91. பேசா அனுபூதி
ஓங்கு உணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பு ஒடுங்கத்
தூங்குவர்; மற்று ஏதுண்டு சொல்.
பொருள் : சீவன் முத்தராகிய ஞானிகள் தமது உணர்வில் மேம்பட்டு விளங்குகின்ற சிவனது ஞானமாகிய திருவருளின் உள்ளே அடங்கி நிற்பர். அங்ஙனம் அடங்கி நிற்றலால் விளைகின்ற பேரின்பம் அவர் அறிவினிடத்தே ததும்பி நிறைந்து நிற்கும். அவ்வின்பத்தையே நுகர்ந்து திளைத்து வேறொன்றையும் அறியாதிருப்பர். அந்நிலையில் அவரிடத்தில் சொல் ஏதும் எழாது. பேச்சற்ற மோனநிலை அது.
சொற்பொருள் :
(அணைந்தோர் ஆகிய ஞானிகள்)
ஓங்கு - தமது உணர்வில் மேம்பட்டு விளங்குகின்ற
உணர்வின் - சிவனது ஞானமாகிய திருவருளின்
உள்ளடங்கி - உள்ளே அடங்கி
இன்பு - அதனால் விளைகின்ற பேரின்பம்
உள்ளத்துள் ஒடுங்க - தமது அறிவினிடத்தே ததும்பி நிற்க
தூங்குவர் - அவ்வின்பத்தை நுகர்ந்து திளைத்திருப்பர்; அது தவிர வேறொன்றை அறியார்.
சொல் மற்று ஏது உண்டு - அந்நிலையில் சொல் ஏதும் உண்டாகுமோ?
விளக்கம் :
சிவஞானத்துள் அடங்கி நிற்றல் :
சீவன் முத்தர்க்கு உடம்பு <உள்ள வரையில், முன்னே நீங்கிய மலம் மாயை கன்மங்கள் அவரிடத்து வாசனையாய் நுழைந்து அவர் உணர்வைத் தாக்குதல் கூடும். மும்மலங்களுள் கன்ம மலமே முன்னர்த் தலையெடுக்கும். ஏனெனில் அதுவே உடம்பு இருப்பதற்குக் காரணமாய் உடம்போடு ஒட்டியிருப்பது. இங்குக் கன்மம் என்பது பிராரத்த கன்மமே. அதுவே இன்பதுன்பங்களைப் பயப்பதாய் முன்னர்த் தோன்றி அவரது உணர்வைத் தாக்கும். அவரது உணர்வில் விருப்பு வெறுப்புகளைத் தோற்றுவிக்கும். இவ்வாறு பிராரத்தத்தால் விருப்பு வெறுப்பு விளையுமாயின், எங்கும் சிவமாகக் காணுகிற அவர்கட்கு அக்காட்சி மறைந்து, மாயா காரியமாகிய உலகம் காட்சிப்படும். அவ்விருப்பு வெறுப்புக் காரணமாக, இன்பப் பொருள் என்றும், துன்பப் பொருள் என்றும், உறவுப் பொருள் என்றும், பகைப் பொருள் என்றும் இவ்வாறாக வேறுபடுத்தி உணரும் உணர்வை மாயாமலம் தோற்றுவிக்கும். அந்நிலையில், எல்லாம் அவனே என்னும் மெய்யுணர்வு மறைந்து, யான் எனது என்னும் தற்போத உணர்வு தலையெடுக்கும். இத்தற்போத உணர்வை ஆணவமலம் தோற்றுவிக்கும். தற்போதத்தால் நல்லதும் தீயதுமாகிய முயற்சி எழும். அம்முயற்சி பிராரத்த வினையை நுகர்தற்குத் துணையாய் நிற்கும். மேலு<ம், அம்முயற்சியில் புதுவினையாகிய ஆகாமியம் தோன்றி அடுத்த பிறப்பிற்கு வித்தாய் விடும்.
