஒன் றுண்டு

தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்

அவகதி மூவரும் அவ்வகை ஆமே.

பொழிப்புரை :

சிவனது உலகத்தையும், சிவனையும் அடைவதே பிறவியற்ற முத்தியாம். அவையன்றி, `முத்தி` எனப் பிறராற் கூறப் படுவன எல்லாம் முத்தியல்லாத பிறப்பு நிலையேயாம். அதனால், அவைகளில் எல்லாம் பாசத்தால் வருகின்ற பிறவியாகிய ஒரு பெருந் துன்பம் இருக்கவே செய்யும். அதனால், சிவனை நோக்கிச் செய்யப் படுவனவாகிய சரியை முதலிய நெறிகள் ஒருவனுக்குக் கிடைக்கு மாயின், முத்தியுலகம் அல்லவாய்ப் பிறவி யுலகங்களாகிய `அயன், அரி, அரன்` என்னும் குணமூர்த்திகள் மூவரது பதவிகளும் அத் தன்மையவாய்ப் போம்.

குறிப்புரை :

அஃதாவது, `அவன் அப்பதவிகளை எய்தாது, மேற்கூறிய சாலோகம் முதலியவற்றையே அடைவான்` என்பதாம். ``கதி`` என்றது பத முத்தி பரமுத்திகளை. பத முத்தியடைந்தோரும், ``நாதனே முன் நிற்கின்``1 பரமுத்தியை அடைவர் ஆதலின், அதுவும் `பிறவியற்ற நிலை` எனப்பட்டது.

ஒன்று - ஒன்றாய் பெரிய துன்பம். `உண்டே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல். தவகதி - தவமாகிய நெறி. தவமாவது சரியை முதலியனவே யாதல் அறிக. `அதனொடு நேர்தலாகிய ஒரு பேறு வாய்க்குமாயின்` என்க. ``மூவர்`` என்றது ஆகுபெயர்.

இதனால், அகச் சமயங்களை மேல்; `அண்ணலை நாடிய` சமயங்களாகக் கூறினமை பற்றி, அவையும் தவநெறிபோலும்` எனவும், அவற்றால் அடையும் நிலைகளும் `முத்திபோலும்` எனவும் நிகழும் ஐயம் அறுக்கப்பட்டது.


பண் :


பாடல் எண் : 8

நூறு சமயம் உளவாம் நுவலுங்கால்

ஆறு சமயம்அவ் ஆறுட் படுவன

கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா

ஈறு பரநெறி இல்லா நெறியன்றே.

பொழிப்புரை :

சமயங்களைப் பற்றிச் சொல்லுமிடத்துச் சிறி யனவும், பெரியனவும் ஆகிய பல வேறுபாடுகளால் சமயங்கள் மிகப் பலவாய் உள்ளன. `அகம், புறம்` என்பவற்றுள் `ஆறு` என ஒருவாறு வரையறுத்துக் கூறப்படும் சமயங்கள் மேற்கூறிய பலவற்றுள்ளே உள் ளனவாம். அங்ஙனம் சொல்லப்படும் சமயங்கள் பலவும் `உண்மை` எனக் கொண்ட நெறிகளிலே மக்கள் நின்று இறுதியாக அடையும் மேலான் நெறி, மேற் கூறிய அவற்றுள் ஒன்றிலும் இல்லாத நெறியாம்.

குறிப்புரை :

`அந்நெறி சித்தாந்த சைவமாம்` என்பதே நாயனாரது திருவுள்ளமாதலும், அந்நெறி பிற சமயங்களில் இல்லாமையும் இத் தந்திரத்தின் தொடக்கத்திலே அருளிப் போந்த மந்திரங்களான் அறிக. ``நூறு`` என்றது, `மிகப் பல` என்றவாறு. ``ஆறு`` எனப் பொதுப்பட அருளிச் செய்ததனால், அகம், புறம் இரண்டும் கொள்ளப்படுவ ஆயின. பின் வந்த ஆறு, நெறி. `ஆற்றுள்`, `ஈற்று` என்னும் ஒற்றுக்கள் தொகுத்தல் பெற்றன. நில்லா - நின்று. `அவற்றுள் இல்லா நெறி` என்க.

இதனால், `சித்தாந்த சைவத்துக்கு நிகராகாமை பற்றி இங்கு இகழ்ந்து கூறினும், பிற சமயங்கள் அதற்குப் படிகளாய் உள்ளன` எனக் கூறி, ஐயம் அறுக்கப்பட்டது.


பண் :


பாடல் எண் : 9

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்

சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான்

குற்றந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்

பித்தேறி நாளும் பிறந்திறப் பார்களே.

பொழிப்புரை :

தம் குரல் பிற உயிர்கட் கெல்லாம் கடியனவாய் வெறுக்கப்படுதலை அறியாது உவகையால் உரத்துக் கத்துகின்ற கழுதைகள்போலப் பாழ்நெறி நூல்களை உரத்து ஓதுகின்ற கன்மிகள், தம் குற்றத்தை உணர மாட்டார்கள். தூயனவாகிய சிவன் எல்லாப் பொருளிலும் நிறைந்து நின்றும், ஒன்றிலும் தோய்வின்றி நிற்கின்ற சிறப்பை அறிவு நூல்களைக் கற்கும் முகத்தால் உணர்ந்து பாராட்ட மாட்டார்கள். மற்று, மயக்கம் மிகுந்து, வீணே பிறந்தும், இறந்தும் உழல்வார்கள்.

குறிப்புரை :

``கத்தும்`` என உடம்பொடு புணர்த்ததனால் பயனில் லாத நூல்களாம். உவமை அதுபற்றியதாகலின் உவமிக்கப்பட்டார் பயனில்லாத நூல்களை ஓதுபவராயினர். பாராட்டிக் கற்கின்றவர் களைக் குறித்து.

``அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா

துலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல

கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்

போஉந் துணையறிவா ரில்``

(நாலடி)

என்றார் பிறரும். கலதி - முகடி; ``கலதிகள்`` என்றது, `நல்வினை யில்லார்` என்றதாம். ``சுத்த சிவன்`` என்றது, `பிறவற்றிற் கலந்தும் அந் நிலை கெடான்` என்றற்கு `தோய்வுற்று` என்பது பாடமன்று. ``குற்றந் தெரியார்`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டி யுரைக்க. `குற்றந் தெரியார்`` என்பது பாடமாயின், அஞ்ஞானமாகிய குற்றம் நீங்கப் பெறார்; அதனால், குணங்கொண்டு கோதாட்டார்` என்க. `அக்குணங் கொண்டு` எனச் சுட்டு வருவித்து உரைக்க. கோதாட்டல் - பாராட்டல்.

``குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி`` 1

என்று அருளிச் செய்தார் வாதவூரடிகளும். மூன்றாம் அடி இன வெதுகை பெற்றது.

இதனால், பிற சமயங்களின் நிற்பாரது கல்வியின் இழிவு கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 10

மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரை

முயங்கி இருவினை மூழை முகப்பா

இயங்கப் பெறுவரேல் ஈறது காட்டில்

பயங்கெட் டவர்க்கோர் பரநெறி ஆமே.

பொழிப்புரை :

புறச் சமயங்களில் நின்று அறிவு மயங்குகின்றவர் களும் சைவசமயத்தை அடைந்து அறிவு தெளிந்தவர்கள்பால் சென்று கூடி, இருவினைப்பயன்கள் அகப்பையால் முகக்கும் அளவில், உடலூழாய்க் கழியும்படி ஒழுக வல்லவராயின், அவர்கட்கு அவ்வுடல் வாழ்க்கை முடிகின்ற நிலை தோன்றும்பொழுது யம பயம் இல்லாது ஒழிய, ஒப்பற்ற பரமுத்தி நிலை கிடைக்கும்.

குறிப்புரை :

``மயங்குகின்றாரும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு `தெளிந்தாரும்` என்பது பாடமன்று. மூழை - அகப்பை. மூழை முகப் பதாவது உணவை முகக்கின்ற அகப்பை அதனை முகந்தொழிதல் அல்லது உண்ணுதல் இன்றி வாளா புறத்தே ஊற்றிவிடுதல் போல இருவினைகளின் பயனாகிய இன்பத்துன்பங்களை விருப்பு வெறுப் பின்றி உடலூழாக்கிக் கழியவிடுதல். இந்நிலை திருவருள் நெறியில் நிற்பார்க்கல்லது கூடாமையானும், திருவருள் நெறி சைவ சமயத்தில் அல்லது இல்லாமையானும் `புறச் சமயத்தவர் சைவ சமயிகள்பால் பகை பாராட்டாது நட்புக்கொண்டு பழகுவாராயின், பேரின்பமாகிய நலத்தைப் பெறுவர்` என்றார்.

``நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு`` 1

எனவும்,

``கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர்`` 2

எனவும் கூறப்படுதல் அறியத்தக்கது. ``காட்டில்`` என்பது `தோன்றில்` எனத் தன் தன்வினையாய் நின்றது. ``கெட்டு`` என்பதனை, `கெட` எனத் திரிக்க. ``அவர்க்கு`` என்பதனை, ``பெறுவரேல்`` என்பதன் பின்னர்க் கூட்டி உரைக்க. ``ஈறது... ... ஆமே`` என்பதற்குப் பிறவாறும் உரைப்ப.

இதனால், புறச் சமயத்தவரும் சைவ சமயிகளை அடையின் பயன் பெறுதல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 11

சேயன் அணியன் பிணிஇலன் பேர்நந்தி

தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு

மாயன் மயக்கிய மானுட ராம்அவர்

காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.

பொழிப்புரை :

சேயர்க்குச் சேயனாயும், அணியர்க்கு அணிய னாயும் நின்று, ஒன்றிலும் தொடக்குண்ணாதிருக்கின்ற அவனதுபெயர் `நந்தி` என்பதாகும். அவன்தன்னை அலைவின்றி ஒரு பெற்றியே நோக்கி நிற்பார்க்குத் தெளிவைத் தருபவனாயும், அங்ஙனம் நோக்கா தார்க்கு மயக்கத்தைத் தருபவனாயும் இருக்கின்றான். அவனது மாயத்தால் மயங்கிய மக்களாகிய புறச்சமயிகள் தமக்குக் கிடைத்துள்ள மக்கள் உடம்பு தரும் பயனை அறியும் அறிவிலராய் அப்பயனை இழப்பர்.

குறிப்புரை :

`சேயன் அணியன் ஆகிய பிணியிலனது பேர் நந்தி` என்க. பிணி - பிணிப்பு; முதனிலைத் தொழிற்பெயர். சேயன் முதலிய மூன்றும் எதிர்மறை வினைக்குறிப்புப் பெயர். பின்னர், ``மாயன்`` என்றலின், ``தூயன்`` என்பது அதன் மறுதலையை உணர்த்திற்று. மாயன் - மாயத்தை - மயக்கத்தை - செய்பவன். `துளக்கற நோக்கு வார்க்குத் தூயன்` எனவே. மாயனாதல், அங்ஙனம் நோக்காதார்க் காயிற்று. ஐந்தொழிலில் அருளலையே `தெளிவித்தல்` எனவும், மறைத்தலையே `மயக்குதல்` எனவும் கூறினார். இவை இரண்டும் அவரவரது பக்குவம் பற்றியாம். அதனால், பக்குவம் இல்லாதார் புறச் சமயங்களையே `மெய்ச்சமயம்` என மயங்கி, மக்கட் பிறப்பின் பயனை எய்தா தொழிவர் என்பதாம்.

``பரசம யங்கட் கெல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே`` 1

என்ற சிவஞான சித்தியையும் நோக்குக.

இதனால், புறச் சமயங்களின் நீங்குதல் பக்குவம் இல்லா தார்க்குக் கூடாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 12

வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான

வழியது பார்மிசை வாழ்தல் உறுதல்

சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்

றழிவறி வார்நெறி நாடகில் லாரே.

பொழிப்புரை :

`பிறப்பு, வீடு` என்னும் இருவழிகட்கும் வித்தாய் உள்ளது, நிலவுலகில் வாழ்தலாகிய ஒரே வழியாம். அதனால், இவ்வுலகில் வாழ்பவர் யாவராலும் அடையப்படுவது, பிறவிச் சூழலின் நிலையை அறிந்து, அதனை அகற்ற வல்ல ஆசிரியனது உப தேசமாகிய வழியே. ஆயினும், அத்தகைய ஆசிரியன் உளனாதலைக் கண்டு வைத்தும், தாம் கெடும் நெறியை அறிந்து அந்நெறியிலே செல்வோர் அவ்வாசிரியன் அறிவுறுத்தும் நெறியைப் பெற விரும்புதல் இலர்.

குறிப்புரை :

``உறுதல்`` என்றது, அதன் செயப்படுபொருள் மேல் நின்ற ஆகுபெயர். ``சுழி`` என்பதற்கு, `தலைப்பொறி` என உரைப்பினும் ஆம். `சொல்லாகிய வழி` என்க. `முன்னின்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அந்நெறி` எனச் சுட்டு வருவித்து உரைக்க.

இதனால், புறச் சமயிகள் நல்லாசிரியரை யடுத்து நன் னெறியை உணர அறியாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 13

மாதவர் எல்லாம்மா தேவன் பிரான்என்பர்

நாதம தாக அறியப் படும்நந்தி

பேதம்செய் யாதே பிரான்என்று கைதொழில்

ஆதியும் அந்நெறி ஆகிநின் றானே.

பொழிப்புரை :

பெரிய தவத்தையுடையோர் யாவரும், `மகா தேவன்` என்பதைத் தன் பெயராக உடைய சிவனே முதல்வன் என ஒருபடித்தாகக் கூறுவர். அதனால், அவர் கூறிய வாறே அறியப்படுபவ னாகிய சிவனைச் சிறிதும் வேறுபடாத அக்கருத்துடன், `முதல்வனே` என்று அழைத்துக் கும்பிட்டால், அந்தச் சிவனும் நன்னெறியாய் நின்று நலம் தருவான்.

குறிப்புரை :

நாதம் - தலைமை. பிரான், அண்மை விளி பயனிலைப் பெயராகக் கொண்டுரைப்பின். அது முன்னரே கூறப்பட்டதாதல் அறிக. ``நந்தியை`` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. ``அந்நெறி`` என்பதே, `அம் நெறி` எனப் பிரித்துப் பொருள் கூறுக. அம் - அழகு; நன்று. `அந்நெறி` எனச் சுட்டாகவே கொள்ளின், `தானே பிரானாம் நெறி` என உரைக்க.

இதனால், `சிவ நெறி யல்லாதன பலவும் அறியாதார் கொள்ளும் மயக்க நெறியே` என்பது கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 14

அரநெறி அப்பனை ஆதிப் பிரானை

உரநெறி யாகி உளம்புகுந் தானை

பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்

பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே.

பொழிப்புரை :

`உலகியலின் மேம்பட்ட வீட்டு நெறியாது` என்று ஆராய்கின்ற அன்பர்களது உள்ளம், சிவ நெறித் தந்தையும், முதற் கடவுளும், ஞான நெறியாய் ஞானிகளது உள்ளத்து விளங்கு பவனும் ஆகிய சிவனை அறியா தொழியுமாயின், அவ்வுள்ளங்கள் பலவகையாலும் வீட்டு நெறிக்கு மிகச் சேய்மைப்பட்டனவே யாகும்.

குறிப்புரை :

``யதா சர்மவ தாகாசம் வேஷ்ட இஷ்யந்தி மானவா;I

ததாசிவ மவிக்ஞாய துக்க ஸ்யாந்தோ பவிஷ்யதி II``

என்னும் உபநிடத வாக்கியத்தையும்,

``பரசிவ னுணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையும் என்றும்

விரவிய துயர்க்கீ றெய்திவீடுபே றடைது மென்றல்

உருவமில் விசும்பின்தோலை உரித்துடுப்பதற் கொப்பென்றே

பெருமறைபேசிற்றென் னின்பின்னுமோர்சான்று முண்டோ`` 1

எனவும்,

``மானிடன் விசும்பைத்தோல்போல் சுருட்டுதல் வல்லனாயின்

ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடு மெய்தும்

மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே

ஆனமர் இறையைக் காணும் உபாயமேயறிதல் வேண்டும்`` 2

எனவும் இதனை மொழிபெயர்த்துக் கூறியவற்றையும் இங்குக் காண்க. உரம் - அறிவு. ``உரனென்னும் தோட்டி`` 3 என்பதும் காணத்தக்கது. ``பரன்`` என்பதை அவ்விடத்துத் தொகுக்கப்பட்ட இரண்ட னுருபை விரித்து, ``புகுந்தானை`` என்பதன்பின் கூட்டி உரைக்க.

