வெள்ளி, 3 நவம்பர், 2017

50. அருட் குரு இன்றி ஞானம் வரும்!

50. அருட் குரு இன்றி ஞானம் வரும்!
ஞானம் இவன் ஒழிய நண்ணியிடும்; நற்கல் அனல்
பானு ஒழியப் படின்.

பொருள் : சூரிய காந்தக் கல்லினிடத்தில் சூரியனது ஒளி படாமலே நெருப்புத் தோன்றுதல் கூடுமாயின், ஆன்மாவினிடத்தில் அருட்குரு இல்லாமலே ஞானம் தோன்றுதல் கூடும்.
சொற்பொருள் :
நற்கல் - நல்ல சூரிய காந்தக் கல்லினிடத்தில்
பானு ஒழிய - சூரியவொளி படாமலும்
அனல் - நெருப்பு
படின் - தோன்றுதல் கூடுமாயின் (நன் மாணாக்கரிடத்தில்)
இவன் ஒழிய - ஞானகுரு இல்லாமலும்
ஞானம் - ஞானமானது
நண்ணியிடும் - வந்து பொருந்துதல் கூடும்

விளக்கம் :
ஆசிரியர் கையாளும் உத்தி :
கவிஞர்கள் <உலகில் நடக்க முடியாத செயலை நடக்கக் கூடியது போலக் காட்டி வியப்புணர்ச்சியைத் தோற்றுவித்து, முடிவில் அது நடக்க முடியாத செயலே என்பதைப் பெறவைப்பர். இவ்வுத்தியை வடமொழி நூல்களிலும் தமிழ் நூல்களிலும் காணலாம். சுவேதா சுவதர உபநிடதத்தில் இவ்வாறு அமைந்த ஒரு வாக்கியம் வருகிறது. எப்பொழுது ஆகாயத்தைத் தோல் போல் சுருட்டுதல் கூடுமோ, அப் பொழுது சிவனை உணராமல் துன்பத்திலிருந்து நீங்குதல் கூடும் என்பது அவ்வாக்கியம். இவ்வுபநிடத வாக்கியத்தை அப்படியே எடுத்துத் தமது காஞ்சிப் புராணத்தில் அமைத்துக் கொண்டார் சிவஞானமுனிவர். மானுடன் விசும்பைத் தோல் போல் சுருட்டுதல் வல்லோனாயின் ஈனமில் சிவனைக் காணாது இடும்பை தீர் வீடும் எய்தும் என்பது காஞ்சிப்புராணப் பகுதி. சிவபெருமானை உணராமலே ஒருவர் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடலாம் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அஃது எப்படி முடியும்? இஃது எக்காலத்திலும் நடக்க முடியாத செயலல்லவா? ஆயின், நடக்கும் என்று கூறப்பட்டுள்ளதே. இது என்ன வியப்பு! அந்த வாக்கியத்தின் ஒரு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு இவ்வாறு வியப்படைகிறோம். முழுமையாக நோக்கினால்தான் உண்மை விளங்கும். ஆகாயத்தை எங்காவது சுருட்டி வைக்க முடியுமா? அஃது எவராலும் செய்யக் கூடிய செயலில்லை. எனவே ஆகாயத்தைச் சுருட்டி வைப்பது முடியுமானால் சிவனை உணராமலே துன்பத்திலிருந்து விடுபடுதலும் முடியும் என்பதன் கருத்து சிவபெருமானை உணராமல் யாரும் பிறவித் துன்பத்திலிருந்து நீங்க முடியாது என்பதேயாகும். இந்த முறையிலேதான் நமது ஆசிரியர் உமாபதி சிவமும் கூறுகிறார்.