இங்ஙனம் சீவன் முத்தர் சிறிது சோர்ந்திருந்த சமயம் பார்த்து மும்மலங்களும் மேற்கூறியவாறு நுழைந்து, அவரது உணர்வைத் தாக்கி அஞ்ஞானத்தை உண்டு பண்ணும்; பரமே பார்த்திருந்த அவரை உலகைப் பார்க்குமாறு செய்யும். சீவன் முத்தர் அவற்றை எங்ஙனம் நீக்கிக் கொள்ள இயலும் என்ற வினா எழுகிறது. அதற்கு விடையாகவே ஓங்குணர்வின் உள்ளடங்கி எனக் கூறியுள்ளார் ஆசிரியர். சீவன் முத்தர் சிவ ஞானமாகிய மெய்ஞ்ஞானத்துள் அழுந்தி அங்கு நிலைத்து நின்று மும்மலங்களையும் நீக்கிக் கொள்வர் என்பது விடையாகும். அவர் சிவஞானத்தின் உள்ளே அடங்கி நிற்றலால், பிராரத்த கன்மம் இன்ப துன்பங்களாய்த் தோன்றும் பொழுது அவைகளில் விருப்பு வெறுப்புக் கொள்ளும்போதே அவை உயிர்க்கு நுகர்ச்சியாகும். அணைந்தோர் விருப்பு வெறுப்பின்றி நிற்பதால் அவ்வின்ப துன்பங்கள் அவர்க்கு நுகர்ச்சி ஆகாது உடலளவாய்க் கழியும். இதுவே கன்மமலத்தை நீக்குதலாகும். பிராரத்தத்தின் விளைவாகிய இன்ப துன்பங்களுக்குப் பற்றுக் கோடாக இருப்பவை உலகப் பொருள்கள். அப்பொருள்கள் வழியாகவே இன்ப துன்பங்கள் வந்து சேரும். சிவஞானத்துள் அடங்கி நிற்கும் அவர்க்கு இன்ப துன்பங்கள் நுகர்ச்சியாகாமையால், அவற்றிற்குப் பற்றுக் கோடாய் உள்ள பொருள்கள் அவர் தம் அறிவிற்குப் பொருளாய்த் தோன்ற மாட்டா. அங்ஙனம் அவை தோன்றாது ஒழியச் செய்தலே மாயா மலத்தை நீக்குதலாகும். பிராரத்தத்தின் விளைவாகிய இன்ப துன்பங்களுக்குப் பற்றுக் கோடாய் உள்ள பொருள்கள் தோன்றாது போகவே, அவை குறித்துச் செய்யும் முயற்சிகளில் அவர்களுக்கு யான் எனது என்னும் செருக்கு எழ மாட்டாது. சிவஞானத்துள் அடங்கி நின்று அச்செருக்கை எழாதபடி செய்தலே, ஆணவ மலத்தை நீக்குதலாகும். இங்ஙனம் சீவன் முத்தர் ஓங்குணர்வின் உள்ளடங்கி மும்மலங்களையும் களைவர் என அறியலாம்.