இதனால், புறச்சமயங்கள் வீட்டுநெறி ஆகாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 15

பரிசறி வானவன் பண்பன் பகலோன்

பெரிசறி வானவர் பேற்றில் திகழும்

துரிசற நீநினை தூய்மணி வண்ணன்

அரிதவன் வைத்த அறநெறி தானே.

பொழிப்புரை :

மாணவனே, உயிர்களது வினையின் தன்மைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அவைகளைப் படைப்புத் தொழிலிற் படுத்துகின்ற பிரமன், உயர்குணமாகிய `சத்துவ குணத்தை உடையன்` எனக் கூறப்படுகின்ற மாயோன். பகலவன், மக்களோடு படுத்து நோக்குங்கால் உயர்ந் தோராக எண்ணப்படுகின்ற இந்திரன் முதலிய தேவர்கள் இவர்களது பதவியில் விளங்க விருப்பும் உனது விருப்பம் அறும்படி நீதூய மாணிக்கம் போலும் நிறத்தை உடைய சிவனைநினை; ஏனெனில் அவன் அருளிச்செய்த சிவநெறி ஒன்றே அடைதற்கு அரிய நல்ல நெறியாகும்.

குறிப்புரை :

பெரிது, `பெரிசு` என மருவிற்று. அப்பண்புகொள் பெயர். `பெரும்பொருள்` என நின்று, உயர்வை யுடையாரைக் குறித்தது. அன்றி ஆகுபெயராய் நின்ற பண்புப் பெயர்` என்றலுமாம். `பெரிசாக` என ஆக்கம், வருவிக்க. ``திகழும்`` என்பது திகழ விரும்பும் காரணத்தின்மேல் நின்றது. `வண்ணனை, என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. அருமை, நிலையுடையதாதல் பற்றிக் கூறப்படுவது.

இதனால், புறச்சமயங்கள் பிற தேவர்களது பதவிகளை நிலை யுடையனவாகக் கருதும் குற்றத்தைப் பயப்பனவாதல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 16

ஆன சமயம் அது இதுநன் றெனும்

மான மனிதர் மயக்க மதுவொழி

கானங் கடந்த கடவுளை நாடுமின்

ஊனங் கடந்த உருவது வாமே.

பொழிப்புரை :

`அதுவே பொருத்தமான சமயம், இதுவே நன்றான சமயம்` என ஓரோர் காரணம் பற்றிப் பற்றுக் கொண்டு பிதற்றுகின்ற மக்களது பிதற்றலால் உண்டாகின்ற மயக்கம் உம்மை விட்டு நீங்க, நீவிர் நாதம் கடந்த கடவுளாகிய சிவனை நினையுங்கள்; ஏனெனில், அந்த நினைவே குற்றமற்ற வகைமையைத் தருவதாம்.

குறிப்புரை :

மானம் - அபிமானம். `மாயம்` என்பது பாடமன்று. ``மனிதர் மயக்கம்`` என்னும் ஆறாவதன் தொகை `வாளது வெட்டு` என்பதுபோல நின்றது. ``மயக்கமது`` என்னும் அது, பகுதிப்பொருள் விகுதி. `ஒழிய` என்பதன் ஈற்று அகரம் குறைந்து நின்றது. அன்றி வினைத்தொகை யாக்கி, `ஒழிக்கின்ற கடவுளை` எனலுமாம். ``கானம்`` என்னும் இசையின் பெயர் சொல்லொற்றுமையால் நாத தத்துவத்தைக் குறித்தது. ``உரு`` என்பது `வண்ணம்` என்னும் பொருட் டன்மையை உணர்த்திற்று. உருவைத் தருவதனை ``உரு`` என்றார்.

இதனால், புறச்சமயிகள் தம்மில் ஒற்றுமையிலாராய் மாறுபட்டுப் பலதலைப்பட்ட கருத்துக்களைக் கூறிமக்களை அலைக்கழிப்பவராதல் கூறப்பட்டது.

``தம்மை - உணரார்; உடங்கியைந்து தம்மிற்

புணராமை கேளாம் புறன்`` 1

என்றார் சிவஞான போதத்திலும்.


பண் :


பாடல் எண் : 17

அந்நெறி நாடி அமரர் முனிவரும்

சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின்

முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்

செந்நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

தேவர்களும், முனிவர்களும் `சிறப்புடைய நெறி யாது` என ஆராய்ந்து உணர்ந்து சென்ற நெறியையே நேரிய நெறியாகக் கொண்டு ஒழுகி, அதனால், சிவனேயாய் நின்ற பேற்றினைப் பெற்றார் சத்திநிபாதர். மற்றுச் சத்திநிபாதம் இல்லாதவர் தம் மனம் சென்ற நெறியையே நேரிய நெறியாக்கொண்டு முற்கூறிய நேரிய நெறியிற் செல்லமாட்டாது, பிறவிக் கடலுட் கிடந்து கலங்கு கின்றது இரங்கத்தக்கது.

குறிப்புரை :

`இரங்கத்தக்கது` என்பது சொல்லெச்சம். அம்நெறி - அழகியநெறி. ``முதல்வன் அருள்`` என்றது சத்திநிபாதத்தை, பின்னதில். ``அருளிலார்`` என்பதனால், முன்னதில் ``அஃது உடையார்`` என்பது பெறப்பட்டது. முன்நெறி வினைத்தொகை.

இதனால், புறச்சமயங்கள் சத்திநிபாதம் வாயாத உலகர்க்கே உரியனவாய்ப் பிறவிக் கடலைக் கடப்பியாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 18

உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான அங்கியுள் ஆங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.

பொழிப்புரை :

அடையத்தக்க நல்ல நெறியை அறிய எழுகின்ற அறிவைச் சாருமாற்றை அறிந்துவிடுமாயின், பிழை யாதும் இல்லையாகும். ஆனால், அறிவில்லாத மக்கள், குற்றங்கள் யாவும் எரிந் தொழிதற்கு ஏதுவாம் நெருப்பாகிய அந்த அறிவினுள் புகுந்து தம் அல்லலை ஒழியுமாற்றை அறிகின்றார்களில்லை.

குறிப்புரை :

`அதனால், அவர்கள் புறநெறிகளிற் சென்று அல்லல் உறுகின்றார்கள்` என்பது குறிப்பெச்சம். ``அறிவது`` என்றது அறிவை. உம்மை சிறப்பு. அறுதற்கும், இறுதற்கும் வினை முதல்கள் வருவிக்கப்பட்டன.

இதனால், புறச் சமயங்கள் மயக்க அறிவினை யுடையார்க்கு ஆவன ஆதல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 19

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையம்

கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்

சுழிநடக் குந்துய ரம்மதி நீக்கிப்

பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

பொழிப்புரை :

பிறவிச்சுழலிலே கிடந்து எய்துகின்ற துன்பங்களை யெல்லாம் போக்கி, அதனால், அறிவுடையவர் பழிக்கும் பழியையும் போக்கிக்கொள்ள விரும்புவார்க்கு நிலத்திலே பயணம் செய்தல் போன்ற நல்லவழி ஒன்று உண்டு. அதைப் போற்றி அடைதல் அத்துன்பங்கள் நீங்கும் காலம் வரப்பெறாதோ ரெல்லாம் சுழிவழியே பயணம் செய்வோர் போலப் புறச் சமயிகள் கூறும் கற்பனை உரைகளை `மெய்` என்று கேட்டு அவற்றின்படியே நடப்பர்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, முதலடியில், ``வையம்`` என்பதனை முன் வைத்து, ``பரவலும் ஆம்`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``வையத்தின்கண் வழி நடக்கும்`` என்க. தரை வழியாகப் பயணம் செய்வோர் துன்பம் இன்றிக்குறித்த இடத்தை அடைதலும், சுழிவழியாகப் பயணம் செய்வோர் ஓரிடத்தும் தரையை அடையாவிடின் சுழன்று கொண்டே இருப்பவராதலும் அறிக. காலம், சத்தி நிபாதம் காலம், ``ஒன்று உண்டு`` எனக்கூறியொழிந்தமையால், `அஃது அருமறையாய், (அரிய இரகசியமாய்) தக்கார்க்கே உணர்த்தப் படுவது` என்னும் குறிப்பினதாயிற்று. அவ் ஒன்றாவது, சித்தாந்த சைவமாம்.

இதனால், புறச் சமயங்கள் வெறும் சுழற்சியாய்ப் பயன் தாராது உலகரை மயக்கி நிற்பனவாதல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 20

வழிசென்ற மாதவம் வைக்கின்ற போது

பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே

அழிசெல்லும் வல்வினை ஆர்திறம் விட்டிட்

டுழிசெல்லில் உம்பர் தலைவன் முன்ஆமே.