இதுவரையில் அருளாசிரியன் இல்லாமல் ஞானம் பெறுதல் இயலாது என்பதை வலியுறுத்தி வந்த ஆசிரியர் இங்கு அருளாசான் இன்றியும் ஞானம் கிடைத்துவிடும் என்று கூறிப் படிப்பவர்க்கு வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தி விடுகிறார். என்ன இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாரே என்று எண்ணத் தோன்றும். ஆனால் செய்யுளின் பிற்பகுதியில் கூறியுள்ளதையும் சேர்த்து வைத்துப் பார்க்கும்போதுதான் அவர் கூறியதில் எந்த மாறுபாடும் இல்லை என்பது தெளிவாகும். சூரிய காந்தக் கல்லிடத்தில் சூரியன் இல்லாமலே நெருப்புத் தோன்ற முடியுமோ? அஃது எக்காலத்திலும் நடக்க முடியாத செயல். அப்படி நடக்குமானால் ஆன்மாவிடத்தில் அருட்குரு இல்லாமலே ஞானம் தோன்றும் என்கிறார் ஆசிரியர். அதன் கருத்து, அருட்குருவையின்றி ஞானம் நிகழாது என்பதேயாகும்.
அருட்குருவினால் பாசங்கள் அகலுதல் :
உயிர் சூரியகாந்தக் கல் போன்றது. உயிரை மறைத்துள்ள பாசத்தை சூரிய காந்தக் கல்லை மூடியுள்ள பஞ்சுபோலக் கொள்ளலாம். சூரிய காந்தக் கல் தனியே இருக்கும் பொழுது தன்னை மூடியுள்ள பஞ்சினைச் சுட மாட்டாது. அதுபோல ஆன்மா தனியே நின்று தன்னைப் பிணித்துள்ள பாசத்தை நீக்கிக் கொள்ள மாட்டாது. அச்சூரிய காந்தக் கல் சூரியன் வந்த பொழுது அதன் ஒளிக் கதிரைப் பெற்றுத் தன்னை மூடியுள்ள பஞ்சினைச் சுட்டெரிக்கும். அது போலச் சிவன் ஞானாசிரியனாய் வந்த பொழுது ஆன்மா அக்குருவின் அருளைப் பெற்றுத் தன்னைப் பிணித்துள்ள மலங்களை அகன்றொழியச் செய்யும். இக்கருத்து செய்யுளில் கூறப்படவில்லை யாயினும் ஒரு பொருத்தம் கருதி வருவித்து உரைக்கப்பட்டது.
ஆறாம் அதிகாரம்
அறியும் நெறி
அருள் உருவாகிய ஞானாசிரியர் நிலை பற்றி முந்திய அதிகாரத்தில் அறிந்தோம். அவரே பக்குவ ஆன்மாவுக்கு உய்யும் வழியைக் காட்டவல்லவர். முப்பொருள்களின் இயல்பையும் உள்ளவாறு உணரும்படி உணர்த்தி ஆன்மாவைக் கட்டினின்றும் விடுவித்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானிடத்து அன்பை உண்டாக்கி, அவனது திருவடியைப் பற்றிக் கொள்ளுமாறு செய்பவர்.
பயன் மூன்று :
ஞானாசிரியரால் ஆன்மா எய்தும் பயன் மூன்றாகும். அவை பாசநீக்கம், அருள் விளக்கம், இன்பப்பேறு என்பன. ஆசிரியர் தமது <உபதேசத்தால், இவ்வுலகில் ஈட்டப்படும் செல்வமும், யாக்கையும் அவற்றின் மேல் செய்யும் பற்றும் ஆகிய யாவும் பொய் எனவும், முதல்வனது திருவருள் ஒன்றுமே மெய் எனவும் காட்டுவார். அவரது அருளுரையைக் கேட்ட காலத்தில் மாணவர் உள்ளத்தில் அருள் தோற்றம் சிறிது உண்டாகும். மருள் சிறிது நீங்கும். பின்னர் அவரது அருளுரையைச் சிந்தித்துத் தெளிந்த காலத்தில் ஆன்ம அறிவில் அருள் விளக்கம் மேலிடும். அவ்வாறு அருள் மிக்கு விளங்கியபோது மருள் முற்றும் நீங்கும். இதுவே பாச நீக்கமும் அருள் விளக்கமும் ஆகும். பின் அருள் ஒளியால் சிவத்தை உணர்ந்து அதில் அழுந்தும் நிலை உண்டாகும். இதுவே இன்பப் பேறு ஆகும்.
