புதன், 8 நவம்பர், 2017

34.காயக்கப்பல்



 வெறும் கட்டாந்தரையிலே நின்றிருக்கும் கப்பலால் ஏதும் பயனுண்டா? 
அஃது நீரில் இறங்கி மிதந்தால் அல்லவோ அதனுள் பயணம் செய்யும் பயன் 
கிடைக்கும்.

பஞ்சபூதப் பலகையைக் கப்பலாய்ச் சேர்ந்து கொடிக் கம்பத்தில் பாய்மரம் 
கட்டி  நெஞ்சு,  மனம்,  புத்தி,  ஆங்காரச்  சித்தம்  இவைகளைக் கயிறாகச் 
சேர்த்து,   ஐந்தெழுத்தை   ‘சிவாயநம’  பாயாக  விரித்து  ஐம்புலன்களைச் 
சுக்கானாகக்  கொண்டு  இந்த உடலாகிய  அகண்ட ரதம் போகுதடா பயலே! 
இதை  நீர்  கருணைக்கடலிலே தள்ளு;  பரிபூரணம் எனும் சுக்கானால் வலி; 
திக்கு திசையெங்கும் களைப்புத் தெரியாமல் திருமந்திரம் சொல்லித் தள்ளு.

தந்தை, தாய், சுற்றம் முதலான  சகலமும் துறந்து, பந்த பாசம் மறந்து, 
பதினாறு லோகமும் மறந்து,  இந்தியர்கள்  இரட்சித்த கப்பலிலே  ஏகாந்தக் 
கடலிலே அந்திரமான அருளானந்த வெள்ளத்திலே காயக்கப்பலைத் தள்ளிப் 
பயணம் செய்து இறைவனைச்  சந்திப்பாயாக  என்று  ‘காயக்கப்பல்’ பாடல் 
தெரிவிக்கின்றது.

சித்தர்  பாடல்  தொகுப்பிலே  காணப்படும்  இந்த  அபூர்வ  பாடல் 
தொகுப்பு  யார் பாடியது என்பது தெரியவில்லை. ஒருசில நூல்கள் இதனைத் 
திருவள்ளுவ  நாயனார்  இயற்றியது   என்று  யூகமாகக்  கூறினாலும்  இது 
பிற்காலத்துச்  சித்தர்  பாடல்  என்பது  இதன்  சொற்பொருள்,  நடையைக் 
கூர்ந்து நோக்கின் புலனாகும்.

சித்தர்   பெயர்   தெரியாவிடினும்   சித்தர்   பாடல்   காயதத்துவம் 
உணர்த்துகின்றது.

 ஏலேலோ ஏகரதம் சர்வரதம்
பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ.

பஞ்சபூதப் பலகை கப்பலாய்ச் சேர்த்து
பாங்கான ஓங்குமரம் பாய்மரம் கட்டி
நெஞ்சு மனம்புத்தி ஆங்காரஞ்சித்தம்
மானாபிமானங் கயிறாகச் சேர்த்து

ஐந்தெழத்தைக் கட்டி சாக்காகயேற்றி
ஐம்புலன் தன்னிலே சுக்கானிருத்தி
நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி
சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து

தஞ்சலான வெள்ளத்தில் தானே அகண்டரதம் போகுதடா
                                   ஏலேலோ ஏலேலோ.
களவையுங் கேள்வையுந் தள்ளுடா தள்ளு-
கருணைக்கடலிலே தள்ளுடா கப்பல்

நிற்குணந்தன்னிலே தள்ளுடா தள்ளு-
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல்
மூக்கணைமுன்றையுந் தள்ளுடா தள்ளு-
முப்பாழுக்கப்பாலே தள்ளுடா கப்பல்

திக்குதிசையெங்கும் தள்ளுடா தள்ளு
திருமந்திரஞ் சொல்லி தள்ளுடா கப்பல்
பக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளு-
பரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ (ஏலேலோ)

தந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்து-
தாரம் சகோதரம் தானதும் மறந்து-
பந்தமும் நேசமும் பாசமும் மறந்து
பதினாலு லோகமும் தனையும் மறந்து-

இந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறி-
ஏகாந்தமான தொரு கடலிலே தள்ளி
அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில்-
அழுந்து தையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...