பொழிப்புரை :

``வையத்தின் கண் வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு`` என மேற்கூறப்பட்ட வழியிலே சென்றதாகிய பெரிய தவம் தனது பயனைக் கொடுக்கின்ற காலத்தில் மக்கள் தங்கட்குப் பழிவரக் கூடியதான வலிய வினைக்கட்டினை அறுத்தொழித்து, அது காரணமாக, முன்பெல்லாம் அழிவு வழியில் சென்று கொண்டிருந்த அச்செயலில் பொருந்துதலாகிய தன்மையை விடுத்து நல்ல இடத்தை அடைவர். அங்ஙனம் அடைந்தால், தேவர் பிரானாகிய சிவன் வெளிநின்று அருள் புரிவான்.

குறிப்புரை :

`வைக்கின்ற` என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. `வாய்க்கின்ற` எனப்பாடம் ஓதலுமாம். பழி, அறிவுடையோர் பழித்துச் சொல்லும் சொல். ``அழி`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் அதனைத்தரும் வழியை உணர்த்திற்று. `அழிவில் செல்லும் அவ்வினை` என்க. ஆர்தல் - பொருந்துதல். ``உழி`` என வாளா கூறினமையின், சிறந்த இடமாயிற்று. அது, ஞானமாகிய நிலம் என்க. ``செல்லில் என்ற அனுவாதத்தால், `செல்லுவர்` என்பதும் பெறப்பட்டது.

இதனால், தவம் உடையார்க்கே புறச்சமய மயக்கம் நீங்கிப் பயன் உண்டாதல் கூறப்பட்டது. தவமாவது, மேற் கூறிய சரியை முதலிய மூன்றுமே யாதலை நினைக. இங்கு, ``மாதவம்`` என்றதும் அதனைக் குறித்தற் பொருட்டேயாம்.


ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்

 ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்

பண் :

பாடல் எண் : 1

சிமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

மலைபோன்றவர்களாக மதிக்கப்படுகின்ற தேவர் பலருக்குரிய புறச்சமயங்களைத் தமக்கு உரியனவாகக் கொண்டோர் அவற்றின் நூல்களை ஓதி, `அதனால், நிறை நிலையை அறிந்து விட்டோம்` என்று பெருமை பேசிக்கொள்வார்கள். ஆயினும், முதற் கடவுளாகிய சிவபெருமான் அவர்களது உள்ளத்தில் தோன்றாது மறைந்து, பொறையுடைமை, வெகுளாமை முதலிய ஒழுக்கங்களை உடையவரது உள்ளத்திலே விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

சிமயம் - மலை. ஆக்கம், உவமை குறித்து நின்றது. `மலைபோல்வாராக மதிக்கப்படுதல் அறிவு நிரம்பாதாரால்` என்க. `இமையங்கள்` என்பது பாடமன்று. ``சிமையம், சமையம்`` என்ப வற்றில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்தது. அமை, முதனிலைத் தொழிற் பெயர். அமைதல் - நிரம்புதல். கமை - பொறை. இது மற்றைய ஒழுக்கங்கட்கு உபலக்கணம். `புறச்சமய நூல்களையே உண்மை நூல்கள் என மயங்கினாராயினும், அவை பற்றிப் பிற சமயங்களைப் பழித்து நிற்றலை விடுத்து, அவை கூறும் ஒழுக்கத்தை உடைய ராயினார்க்குச் சிவன் அருள்புரிவன்` என்றவாறு. இதனானே சிவ நூலை ஓதினார்க்கும் இது குறிப்பாற் கூறப்பட்டவாறு அறிக.
இதனால், நூல்களை ஓதியவழியும் ஒழுக்கம் இல்வழிப் பயன் இன்றாதல் கூறப்பட்டது. இதனை,
``ஓதலின் நன்றே வேதியர்க் கொழுக்கம்`` 1
``மறப்பினும் ஓத்துக்கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`` 2
என உயர்குலத்தார்மேல் வைத்தும்,
``ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை`` 3
`ஓதியுண்ர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்`
எனப் பொதுப்பட வைத்தும் பிறவிடங்களிலும் கூறுமாறு அறிந்து கொள்க.


பண் :

பாடல் எண் : 2

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.

பொழிப்புரை :

நன்மை அமைந்த சிவபெருமானது திருவடிகளை எப்போதும் தாங்கி நிற்கின்ற மனத்தை உடையவர் இப்பூமியில் தமக்குத் தாமே ஒப்பாகும் பெருமையை உடையவராவார். அவ்வாறின்றி அவற்றை எஞ்ஞான்றும் நீங்கி நின்ற வண்ணமாய் ஒருபோதும் நினையாதவர் உலகில் விரும்பியது ஒன்றனையும் பெறாது வாளா இருந்து துன்புறுவார்கள்.

குறிப்புரை :

`தமக்கு நேர் தாமேயாவர்` என்பதனை, ``நேர் ஒப்பர்`` என்றார். இது, செல்வம் முதலிய எல்லாவற்றாலுமாம். ஏங்குதல் - விருப்பம் நிறைவுறாமையால் அதனையே நினைத்துக் குறையுறுதல். இதனை `ஏக்கறுதல்` எனவும் கூறுவர். `இரந்தழுவார்` எனப்பாடம் ஓதி, ``இரத்தலை மேற்கொண்டு அதனானும் நிரம்பப் பெறாது துன்புறுவர்`` என்று உரைப்பினுமாம்.
``வானகம் ஆண்டுமந் தாகினி ஆடினந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும், சிதவல் சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப் போரும் - கனகவண்ணப்
பானிற நீற்றற் கடியரும், அல்லாப் படிறருமே`` 1
என்றாற்போல்வனவற்றையும் இங்கு நினைக.
இதனால், சிவனடியை நினைதல் நினையாமைகளே ஒழுக்கமும், இழுக்கமுமாதல் கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 3

இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும்
அருந்தவம் மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.

பொழிப்புரை :

வாழும் வழி யாதும் அறியாது திகைத்திருந்து அழுகின்றவர்களும், முன்னர் வாழ்வுடையராய் இருந்து பின்னர்க் கேடு எய்தினவர்களும் (தாம் முழுத் தீவினையும், அரைத் தீவினையும் உடையராய் இருத்தலை அறிந்து அவை ஒழிதற்பொருட்டு) அந்நிலை யில் அரிய தவம் செய்தலை மேற்கொண்டு சிவபிரானை நினைவரா யின், தேவ தேவனாகிய அவன் அவர்களது தாழ்நிலையை நீக்கி, உயர் நிலையைத் தருவன் - அதுவே யன்றி அவர்கட்குப் பிறப்பற்ற வீடுபேறும் உண்டாகும்.

குறிப்புரை :

`சிவபிரானை நினைத்தலே மேலான தவமாம் என்றற்கு, ``அருந்தவம் மேற்கொண்டு`` என்றார்.
இதனால், சிவ பத்தியாகிய தவ ஒழுக்கம் உடையோர் தீவினையின் நீங்கி நலம் பெறுதல் கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 4

தூரறி வாளர் துணைவன் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தானுண்பர்
காரறி வாளர் கரந்து பிறப்பர்கள்
நீரறி வாளர் நெடுமுகி லாமே.

பொழிப்புரை :

தூர்ந்த அறிவினை உடையோர் தோன்றாத் துணை யாயுள்ள இறைவனை நினைக்கமாட்டாது யாதொரு பயனையும் எய்தார். தூல அறிவினை உடையோர் வருவதை அனுபவித்துக் கொண்டிருப்பர். மயக்க அறிவினை உடையோர் உள்ளதை `இல்லை` என்று சொல்லி மறைத்து, அதனால், பின் வறியராய்ப் பிறப்பர். அறத்தின் தன்மையை அறிந்த அறிவினை உடையோர் பெரிய மேகம் போலப் பலர்க்கும் கைம்மாறு கருதாது உதவி, அதனால், பின் செல்வராய்ப் பிறப்பர்.

குறிப்புரை :

தூரறிவு, படுபயன் என்பன வினைத்தொகை. பாரறிவு, காரறிவு என்பன பண்புத்தொகை. தூர்ந்த அறிவாவது அறிவின்மை; பேதைமை. `துணைவனை` என்னும் இரண்டன் உருபு தொகுத்தல் பெற்றது. ``நினைப்பிலர்`` என்றது தன் காரியமும் உடன் தோன்ற நின்றது. `நாகரது பலி` என்பது போலும் ஆறாவதன் தொகை எனினுமாம். `காரறிவு, மயக்க அறிவு` என்பதனை, ``களவென்னும் காரறிவாண்மை``1 என்பது பற்றியும் உணர்க. நீர் - நீர்மை. நீர்மையை அறியும் அறிவினை ஆளுதல் உடையார்` என்க. ஆக்கம் உவமை குறித்து நின்றது. `ஆவரே` என்னாது `ஆமே` என்றது ஆரிட அமைதி. ``கரந்து`` என்றதனால், `வறியவராய்ப் பிறப்பர்` என்பது பெறப் பட்டது. படவே, முகில்போல்வார் செல்வராய்ப் பிறத்தல் கூறப்பட்டதாம்.
இதனால், அவரவர் அறிவு நிலைக்கு ஏற்பவே அவரவரது ஒழுக்கம் உண்டாமாறு கூறுமுகத்தால், மெய்யறிவினை யுடையோர் சிவ பத்தி யுடையராய் ஒழுகல் வேண்டும் என்பது கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 5

அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டும் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

பொழிப்புரை :

சிவனது திருவடியாகிய, ஞானத்தொடு பொருந்தி வருவித்துஏறிய ஒப்பற்ற ஓர் தோணி, வினையாகிய சரக்கினை அது நின்ற உடலாகிய மூடையோடு சிவலோகமாகிய பழைய நகரத்தை அடைந்து, இறக்கிவிடுகின்ற அறிகுறிகளை அறிந்தும், தீவினை யுடையோர் அத்திருவடிகளைப் பொருந்தி நிற்க எண்ணுவதில்லை.

குறிப்புரை :

``அறிவுடன் கூடி அழைத்தது`` என்றது `நல்ல தோணியை அறிந்து அழைத்து அதில் ஏறுதல் அறிவுடையோர்கன்றி ஆகாமைபோலச் சிவனடியை வேண்டிப்பெறுதல் ஞானிகட்கு அல்லது ஆகாது` எனக் கூறியதாம். பறி - கூடை, அது சரக்குப் பொதிந்த மூடையைக் குறித்தது. தோணி, பறி, பழம்பதி என்பன சிறப் புருவகங்கள். அறிகுறிகள், அவ் அடியைப்பற்றினோர் மாட்டுக் காணப்படும் ஏமாப்பு, நமனையும் அஞ்சாத அச்சமின்மை 1 முதலியன.
இதனால், அறிவேயன்றி, ஒழுக்கமும் நல்வினையுடையார்க் கன்றி வாயாமை கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 6

மன்னும் ஒருவன் மருவு மனோமய
னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

பொழிப்புரை :

அழிவிலனாகிய இறைவன் தன்னை நினைப்ப வரது நினைவே வடிவாய் விளங்குபவன் என்று வேதாகமங்கள் சொல்லவும் அதனை அறியாது இவ்வுலகத்தில் உள்ள அறிவிலிகள் அவனை நினையாது இகழ்ந்தொழிவார்கள். நீவிர் அங்ஙனம் செய்யாது மனம் பொருந்தி அவனை வணங்குங்கள். வணங்கினால், அப்பொழுதே ஒப்பற்ற ஒருவனாகிய அவனை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``என்னில்`` என்பது, அதனை உணர்ந்து நினைதலே அவனைத் தலைப்படுதற்குக் காரணமாதலைக் குறித்தது. `மனிதர்` என்னும் விதப்பு, `மனிதத்தன்மை இலர்` என்னும் இகழ்ச்சிக் குறிப்பினது.
இதனால், அறிவிலும் ஒழுக்கமே சிறந்த சாதனமாதல் கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 7

ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.

பொழிப்புரை :

பிரணவத்தின் உள்ளே விளங்குவதாகிய ஒளியை அறிவினுள்ளே வெளிப்படுதலால் உண்டாகின்ற அனுபவத்தை அடையப் பெறார்; இறப்பு என்றாயினும் ஒருநாள் உளதாதலை நினையார்; அதனை நினைந்து, மேலும் பிறந்து இறத்தலை ஒழியும் நெறியைப் பற்றார்; வாளா சமயத்தை மட்டும் பற்றிக்கொண்டு அதன் பயனைப் பெறாதொழிகின்றார்கள் மக்கள்.

குறிப்புரை :

சமயத்தில் நிற்பார் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்களை எதிர்மறை முகத்தான் உணர்த்தி, அவற்றையுடை யோரே சமயத்தின் பயனைப் பெறுவர் எனக் கூறியவாறு. `உறுதலான்` என்பதன் திரிபாகிய ``உற்று`` என்பது ``கைகூடார்`` என்பதன் முதனிலையோடு முடிந்தது.
இதனால், சமய ஒழுக்கம் இல்லாத சமயிகள் சமயத்தின் பயனை எய்தாமை கூறப்பட்டது.


ஞாயிறு, 12 ஜூலை, 2020

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்


பண் :

பாடல் எண் : 1

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்த அனாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட
அமையங் கழல்கின்ற ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

தேவர்களையும், மக்களாகிய எம்மையும் உய்தி பெறுதற்குப் பொருந்தும் வகையினராகப் படைத்த அனாதியான பழையோன், அகச் சமயங்கள் ஆறும் தன் திருவடியையே நாடி நிற்கும்படி அமைய, அவற்றைக் கடந்து நிற்கும் முதல்வனாகின்றான்.

குறிப்புரை :

எழுவகைப் பிறப்பினுள் தெய்வப் பிறப்பும், மக்கட் பிறப்பும் ஒழிந்தவை பெரும்பாலும் வீடு பெறுதற்கு வாயிலாதல் இல்லையாக, இவ்விரு பிறப்புக்களுமே அதற்கு வாயிலாதல் வெளிப் படை. `அவை அங்ஙனமாதலும் இறைவனது திருக்குறிப்பின் வழியது` என்பதும், `அவ் இருவகைப் பிறப்பின் உயிர்களும் உய்தி பெறுதல் அகச் சமயங்களின் வழியே` என்பதும், `அங்ஙனமாயினும் இறைவனது உண்மை நிலை சமயங்களைக் கடந்தது` என்பதும் கூறிய வாறு. ``சமையம்`` என்பதில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்தது. `தன் தாளினை நாட அமைந்தன` என்பதனால், ``சமயங்கள்`` எனப் பட்டன உட்சமயங்களே ஆயின. `அமையக் கழல்கின்ற` என்னும் ககர ஒற்று மெலிந்து நின்றது. இவ்வாறன்றி, `அச்சமயங்களது (செவ் வழிகளை) நிலைகளைக் கடந்து நிற்கின்ற எனலுமாம்.
இதனால், வீடுபெறும் உயிர்கட்கு அதற்குரிய வழிகளாய் நிற்பன அகச் சமயங்களே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஒன்றதே பேரூர் வழிஆ றதற்குள
என்றது போலும் இருமுச் சமயமும்
நின்றிது தீதிது என்றுரை ஆதர்கள்
குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``உள`` என்பதனை, ``இருமுச் சமயமும்`` என்பதன் பின்னும் கூட்டுக. மூன்றாம் அடியாற்போந்த பொருள், `கலாய்ப்பவர்` என்பது. ஆதர்கள் - அறிவில்லாதவர்கள். `மலையைப் பார்த்து நாய் குரைத்தல் போல` என்பது பழமொழி. ``ஒத்தார்கள்`` என்றது, அகச் சமயத்தவருள் ஒரு சமயத்துள் நின்றுபிற சமயங்களை இகழ்பவரை. `அங்ஙனம் இகழ்தல் அவையும் பிறவாற்றால் உண்மையை உணர் தற்கு வழியாதலை அறியாமையாலாம்` என்பது கருத்து. இறுதியிற் போந்த உவமை, அகச் சமயிகளிடைப் பூசல் விளைப்பார்க்கே ஆதல், வெளிப்படை. இதன் முதல் அடியோடு ஒப்ப,
``சுத்தவடி வியல்பாக உடைய சோதி
சொல்லியஆ கமங்களெலாம் சூழப் போயும்
ஒருபதிக்குப் பலநெறிகள் உளவா னாற்போல்``1
எனச் சிவஞானசித்தியும் கூறுதல் காண்க. `ஒரு பதிபோல்வது` கருத்து என்பதும், `பல நெறிகள் போல்வன சொற்கள் என்பதும் சித்தியுள் தோன்றுதல் காண்க.
இதனால், அகச் சமயங்கள் சொல் வகையாலும், செயல்வகை யாலும் வேறுபடினும், கருத்து வகையால் ஒன்றாதலைக் கூறி, அஃது அறியாது அவற்றிடை நிற்போர் தம்மிடைக் கலாய்த்தலும், சைவரை இகழ்தலும் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சைவப் பெருமைத் தனிநா யகன்றன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
எய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.

பொழிப்புரை :

அகச் சமயங்கள் அறிந்தோ, அறியாமலோ கருத்து வகையால் சைவத்தோடு ஒன்றி நிற்றலை அவருள் அறியாதாரை நோக்கி அதனையே இதுமுதலாக அறிவுறுத்துகின்றார். இதனை, சைவ சமயச் சிறப்பு என்பதொரு தனி அதிகாரமாகக் கொள்ளினும் பொருந்தும்,
சைவ சமயத்தால் கொள்ளப்படும் ஒப்பற்ற தலைவனும், மக்கள் உயிர் நெடிது வாழ்ந்து உய்தி பெறுதற் பொருட்டு உயிர்ப்பாய் இயங்கு கின்றவனும், சிறந்த ஞான வடிவானவனும், தன்னை உணரும் பெருமை யுடையவரிடத்துத் தானும் அன்பு செய்கின்றவனும், அனைத்துயிர்க்கும் முடிவில் அவை விரும்பும் பேரின்பத்தைத் தருபவனும், இவ்வியல்புகளால் உண்மைத் தலைவன் தானே ஆகின்றவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் நீங்கி நிற்றலை விடுத்து, அணுக வந்து அடைந்து பிழையுங்கள்.

குறிப்புரை :

`சைவ சமயமே தலையாய சமயம்` என்பது, மேல் பல விடத்தும், பலவகையானும் விளக்கப்பட்டமையின், அச்சமயத்தாற் கடவுளாகக் கொள்ளப்படுதலும் பெருமையாயிற்று. இறைவன் உயிர்ப்பாய் இயங்குதல் மேலேயும் (1512) கூறப்பட்டது. எய் - எய்தல்; அறிதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``எய்ய`` என்பது இதனடியாகப் பிறந்த பெயரெச்சக்குறிப்பு. ``வையம்`` என்றது உயிர்களை, ``வந்தடைந்து உய்மின்கள்`` என்றது, அவர்மாட்டு எழுந்த கருணைபற்றி.
இதனால், சைவக் கடவுளாகிய சிவபிரானது பெருமையை வகுத்துணர்த்தி, அவனைச் சார, அழைத்தல் செய்யப்பட்டது, அகச்சமயிகளாதலின் அவர்தாம் உணர்த்தியவாறே உணர்ந்து ஒழுகுவார்கள் ஆதலின், இனி வருவனவும் இவைபற்றி என்க.

பண் :

பாடல் எண் : 4

சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில்
பவனவன் வைத்த பழவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே.

பொழிப்புரை :

தெய்வந் தெளிந்து அதன் இயல்பை ஆராயும் எல்லாச் சமயங்களையும் உலகில் ஆக்கி வைத்தவன் சிவபெருமானே எனினும் அவற்றுள் முற்பட்டதாகிய சமயம் சைவமே. அதனை அடைந்தோர் `இச்சமயக் கடவுளாகிய சிவனே ஏனைச் சமயங் களினும் நின்று பயன் தருகின்றான்` என்பதை உணர்வர். அங்ஙனம் உணர்ந்தவர்க்கு அவன் அச்சமயங்களில் ஏற்ற பெற்றியால் நின்று அருள்புரிதலும் விளங்கும்.

குறிப்புரை :

ஓர்தல் - ஆராய்தல் `ஓர் நெறி` என இயையும். `பவன்` என்பது சிவனது நாமங்களில் சிறந்ததொன்று. ``பழவழி`` என்றது, `முன்னர்த் தோன்றியநெறி` என்றவாறு.
``முன்னெறியாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி`` 1 என அப்பரும் அருளிச்செய்தார். மூன்று, நான்காம் அடிகளில் வந்த ``அவன்`` என்பன, பிற சமயக் கடவுளரைத் தனித்தனிச் சுட்டிற்று. ஈற்றடியில் நின்ற ``அவன் அவன்`` என்பது ஒரு சொல் அடுக்கு `அவன் அவனாய் உளது` என ஆக்கம் வருவிக்க. ``உளது`` என்பது அப்பண்பு குறித்துநின்றது. கடன்முறைமை. `உள்ள முறைமை` என்பதனை ``உளதாங் கடன்`` என்றார். இறுதிக்கண் ``ஆம்`` என்றது `விளங்கும்` என்றவாறு.
இதனால், `அகச் சமயத் தோர்களிடமாக நின்று அருள் பவனும் சிவனே` என்பது கூறப்பட்டது.
``யாதொரு சமயங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்`` 2
என்ற சிவஞான சித்தியையும் காண்க.

பண் :

பாடல் எண் : 5

ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதுஅங்
காமாம் வழிஆக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.

பொழிப்புரை :

பொருந்தும் வழியையே கூறுகின்ற அகச் சமயங்கள் ஆறுக்கும் தலைவனாகிய சிவபெருமானை நேரே சென்று அடைதற்குப் புண்ணியம் தவிர வேறில்லை. சைவத்தில் நிற்பவர்க்கேயன்றி பிறசமயங்களில் நிற்கும் அனைத்துயிர்கட்கும் மேற்செல்லும் வழியாகிய அந்தச் சிவசத்தியாகிய முதல்வியே அவ்வுயிர்கட்கு அச்சமயங்களைப் பொருந்தும் வழியாகக் கூட்டு விப்பாள்.

குறிப்புரை :

``சமயாதி`` நான்காவதன்தொகை `ஆதிக்கு` என்னும் நான்காவதை ஏழாவதாகத் திரித்துக்கொள்க `ஆம் ஆம்` என்னும் அடுக்கு, `அவ்வவற்றிகுப் பொருந்துகின்ற, என்னும் பொருட்டு. வழி ஆக்கும் - வழியாகக் கூட்டுவிக்கும். ``ஆமாம் வழி ஆக்கும்`` என்பதனை இறுதியிற் கூட்டி உரைக்க. `போமாறாகிய கொடி` என்க. ஆதாரம் - அனைத்திற்கும்` நிலைக்களம். அங்ஙனம் ஆவது சிவ சத்தியே யாதல் அறிக.
இதனால், `அகச் சமயங்களும் சிவசத்தியின் செயலால் அமைந்தனவே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அரனெறி யாவ தறிந்தேனும் நானும்
சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி உள்ளக் கடல்கடந் தேறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

பொழிப்புரை :

அகமாகிய சிவநெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்திலும் ஞான நெறியால், அளவற்ற எண்ணமாகிய கடலைக் கடந்து ஏறுதற்குரிய உயர்ந்த நெறியாய் உள்ள ஒப்பற்ற ஒளி நெறி யாவது சிவனது நெறியே யாதலை அறிந்தவனு மாயினேன் நானும்.

குறிப்புரை :

ஆகவே, `அகநெறியில் (உட்சமயங்களில்) நிற்போர் சிவநெறியை அடைந்து உய்யும் நிலையைப் பெறுவர்` என்றவாறு. உம்மைகள் இரண்டனுள் முன்னது உயர்வு சிறப்பும், ஏனைய இழிவு சிறப்புமாம். ``அறிந்தேனும்`` என்பதன்பின் `ஆயினேன்` என்பது எஞ்சிநின்றது. முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. உரம் - ஞானம். ``உள்ளம்`` என்றது, அதன்கண் தோன்றும் எண்ணத்தை,
``கருதுப - கோடியும் அல்ல பல``1
என்ப ஆகலின், அவற்றைக் கடலாக உருவகித்தார். `அவற்றைக் கடத்தல் ஞானம் துணையாய வழிக் கூடும்` என்பதையும், அத் துணையைத் தருவதே உயரிய நெறி என்பதையும், அதனால், அஃது `ஒளிநெறி` எனப்படுகின்றது என்பதையும் எடுத்தோதி, `அவ் ஒளி நெறி அரன் நெறியே` என்பது உணர்த்தினார். `இதனை அடைதல் உட் சமயிகளுக்கல்லது இயலாது` என்றவாறு. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், உட்சமயங்கள் சிவநெறிக்குத் தடையாகாது துணையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே.

பொழிப்புரை :

அறிவுடையோர் ஆராய்ந்து கண்டு பற்றிச் சிவனை அடைந்து உய்ந்த சைவநெறி, முன்னர் ஆராய்தல் இன்றி நீங்கினோர் பலர் பின்னர் ஆராய்ந்து மீண்டு வந்தடைந்த பெருமை யுடையதும், பொருந்தி நின்றோர் மேற்கதியைப் பெற்றதுமாகும். அதனால், அதுவே, யாவரும் புறநோக்கை விட்டுத் திரும்பிப் புகழ்ந்து அடைதற்குரிய நெறியாகும்.