ஞானச் செய்திகள் மூன்று :
இந்த ஞானச் செய்திகளை மூன்று நிலைகளாக வகுத்துக் காட்டுகிறார் ஆசிரியர் <உமாபதிசிவம். இதனை அவரது சிவப்பிரகாச நூலிற் காணலாம். அம்மூன்று நிலைகளாவன ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, ஆன்ம லாபம் என்பன. இவ்வுடம்பின் தன்மை எனக்கு உரியதன்று எனத் தன்னை உடம்பின் வேறாகக் காணுதல் ஆன்ம தரிசனம் ஆகும். உயிர் பதிஞானமாகிய திருவருளைப் பற்றும் காலத்தில் இந்த ஆன்ம தரிசனம் நிகழும். பின் திருவருள் ஒளியை முற்றப் பெற்று மல இருளாகிய மாசு நீங்கி விளக்கம் பெறுவது ஆன்ம சுத்தி ஆகும். என்செயலென ஒன்றில்லை எனத் தன்பணியை நீத்து அனைத்தையும் திருவருட் செயலாகக் காணும் காலத்தில் இந்த ஆன்ம சுத்தி நிகழும். உயிர் வற்றாத சிவானந்தப் பெருங்கடலில் திளைப்பது ஆன்ம லாபம் ஆகும். உயிர் திருவருள் வழியாகச் சிவத்தை அறிந்து அதில் அழுந்துங் காலத்தில் இந்த ஆன்ம லாபம் நிகழும்.
சிவப்பிரகாச நூலில் இம் மூன்றினையும் செறிவாகக் கூறிச் சென்ற ஆசிரியர் அவற்றையே மாணவர்க்கு ஏற்ற முறையில் எளிமைப்படுத்தியும், விரிவுபடுத்தியும், தனித்தனி அதிகாரமாக அமைத்துத் திருவருட்பயனில் கூறியுள்ளார். ஆன்ம தரிசனம் கூறுவது அறியும் நெறி என்னும் அதிகாரமாகும். ஆன்ம சுத்தியைக் கூறுவது உயிர் விளக்கம் என்னும் அதிகாரமாகும். ஆன்ம லாபம் கூறுவது இன்புறு நிலை என்னும் அதிகாரமாகும்.
கேட்டல் :
பக்குவம் வாய்ந்த உத்தமனாகிய மாணாக்கனுக்கு ஞானாசிரியர் பின்வருமாறு உணர்த்துவார். நீ உனது உடம்பு, ஐம்பொறிகள் முதலிய கருவிக் கூட்டத்தில் அகப்பட்டு அவற்றோடு வேற்றுமையின்றி அவையே நான் என மயங்கி நின்றாய். அவற்றிற்கே தோற்றமுண்டு; வளர்ச்சியுண்டு; அழிவுண்டு. பசி, தாகம், நோய் முதலியன வெல்லாம் அவற்றிற்கே உரியன. உயிராகிய <உனக்கு இவையெல்லாம் உண்மையில் இல்லையாகவும், நீ அக் கருவிகளோடு ஒற்றுமைப்பட்டு நின்றமையால் அவற்றிற்கு உரிய அத்தன்மைகளை உன்னுடையனவாகக் கருதி நின்றாய். நான் பிறந்தேன். நான் வளர்ந்தேன். நான் மெலிந்தேன். நான் பசித்தேன். நான் நோயுற்றேன் என்றெல்லாம் கருதுவது அறியாமையாகும். நீயோ சித்துப் பொருள். உனக்குத் தோற்றமேது! அழிவேது? சடமாகிய <உடம்பு முதலியவற்றிற்கே இம் மாற்றங்கள் உண்டு. உனக்கு யாதொரு மாற்றமும் இல்லை. சித்தாகிய நீ சித்தாகிய சிவத்தைச் சேர்வதே இயற்கை. எனவே உன் இனம் அல்லாத, சடப்பொருள் ஆகிய கருவிக் கூட்டங்களின் தொடர்பை விட்டொழிப்பாயாக. சிவத்தைச் சார்ந்து சிவத்தின் தன்மைகளை உன்னுடையனவாகப் பெற்று, வரம்பிலா இன்பத்தில் என்றும் ஒரு நிலையாய் இருப்பாயாக என்று உபதேசிப்பார்.
மேற்கூறிய <உபதேசத்தைக் கேட்ட மாணவர் மிகு சத்தி நிபாதம் உடையவராயிருப்பின் அப்பொழுதே தன்னைக் கருவிகளின் வேறாகக் கண்டு, ஆன்ம தரிசனமும், ஆன்ம சுத்தியும் விரைவாக நிகழப் பெற்று, வேறு எவற்றிலும் பற்றில்லாதவராய், சிவபெருமானது திருவடி ஒன்றையே பற்றிக்கொண்டு ஆன்ம லாபம் ஆகிய பேரின்பத்தைப் பெறுவர். அதிதீவிர நிலையில் உள்ள இவர்களுக்குக் கேட்டபொழுதே பாச நீக்கமும் சிவப்பேறும் உண்டாகி விடும். ஏனையோர்க்கு இந்நிலை உடனே வாய்ப்பதில்லை. அவர்கள் கேட்டலின் பின்னர் சிந்தித்தல், தெளிதல் என்றபடி நிலைகளில் சில காலம் நின்று முடிவில் சிவத்தைப் பெறுவர். அவர்களை நோக்கியே அறியும் நெறி முதலாக இனிவரும் அதிகாரங்களை அமைத்தார் ஆசிரியர் <உமாபதிசிவம்.
சிந்தித்தல் :
அறியும் நெறியாவது, ஞானாசிரியர் அறிவுறுத்திய அருள் மொழியின் பொருளைச் சிந்தித்து உணரும் முறையாகும். ஆசிரியரின் உபதேசத்தைப் பெற்று நான் யார்? என்பதைச் சிந்திக்கின்ற போது இந்த உடம்பு நானல்ல, ஐம்பொறிகள் நான் அல்ல. நாடி நரம்புகள் நானல்ல என இவ்வாறு கருவிகளை ஒவ்வொன்றாகக் கழித்துக் கொண்டு செல்லும் நிலை உண்டாகும். இவற்றுள் ஒரு பொருளையும் நான் எனக் கொள்ளுதல் கூடாமையால் உண்மையில் நான் யார் என்பதை அறியும் வேட்கை மேலும் எழும். இந்நிலையில், நான் யார்? என்னும் இந்த ஆராய்ச்சி அறிவு நமக்கு எப்படி உண்டாயிற்று? என்ற சிந்தனை வரும். இந்த ஆராய்ச்சியுணர்வு உடம்பின் அகத்தும் புறத்தும் உள்ள கருவிகளால் உண்டாகியிருத்தல் இயலாது. ஏனெனில், அக் கருவிகள் எல்லாம் புறப் பொருள்களைப் பற்றிய உணர்வைத் தருமேயன்றி மெய்யுணர்வைத் தரமாட்டா. அவ்வாறாக, நான் யார் என்ற ஆராய்ச்சியுணர்வும், நான் இந்த உடம்பு முதலிய பொருள்களுள் எதுவும் அல்ல என்னும் துணிவுணர்வும் நமக்கு உண்டானது எவ்வாறு என்று ஆழ்ந்து நோக்கினால், நம்முடைய அறிவுக்கு அறிவாய் உள்நின்று அறிவிக்கும் பொருளே இந்த ஆராய்ச்சி யறிவைத் தந்தது என்பது புலனாகும். அவ்வாறு உள்நின்று அறிவித்தது பதியினது ஞானமாகிய திருவருளேயாகும். இங்ஙனம் சிந்திக்கும் முறையில் உயிர்தன் உள்ளதாகத் திருவருளை உணர்ந்து பற்றும். ஆசிரியர் உரைத்த அறிவுரையின்படி, தற்போதமும் உலகப் பற்றும் இன்றி நிற்பின், உயிர் உணர்வில் அத்திருவருள் விளங்கி நிற்கும். மாணவனாகிய ஆன்மா திருவருளைப் பற்றும் நிலையையும், ஆசிரியர் அவனுக்கு அறிவுறுத்தும் பொருளையும் அறியும் நெறியாகிய இவ்வதிகாரத்தில் நாம் காணலாம்.
அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளவை: இனி, இவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை நோக்குவோம். அருளாசிரியர் தம்மை அணுகி வரும் மாணாக்கர் பலராக இருப்பினும் அவருள் தகுதி வாய்ந்தவர்க்கே உண்மையை உபதேசிப்பார். தகுதியாவது, உயிரின் கண் இருவினையொப்பு மலபரிபாகம், சத்தி நிபாதம் என்னும் இவை நிகழப் பெறுதல். மல பரிபாகம் என்பது ஆணவ மலம் தேய்ந்து நீங்கும் நிலைமையை அடைதலாகும். மலத் தேய்வினால் உயிருக்கு உலக நாட்டம் நீங்கும். மல பரிபாகத்தின் அறிகுறியே இரு வினையொப்பு. இருவினை ஒப்பாவது நல்வினை தீவினைகளின் பயனாய்த் தனக்கு வருகின்ற இன்ப துன்பங்களை ஒப்பாக எண்ணி இரண்டிலும் விருப்பு வெறுப்பு அற்று இருத்தல். சத்தி நிபாதம் என்பது இறைவனது மறைத்தற் சத்தி அருளாக மாறி உயிருணர்வில் பதிதல். இப்பக்குவம் வரப்பெற்றவரே பிறவி துன்பத்தைத் தருவது என்பதை உணர்ந்து, அதற்கு அஞ்சி, வீடு பேற்றை அவாவி நிற்பர். அவருக்கே அருட் குரவர் ஞானத்தை உணர்த்துவார். அவருக்கே குருவினது உபதேசம் பயன் தருவதாகும். குருமுகமாக மாணவர் முதலில் அறிய வேண்டுவது பொருள்களின் எண்ணிக்கை, அவற்றின் இயல்பு, அவற்றுக்கிடையே உள்ள தொடர்பு முதலியனவாகும். அம்முறையில், கடவுள், உயிர்கள் ஆணவம், கன்மம், சுத்தமாயை, அசுத்தமாயை என்னும் ஆறும் என்றும் உள்ள பொருள்கள் என்பதை அறிதல் வேண்டும். பின் இவை ஆறும் செய்வினை, செய்பவன், செய்வினையின் பயன், சேர்ப்பவன் என நான்காகத் தம் முள் தொடர்புற்று நிற்கு முறையையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். இதற்குமேல் அறிய வேண்டுவது தனக்கும் திருவருளுக்கும் உள்ள தொடர்பாகும். திருவருள் உயிரிடத்து எப்போதும் பிரிப்பின்றி உடனாய் உள்ளது. உடம்பு வாழ்வதற்கு உயிர் வேண்டும். அதுபோல உயிரின் அறிவு, செயல்களுக்குத் திருவருளினது துணை எப்பொழுதும் வேண்டும்.