தூங்காமல் தூங்குதல் :
ஒளி குறைந்த கண்ணிற்குக் கண்ணாடியின் உதவி வேண்டும். கண்ணாடி அணிந்தால் அக் கண்ணிற்குப் பார்வை நிகழும்; கண்ணாடி இல்லாத பொழுது பார்வை நிகழாது. ஆணவ மலத்தால் மறைக்கப்பட்ட நம்முடைய அறிவு ஒளி குறைந்த கண் போன்றது. நமக்குக் கிடைத்த மனம் முதலிய கருவிகள் கண்ணாடி போன்றவை. கண்ணாடியால் பார்வை நிகழ்வது போலக் கருவிகளின் உதவியால் நாம் அறிய முடிகிறது. நமக்கு நினைப்பு உண்டாகிறது. கண்ணாடி இல்லாத பொழுது பார்வை நிகழாதது போலக் கருவிகள் செயற்படாது ஒடுங்கும் போது நாம் அறிய முடிவதில்லை. நமக்கு மறப்பு உண்டாகிறது. நமது அறிவு ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டிருப்பதால் கருவிகள் செயற்படும்போது விளங்கியும், செயற்படாதபோது விளங்காம<லு<ம், இவ்வாறு நினைப்பும் மறப்புமாய் நிலைமாறிக் கொண்டேயிருக்கும். இனி, ஆணவ மலம் நீங்கி விட்டால் கருவிகளின் உதவி வேண்டாமற் போகின்றது. ஆணவ மலம் நீங்கிய அறிவு ஒளி குறையாத கண் போன்றது. ஒளி குறையாத கண்ணிற்குக் கண்ணாடி எதற்கு? அதற்குக் கண்ணாடியில்லாமலே எப்பொழுதும் பார்வை நிகழும். அதுபோல ஆணவ மலம் நீங்கப் பெற்ற அறிவு எப்பொழுதும் அறிவாயே இருக்கும். அறியாமை யாகாது. அதற்குக் கருவிகளால் ஆவதொன்றில்லை. ஞானிகளின் அறிவு இப்படிப்பட்ட அறிவு; நினைப்பும் மறப்பும் இன்றி எப்பொழுதும் ஒரே நிலையில் நிற்கின்ற அறிவு. அவர்களது அறிவில் சிவம் மறைதல் இன்றி, விளங்கியே நிற்கும். இதனால், ஞானிகள் எப்பொழுதும் சிவத்தை மறவாது உணர்ந்திருப்பர் என்பது விளங்கும். இந்நிலையைத் தூங்காத நிலை எனலாம். இனி, உலகத்தில் உறங்குவார் உலக நினைவை விடுத்து அல்லல் இன்றி இருப்பர். அதுபோல, ஞானிகளும் உலகவாதனை யின்றி ஆனந்தத்தில் தம்மை மறந்திருப்பர். அதனால் இந்நிலையைத் தூங்குகிற நிலை என்றும் சொல்லலாம்.
இவ்வாறு சிவத்தையே உணர்ந்து நிற்றலும், உலக வாதனையின்றி இருத்தலும் ஆகிய இரு நிலைகளும் சீவன் முத்தரிடத்தில் ஒருங்கே நிகழ்தலால் அவர்நிலையைத் தூங்காமல் தூங்குதல் என நூல்கள் நயம்படக் கூறும். இந்த ஞானத் தூக்கத்தை மேலும் சிறிது விளக்கலாம். உலகத்தில் நாம் எதனைத் தூக்கம் என்று சொல்லு<கிறோம்? கருவி கரணங்கள் எல்லாம் ஓடியாடி ஓய்ந்து போய்ச் சற்றே இளைப்பாறும் நிலையையே நாம் தூக்கம் என்கிறோம். இளைப்பு நீங்கினால் அவை மீண்டும் ஓடத் தொடங்கிவிடும். இக்கருவி கரணங்கள் சோர்வடையாமல் வலிமையோடு இருக்கும்போதே அவற்றின் ஓட்டத்தைத் தடுத்து மனம் அடங்கிச் செயலற்றிருப்பதே ஞானத்தூக்கம். நாம் தூங்குகிற தூக்கத்தில் கருவி கரணங்கள் ஓய்ந்து போய் நிற்கும். ஞானிகளது தூக்கத்தில் கருவி கரணங்கள் ஒழிந்து போய் நிற்கும். நம்மைப் பார்த்து ஒருவன் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நாம் சும்மா இருப்போமா? பதிலுக்குத் திட்டுவோம்; பல மடங்கு திட்டுவோம். கை நீட்டி அடிக்கவும் செய்வோம். அவன் நமக்கு அஞ்சியவனாக இருந்தால், நம் கை வலிமையானது என்று தெரிந்தால், அவன் நேரே திட்டமாட்டான். ஒருவேளை நாம் உறங்குகிற சமயம் பார்த்து நம் பக்கத்தில் வந்து நின்று ஆசைதீர நம்மைத் திட்டலாம்! அவனுக்கு அந்தத் துணிவு எப்படி ஏற்பட்டது? அவனது வசவும் திட்டும் நம் காதில் ஏறாது என்பது அவனுக்குத் தெரியும். நாம் எழுந்து சென்று அவனை அடிக்கப் போவதில்லை என்பதும் தெரியும். அதனாலேயே அவனுக்கு அந்தத் துணிவு. அந்த நேரத்தில் நமது கருவி கரணங்கள் உணராமல் இருக்கின்றன. நான் என்ற உணர்வு இல்லாமற் போகிறது.