குறிப்புரை :

``சிவன்`` எனப் பின்னர் வருதலின்` முன்னர், ``தன்னை`` என்றார். பெயர்ந்து வந்தவர் அப்பரைப் போல்வார். பொருந்தினோர் மேற்கதியிற் சென்றமை கூறவே, பொருந்தாது இகழ்ந்து நீங்கினோர் தாழ்கதியிற் சென்றமை பெறப்பட்டது.
``வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூர்அரன் பொன்னடி
யுள்ளி ருக்கும் உணர்ச்சி யிலாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே`` 1
என அப்பரும் அருளிச் செய்தார். புகழை, `புனைந்துரை` என்ப ஆகலின், புனைதல் புகழ்தலாயிற்று.
இதனால், அகச் சமயங்கள் மேற்கூறியவற்றால் தாழ்கதியிற் செலுத்தாதனவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஈரும் மனத்தை இண்டற வீசும் இய்
யூரும் சகாரத்தை ஓது முன் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னில் அத்
தூரும் சுடரொளி தோன்றலு மாமே.

பொழிப்புரை :

இருதலைப் படுகின்ற மனத்தை அவ்வாறு இரண்டாதலினின்றும் நீங்க நீங்குங்கள்; நீக்கி, இகரம் ஊர்ந்த சகர எழுத்தை ஓதுங்கள். ஓதி, சிவனது நெறியில் எம்முடன் வாருங்கள்; வந்து அதில் நிலையாக நின்று அவனை நினைத்தால், உம்முள் மறைந்து நிற்கின்ற விளக்கொளி உங்கட்கு வெளிப்படுதல் கூடும்.

குறிப்புரை :

இருதலைப் படுதல் - ஐயமாய் நிற்றல். `இரண்டின் அற` என ஐந்தாவது விரிக்க. வீசுதல் நீக்குதல். `வீசுமின்` என்பது பாடமாகாமை, பின்னர், ``வாரும்`` என வருதலானும் அறியப்படும். இகரம் ஊர்ந்த சகரம், சி. திருவைந்தெழுத்தில் ஏனையவை இதன்கண் அடங்குதல் அறிந்துகொள்க. `முன்னியத்` தென்பதும் பாடமன்று. முன்னுதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
இதனால், சிவநெறி திருவைந்தெழுத்தால் பல்லாற்றானும் பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரானை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
அனைக்குறி காணில் அரன்நெறி ஆமே.

பொழிப்புரை :

பெண்ணாகச் சொல்லப்படுகின்ற சத்தியாகிய நல்ல வடிவினையும், அந்தணர்கள் வேதத்தின்வழி வளர்க்கின்ற அக்கினி யாகிய வடிவினையும், அன்பர்கள் நினையும் நினைவாகிய வடிவினையும் உடைய சிவபெருமானை ஞானத்தின் முடிநிலை யாகிய அந்த வழியாற் காணுதல் உண்டாகுமாயின், அப்பொழுது சிவநெறி கைவந்ததாம்.

குறிப்புரை :

`மின்னாகிய நற்குறி` என்க. பின்னர்க் கூறப்படும் வடிவங்கள் பலவற்றினும் சிறப்புடையது இதுவேயாதல் பற்றி இதனை, ``நற்குறி`` என்றார். `சிவன்` என்னும் பொருட்டாய் நின்ற, ``ஆதிப்பிரான்`` என்பதை, `நினைக் குறியாளனை` என்பதன் பின்னர்க் கூட்டுக. `நினை` முதனிலைத் தொழிற்பெயர். `அஃது` என்னும் பொருட்டாகிய `அனைத்து` என்பது ஈறுகுறைந்துநின்றது. `அயக்குறி, நயக்குறி` என்பன பாடமல்ல. ஆதல், இங்கு கைவருதல்.
இதனால், சிவநெறி முதல்வன் அவரவர் தகுதிக்கு ஏற்பப் பலவகையில் நின்று தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரன்நெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.

பொழிப்புரை :

உண்மை நூல்களை ஆராய்ந்து உணர மாட்டாதவர் களது, ஏனைய பல திறமைகளும் பொருந்தி உணராதபடி நிற்பது சிவநெறி, அஃது, உண்மை நூல்களில் நுழைந்து அவற்றின் பொருளை உணர்கின்றவர்கள், அவ்வுணர்வின் வழியே சிவனது திருவடியை முதற்கண் அவற்றின் வேறாய் நின்று வழிபட்டுப் பின்னர், அவற்றோடு ஒன்றாய் இயைந்து நுகர்கின்ற இன்பமாய் உள்ளது.

குறிப்புரை :

நான்காம் அடியில், உரை என்பது பாடமன்று.
இதனால், சிவநெறி புறச்சமயிகட்கு உணர ஒண்ணாததாய்ச் சிவநெறியாளர்க்கு முன்னர்க் கரணத்தாற் பெறும் இன்பமாயும், பின்னர்க் கரணங் கடந்த இன்பமாயும் விளைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.

பொழிப்புரை :

`சைவ சமயத்தின் ஒப்பற்ற தலைவன்` எனப் பலராலும் அறியப்பட்ட சிவன் ஆன்மாக்கள் உய்தற்பொருட்டு அமைத்த ஞானநெறி ஒன்றே உள்ளது. அது, தெய்வத் தன்மை பொருந்திய சிவநெறியே. உலகத்தில் ஞானத்திற்குத் தகுதியுடையராய் உள்ளார் அதனை அடைந்து உய்தற்கு அந்த ஒன்றையே அவன் அமைத்திருக்கின்றான்.

குறிப்புரை :

``சைவ சமயத் தனி நாயகன்`` என்பது எழுவாயும், ``நந்தி`` என்பது பயனிலையாயும் நின்று ஒரு பெயர்த் தன்மைப் பட்டது. ``சன்மார்க்கம் சேர்ந்துய்ய`` என்பது முதலாக மறித்தும் கூறியது, நன்கு வலியுறுத்தற்பொருட்டு.
இதனால், உண்மை உய்யும் நெறி சிவநெறியேயல்லது வேறின்மை வலியுறுத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

இத்தவம் அத்தவம் என்றிரு பேர்இடும்
பித்தரைக் காணின் நகும்எங்கள் பேர்நந்தி
எத்தவ மாகில்என்! எங்குப் பிறக்கில் என்!
ஒத்துணர் வார்க்கொல்லை ஊர்புக லாமே.

பொழிப்புரை :

`இத்தவம், அத்தவம்` என்று தவங்கள் பல இருப்பனபோலச் சுட்டிப் பேசும் பித்தர்களைக் காணும்போதெல்லாம் எங்கள் பெரும்பெருமானாகிய சிவன் நகைப்பான். ஏனெனில், எந்தச் செயலாய் இருந்தால் என்ன? எந்தச் சமயத்தில் பிறந்தால் என்ன? தவத்தையும், அதனால் அடையப்படும் இறைவனையும் சிவநெறி யாளரோடு ஒத்த உணர்வினராய் உணர்பவர்கட்கு விரைவில் வீடு பெறுதல் கூடுவதாகும்.

குறிப்புரை :

``எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள்`` 1
என்னும் முடிபுரையையும், அதற்கு இலக்கியமான சாக்கிய நாயனாரது வரலாற்றையும் உணர்க. `பெருநந்தி` என்பது செய்யுள் முடிபெய்தி நின்றது.
தவம், தவச் செயல். ``எங்கு`` எனச் சமயத்தை இடமாக வைத்து ஓதினார். இனி ``எந்நாட்டில்`` எனப் பொருள்கொண்டு, `நாடு களது வேறுபாட்டால் இங்குப் பெறப்படுவது சமயவேறுபாடு` என்றலு மாம். ஒத்தற்கும், உணர்தற்கும் செயப்படுபொருள்கள் வருவிக்கப் பட்டன. வீடு பெறுதலை, ``ஊர் புகல்`` என்றது ஒப்புமை வழக்கு.
இதனால், பிறப்பின் சார்பால் அதன் சமயத் தொடக்கி னின்றும் நீங்கமாட்டாதோரும் சிவநெறிப் பற்றுடையராயின் உய்தி பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்க்
காமே பிரானுக் கதோமுகம் ஆறுள
தாமேய் பிரானுக்கும் தன்சிர மாலைக்கும்
நாமேய் பிரானுக்கு நாரியல் பாமே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்குத் தனது நிலைக்கு உரியன வான ஐந்து முகங்களோடு, கீழ்நிலையில் உள்ள உயிர்களுக்கு உரிய அதோமுகமும் உண்டு. இவ்வாறாக உள்ள ஆறுமுகங் கட்கும், அவன் அணிந்திருக்கின்ற தலைமாலைக்கும் உயிர்கள் அச்சத்தைப் பொருந்துகின்ற அப்பெருமானுக்கு அருள் இயல்பாய் உள்ளது.