உயிர் பளிங்கு போன்றது. பளிங்கு தன்னருகில் உள்ள பொருள்களின் நிறங்களைப் பற்றி நிற்றலும் உண்டு. அவற்றைப் பற்றாமல் தன் ஒளியே விளங்கி நிற்றலும் உண்டு. பிற நிறங்களைப் பற்றி நிற்றல் பளிங்கிற்குப் பொதுவியல்பு. தன் ஒளியே விளங்கி நிற்றல் அதற்கு உண்மையியல்பு. இவ்விரண்டு இயல்பையும் பளிங்கிற்குத் தருவது சூரிய வொளியே யாகும். உயிருக்கும் பொது வியல்பு, உண்மையியல்பு என இரண்டு இயல்புகள் உண்டு. ஐம்பொறிகள், மனம் முதலிய கருவிக் கூட்டங்களைச் சார்ந்து அவையேயாய் நிற்பது பொது வியல்பு. கருவிகளைத் தனக்கு வேறாகக் கண்டு அவற்றின் நீங்கி வியாபகமாய் நிற்றல் உண்மையியல்பு. கட்டு நிலையில் விளங்குவது பொதுவியல்பு. முத்தி நிலையில் விளங்குவது உண்மையியல்பு. கட்டு நிலையில் சிற்றறிவும், முத்திநிலையில் வியாபக அறிவும் உண்டாகும். இவ்விரண்டு நிலைகளையும் தருவது திருவருளேயாகும். உயிரிடத்தில் பொது, உண்மை என்ற இவ்விரண்டு இயல்புகளையும் விளங்கச் செய்வது திருவருளே யாகும். ஞானாசிரியர் மாணவனுக்கு இவ்வாறு திருவருள் உண்மையை உணர்த்துவார். அதனைக் கேட்ட காலத்தில் திருவருளைப் பற்றிய உணர்வு ஆன்மாவிடத்தில் பொதுவாக நிகழும். பின்னர் அதனைச் சிந்திக்கின்ற போது திருவருளைப் பற்றிய உணர்வு ஐயமாக நிகழும். ஐயவுணர்வு என்பது, உலகியலை விடமுடியாத நிலையாகவும், திருவருளை உறுதியாகப் பற்ற மாட்டாத நிலையாகவும் இருக்கும். கயிறு முற்றிலு<ம் அறாமல், அறுந்து விழும் நிலையில் உள்ள ஊசற்பலகையை இங்கு ஒப்பிடலாம். அப்பலகையின் நிலை எப்படியிருக்கும்? அது கயிற்றிலும் உறுதியாக நில்லாது; தரையிலும் விழாது. அது போலத் திருவருளையும் சாராமல், <உலகியலிலும் நில்லாமல் அங்கும் இங்குமாய் அலமரும் நிலையே இந்த இடைப்பட்ட ஐயநிலை எனலாம். எல்லாம் திருவருட் செயல் என்பதை உணர்ந்தாலும் என் செயல் என்ற உணர்வை விட இயலாது நான் என்று எழும் தற்போதத்தை நீக்கிக் கொள்ள இயலாது. இந்நிலையில் அருட்குரவர் உடனிருந்து மாணவனைத் தெளிவிப்பார். ஐம்பொறிகளின் செயல் எப்படி உன் செயல் ஆகின்றதோ, அப்படியே உன் செயல் யாவும் திருவருட் செயலேயாகும் என்று காட்டுவார். கருவிகளால் வருவதாகிய பாச ஞானத்தை விடுத்துத் திருவருள் ஞானத்தையே உனது ஞானமாகக் கொண்டு காண்பாயாக எனவும், அந்த அருள் ஞானமே கண்ணாக முதற்பொருளைக் கண்டு அதில் அழுந்தி விடுவாயாக எனவும் அறிவுறுத்துவார். மேற்கூறிய பொருள் நிலையைக் கருத்திற் கொண்டு இனி அதிகாரத்துட் புகுவோம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...