தூங்கும் போதுதான் இப்படியிருக்கிறோம். விழித்திருக்கும் போது நம்மால் இப்படி இருக்க முடிகிறதா? விழிப்பு நிலையில் நான் என்பது இல்லாமல் இருக்க முடிகிறதா? மனம் முதலியவை ஒழிந்து நிற்க முடிகிறதா? விழித்துக் கொண்டிருக்கும் போதும் இந்நிலை வருமானால், அதுதான் உண்மையான தூக்கம்; தூங்காத தூக்கம். ஆசிரியர் உமாபதிசிவம் இந்நிலையில் நிற்பவரை உள்ளத்துள் இன்பொடுங்கத் தூங்குவர் என இங்குக் குறிப்பிட்டார். தமது சிவப்பிரகாச நூலிலும். ஓங்குணர் வகத்து அடங்கி உள்ளத்துள் இன்பு ஒடுங்க நேரே தூங்குவர் (செ.93) எனக் குறித்துள்ளமை காணலாம்.
மோன நிலை :
சீவன் முத்தர் சிவானந்தத்தை நுகர்ந்து அந்த நுகர்ச்சியில் தம்மையும் மறந்திருப்பார்கள். இன்பத்துள் ஆழ்ந்திருக்கும் அவருக்கு எந்த நினைவும் எழுவதில்லை. நினைவு எழும்போதே அதன் வழியாகச் சொல் எழுவதாகும். நினைவு அற்ற நிலையில் சொல் எப்படி எழும்? அவர்கள் மோன நிலையில் இருப்பார்கள் என்பதனை ஆசிரியர் இங்கே குறிக்கின்றார். இன்பத்தில் திளைத்திருத்தலைத் தவிர வேறொன்றை அறியாத அவர்க்குச் சொல் ஏதும் உண்டாகுமோ? என்பாராய், மற்று ஏதுண்டு சொல் என்கிறார். மோனம் என்பது அனுபவத்திற்கு அறிகுறி. இன்ப அனுபவம் தலைப்படும் போது மோனம் தலைப்படும்.
கணவன் வெளியூருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மனைவி கண் கலங்கி நின்றாள். அவன் புறப்படும்போது ஒரு வாரத்தில் உறுதியாக வந்து விடுவதாக வாக்குறுதியளித்தான். அவர் இல்லாமல் இந்த ஏழு நாட்களை எப்படிக் கழிப்பது என்று கவலைப்பட்டாள் அவள். மறக்காமல் கடிதம் போடுங்கள் என்று சொல்லி விடை கொடுத்தாள். அவன் சென்று இரண்டு நாளாயின; மூன்று நாளாயின. கடிதம் ஒன்றும் வரவில்லை. அவளுக்கு ஒவ்வொரு கணமும் ஓர் ஊழியாகத் தோன்றியது. ஒரு வாரமாகியும் அவன் ஊர் திரும்பவில்லை. அவளுக்கு அடங்காத கோபம் உண்டாயிற்று. ஆண்களே இப்படித்தான். சொன்னால் சொன்னபடி நடப்பதில்லை. கடிதம் கூடப் போட முடியாமல் அப்படி என்ன வேலை? நான் ஒருத்தி தனியாக இருக்கிறேன் என்ற கவலை துளியாவது அவருக்கு இருந்தால் இப்படிச் செய்வாரா? அவர் வந்தால் அவரைச் சும்மா விடப் போவதில்லை என்று அடுத்த வீட்டுத் தோழியிடம் சினந்து கூறினாள். நீ என்ன செய்து விடுவாய் என்று வேடிக்கையாகக் கேட்டாள் அந்தத் தோழி. என்ன பண்ணுகிறேன் என்பதை நீயே நேராகப் பார்க்கத்தான் போகிறாய் என்றாள் தலைவி. பத்து நாளுக்குப் பிறகு தலைவன் வீடு திரும்பினான் சற்றுத் தொலைவில் அவன் வரும்போதே தலைவியின் அகமும் முகமும் மலர்ந்தன. வெட்கமும் மகிழ்ச்சியும் களிப்பும் அவளைக் கவ்விக் கொண்டன. அவன் மீது கொண்டிருந்த கோபமெல்லாம் போன திசை தெரியவில்லை. இனிய முறுவலால் அவனை வரவேற்றாள். ஏதும் பேசாமல் அவனுக்குத் தேநீர் கொண்டுவர உள்ளே சென்றாள்.