குறிப்புரை :

`பிரான் முகம ஐந்தொடு ஆருயிர்க்கு ஆம் அதோ முகம் பிரானுக்கு ஆம்` எனக் கூட்டி உரைக்க. `ஆறாய் உள்ள தாம்` என ஆக்கம் வருவிக்க. ``அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்`` அன்றி நான் காவதும் வரும் பிற்கால வழக்குப்பற்றி, ``பிரானுக்கும் மாலைக்கும்`` என்றார். நாம் - அச்சம். நார் - அருள். முன் இரண்டடிகள் சிவனது முழுமுதல் தன்மையையும், பின் இரண்டடிகள் அவனது வடிவை அஞ்சத்தக்கதாக எண்ணி மருள்வாரைத் தேற்றுதலையும் குறித்தன. யாவரும் அறியும் ஐம்முகம் அவன் தனது உலகத்தில் நின்று தானே ஐந்தொழில் செய்வதற்கும், ஞானியரே உணரத்தக்க அதோமுகம் அனந்த தேவர் சீகண்டர் வழி. உருத்திர லோக தேவ மானுட லோகங்களில் ஐந்தொழில் நிகழ் வித்தற்கும் அமைந்தன என்பது, மேல் இரண்டாம் தந்திரத்து, அதோ முக தரிசன அதிகாரத்துட் கூறப்பட்டதனை இங்குச் சிறப்புணர்த்துதற் பயன் நோக்கிக் கூறினார். எனவே, ``ஆருயிர்`` என்றது `நிறைந்த உயிர்` என்னும் பொருட்டாய்ப் பிரளயாகலர் சகலரைக்குறித்த தாயிற்று. இம்மந்திரத்துள் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், சிவநெறியே மெய்ப்பொருளை முதலாக உடையது` என்பதும், `அம் முதலது தன்மை யறியாது வெருளுதல் மயக்க உணர்வாம்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

ஆதிப் பிரான் உல கேழும் அளந்தஅவ்
வோதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பொழிப்புரை :

முதற் கடவுளாகிய சிவபெருமான், நிலவுலகத் தில் உள்ள ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) சூழ்ந்த ஏழு கடலாயும், அப்பொழில்களில் வாழ்கின்ற அனைத்து உயிர்களாயும் நிற்பான். அவனின் வேறுபடாநிற்கின்ற சத்தி, ஆக்கல் அழித்தல்களைச் செய்யும் கடவுளரிடத்துப் பொருந்தி அவர்கள் வழியாக அத்தொழில்களை நிகழ்த்துவாள்.

குறிப்புரை :

அளத்தல் - இங்கு உள்ளடக்கல். `அளந்தவன்` என்பது பாடமாயின், அதன்பின், `ஆதலான்` என்பது வருவிக்க. சிவனது பெருமையையும், ஏனையோரது சிறுமையையும் உணர்த்தற்குக் கடலும் உயிருமாய் நிற்றலைச் சிவன் மேல் வைத்தும், பிற கடவுளராய் நிற்றலைச்சத்திமேல் வைத்தும் கூறினார். ``அந்தம்`` என்பதும் ஆகுபெயராய் `அந்தத்தின் கண் தெய்வம்` எனப் பொருள் தந்தது.
இதனால், சிவநெறி முதல்வராகிய சிவனும், சத்தியுமே அனைத்துச் சமய முதல்வராயும் நின்று அருள் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரன்நெறி
ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மை கண்டேனே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் ஆய்ந்து அறிபவர்களாகிய தேவர்கள், வித்தியாதரர் முதலியோர் ஆய்ந்து அறிய இயலாதவாறு உள்ள சிவனது நெறியை, நான் ஆய்ந்தறிந்தேன். அதன்பின் அச் சிவனது திருவடிகளை வழிபடும் முறைமையையும் ஆய்ந்தறிந்தேன். அதனால், இம்மை அம்மை இரண்டின் இயல்புகளையும் நன்குணர்ந்தேன்.

குறிப்புரை :

ஆய்ந்து அறிதலாவது ஆய்தலைச் செய்து, உண்மையை உணர்தல். பிற பொருள்களின் உண்மையை உணர் வோர்க்கும் முன்னைத் தவம் இல்வழி, `சிவநெறியே நெறி` என்பது உணர்தல் கூடாமையை முதல் இரண்டடிகளிலும், முன்னைத் தவம் உடையார்க்கு அஃது எளிதில் கூடுதலை மூன்றாம் அடியில், உள்ள ``ஆய்ந்தறிந்தேன்`` என்பதிலும், `சிவநெறியே நெறி` என உணர்ந் தார்க்கும் அதிற் சொல்லப்படும் சாதனமும், பயனும் வாய்த்தல் அரிதாதலை ஏனைப் பகுதியிலும் கூறினார்.
இதனால், சிவநெறியைச் சார்தல் சார்ந்து பயன்கொள்ளுதல் இவற்றது அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அறியஒண் ணாத உடம்பின் பயனை
அறியஒண் ணாத அறுவகை ஆக்கி
அறியஒண் ணாத அறுவகைக் கோசத்
தறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே.

பொழிப்புரை :

அறிதற்கு அரிதாகிய மானுட உடம்பின் பயனை அறிதற்குத் தடையாக ஆறுசமயங்களைப் படைத்து, அறிதற்கு அரிய ஆறு ஆதாரங்களை உடைய உடம்பாகிய பிண்டத்தில், அறிதற்கு அரிதாகிய ஓர் அண்டம் பொருந்தியுள்ளது.

குறிப்புரை :

`அதனை அறிந்தால் மானுட உடம்பின் பயனைப் பெற்றுவிடலாம்` என்பது குறிப்பெச்சம். ``அரிய ஒண்ணாத` எனவந்த நான்கினுள் இரண்டாவ தொழித்து, ஏனையவற்றில் ஒண்ணாமை, அருமை குறித்து நின்றது. ``அறிய ஒண்ணாததோர் அண்டம், ஆக்கிக் கோசத்துப் பதிந்தது`` எனக் கூட்டி முடிக்க. ``உடம்பு`` என்றது சிறப்புப் பற்றி மக்கள் உடம்பைக் குறித்தது. அதன் பயன், வீடு பெறுதல். பொதுப்பட ``அறுவகை`` என்றதனால், பிறசமயங்கள் யாவற்றையும் கொள்க. அவைபடிகளே யாயினும் தாம் தாமே மெய்யெனக் காட்டி நிற்றல் பற்றி அவற்றைத் தடையாகக் கூறினார். `அவற்றை ஆக்கியது படிகளாய் உதவுதற்பொருட்டு` என்பது மேல் பலவிடத்தும் கூறப்பட்டது. ஓர் அண்டம்`` என்றது, `பர வெளி` என்றவாறு. அது `சத்தி` என்பதையும் அதனையே தனக்குக் குணமாக உடையது சிவம் என்பதையும் நினைக்க. ``அறு வகையை உடைய கோசத்துப் பதிந்தது`` என்றதனால், அதனை யோக சாதனையால் அறிதல் கூடுவது பெறப்பட்டது.
இதனால், `சிவநெறியை அடைந்து சிவயோக ஞானங்களால் சிவனைத் தலைப்படுதலே மக்கட் பிறப்பின் பயன்` என முடித்துக் கூறப்பட்டது.
முன்னைத் தந்திரத்தில் சமயங்கள் பலவற்றையும் ஒருங்கு வைத்து அவற்றது நிலைகளை உணர்த்துமுகத்தால் சிவநெறியது சிறப்பினை உணர்த்திய நாயனார், இதன்கண் அந்நெறியில் நிற்றற்குரியாரது நிலைகளை உணர்த்துகின்றார்.
ஐந்தாம் தந்திரம் முற்றிற்று.

முதல் தந்திரம் - 9. கொல்லாமை

முதல் தந்திரம் - 9. கொல்லாமை பண் : பாடல் எண் :  1 பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்றார் ...