பெரிய அமர்க்களம் நடக்கப் போகிறது என்று எண்ணிய அடுத்த வீட்டுத் தோழிக்குப் பெரிய ஏமாற்றம். இத்தனை நாளும் கணவனை ஏசியும், அவனது குறைகளைப் பேசியும் வந்த இவளுக்கு இப்பொழுது என்ன ஆயிற்று? கடிந்து ஒரு வார்த்தை பேசாது வாய் மூடி மவுனமாக இருக்கிறாளே, இது என்ன விந்தை! இது பற்றித் தலைவியிடமே கேட்டுவிட்டாள். தலைவி பின் வருமாறு கூறினாள். கண்ணுக்கு மையிடுகிற கோல் தந்தத்தினாலோ, தங்கத்தினாலோ, செய்ததாயிருக்கும். தூரத்தில் இருக்கும் பொழுது அது தந்தமா, தங்கமா என்பது நன்றாகத் தெரிகிறது. மை தீட்டுவதற்கு அதனைக் கண்ணருகில் கொண்டு சென்றால் அந்தக் கோல் தெரிவதில்லை. அதுபோலக் கணவன் அருகில் இல்லாதபோது அவன்மீது ஆயிரம் குறைகள் தெரிந்தன. அவன் அருகில் வந்துவிட்டால் ஒரு குறையும் புலப்படுவதில்லை. ஆம். அவள் சொன்னது உண்மைதான். தலைவன் அருகில் வந்துவிட்டால் பேச்சு அடங்கிப் போகிறது. எதுவும் சொல்லத் தோன்றுவதில்லை. இந்த உலக அனுபவத்தைக் கொண்டு இறையனுபவத்தை நாம் ஒருவாறு உணரலாம். இறைவனை அணைந்தவர்கள் அத்தலைவியைப் போல் மோன நிலையை அடைந்து விடுவார்கள். மோனம் என்றால் வாய் திறந்து பேசாமை என்று மட்டும் நினைக்கிறோம். அப்படியன்று. உண்மையில் அது, சீவன் சிவத்தில் அழுந்தித் தனது சீவ போதத்தை இழந்து நிற்கும் நிலையைக் குறிப்பதாகும். இப்பேசா அனுபூதி நிலையைப் பெற்றவரே அணைந்தோர்.
நாயோட்டு மந்திரம் :
திருவைந்தெழுத்து இறுதியில் ஓரேழுத்தேயாகி விடுவது சிவத்தை அணைந்தோர் ஆனந்தத்தில் மூழ்கி மோன நிலையைத் தலைப்படுதலைக் குறிப்பதாகும். சிகாரம் ஆகிய இந்த ஓரெழுத்து மந்திரம் நாயோட்டு மந்திரம் என நகை விளையுமாறு மறைத்துக் கூறப்படும். இது நாயை ஓட்டுவது அன்று! நாயின் தன்மையை ஓட்டுவது என்று பொருள்படும். நாயின் தன்மையாவது எப்பொழுதும் குரைப்பது. ஞானநெறியில் நில்லாது பேசும் பேச்செல்லாம் நாயின் குரைப்பைப் போன்றவை. அப்படிப்பட்ட பேச்சாகிய குரைப்பினை ஓட்டுகிற மந்திரம் இது. பேச்சை ஒழித்து மவுனத்தை உண்டாக்குவது என்ற பொருளில் இதனை நாயோட்டு மந்திரம் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக